சபரிமலை கோயிலுக்கு வந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் - விரிவான தகவல்கள்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சாமி தரிசனத்துக்காக சென்ற 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பம்பைவில் தடுத்து நிறுத்தப்பட்ட அவர்கள், ஆந்திராவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி 60க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மாற்ற உத்தரவு, தடை இல்லை

இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. அதேசமயம் கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு அவர்கள் எந்த தடையும் விதிக்கவில்லை.

இந்த நிலையில் 41 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் மண்டல பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது.

தரிசனத்திற்காக ஆன்லைன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் முன்பதிவு செய்து உள்ளனர்.

பெண்ணிய செயற்பாட்டளரான திருப்தி தேசாயும் சபரிமலை வர உள்ளதாக அறிவித்து இருந்தார்.

கேரள அரசு

இந்த சூழ்நிலையில் சபரிமலைக்கு வரும் இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்விக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் உள்ள குழப்பங்கள் பற்றி அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்திய பிறகு இளம்பெண்களை சபரிமலையில் அனுமதிப்பது பற்றி முடிவு செய்வோம் என தெரிவித்து இருந்தார்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :