இலங்கை ஜனாதிபதி தேர்தல்: வடக்கு, கிழக்கு மக்களின் பெருமளவு ஆதரவைப் பெற்ற சஜித்

இலங்கையின் 8வது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் சமூகம் ஒரு தரப்பிற்கும், பெரும்பான்மை சிங்கள சமூகம் ஒரு தரப்பிற்கும் ஆதரவு வழங்கியுள்ளமையை காண முடிகின்றது.

இலங்கை வாழ் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு வழங்கியுள்ள அதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பெரும்பான்மை சிங்கள மக்கள் பெருமளவிலான வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ மீது தமிழ் தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த போதிலும், வட மாகாணம் உள்ளிட்ட தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளிலுள்ள தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இந்த முறை வாக்களித்துள்ளதை காண முடிகின்றது.

இலங்கையில் 30 வருட காலம் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் வன்னி நிலப்பரப்பிலேயே கோட்டாபய ராஜபக்ஷவின் ஆதரவுடன் இறுதியில் முடிவடைந்திருந்தது.

2009ல் முடிவுக்கு வந்த இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தத்தின்போது பெருமளவில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவர் என்று தமிழர் தரப்பால் பரவலான குற்றச்சாட்டுக்கு ஆளானவர் கோட்டாபய. இறுதிப் போர் நடந்தபோது பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் அவர். எனவே, அவருக்கு வாக்களிப்பதற்கு எதிராக தமிழர் தரப்பில் பரவலான எதிர்ப்புணர்வு நிலவியது. இந்த நிலையில், தமிழர்கள் சஜித் பிரேமதாஸவிற்கு அதிகளவிலான வாக்குகளை அளித்துள்ளனர்.

வன்னி தேர்தல் மாவட்டம்

சஜித் பிரேமதாஸ - 1,74,739

கோட்டாபய ராஜபக்ஷ - 26,105

ஆரியவங்ச திஸாநாயக்க - 2,546

எம்.கே.சிவாஜிலிங்கம் - 1,295

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம்

சஜித் பிரேமதாஸ - 3,12,722

கோட்டாபய ராஜபக்ஷ - 23,261

எம்.கே.சிவாஜிலிங்கம் - 6,845

ஆரியவங்ச திஸாநாயக்க - 6,790

வட மாகாண தமிழர்களினால் முழுமையாக புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படும் கோட்டாபய ராஜபக்ஷ வட மாகாணத்தில் மாத்திரம் 49,366 வாக்குகளை பெற்றுள்ளார்.

வட மாகாணத்தில் பதிவான முழு வாக்குகளில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மாத்திரம் 18.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளமை விசேட அம்சமாகும்.

கிழக்கு மாகாணம்

கிழக்கு மாகாணத்திலும் சஜித் பிரேமதாஸவிற்கு அதிகளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் நாட்டில் முஸ்லிம் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்த நிலையிலேயே இந்த தேர்தல் நேற்றைய தினம் நடைபெற்றது.

குறிப்பாக இலங்கையில் முஸ்லிம்கள் அதிகளவில் செறிந்து வாழும் பகுதியாக கிழக்கு மாகாணம் திகழ்கின்றது.

இந்த தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு யாருக்கு என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்திருந்த நிலையில், கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தமது வாக்குகளை பெரும்பாலும் சஜித் பிரேமதாஸவிற்கே அளித்துள்ளதை காண முடிகிறது.

திரிகோணமலை

சஜித் பிரேமதாஸ - 1,66,841

கோட்டாபய ராஜபக்ஷ - 54,135

மட்டக்களப்பு

சஜித் பிரேமதாஸ - 2,38,649

கோட்டாபய ராஜபக்ஷ - 38,460

திகாமடுல்ல (அம்பாறை)

சஜித் பிரேமதாஸ - 2,59,673

கோட்டாபய ராஜபக்ஷ - 1,35,058

கிழக்கு மாகாண தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும் சஜித் பிரேமதாஸவிற்கே தமது வாக்குகளை அதிகளவில் பதிவு செய்துள்ளனர்.

எனினும், கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்திருந்த முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள், அவருக்கு குறிப்பிடத்தக்களவு வாக்குகளை வழங்கியுள்ளமையை காணக்கூடியதாக இருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :