You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
படைப்புழு சிக்கல்: சோளப்பயிர் செய்வதை கைவிடும்படி இலங்கையில் உத்தரவு
மறு அறிவித்தல் வரும்வரை சிறுபோக சோளப் பயிர் செய்கையை கைவிடுமாறு விவசாய அமைச்சர் பீ.ஹரிசன் அறிவித்துள்ளார்.
சோளப் பயிர் செய்வோருக்கு இந்த அறிவிப்பு இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
சோளப் பயிர் செய்கையில் மிக வேகமாகப் பரவிவரும் படைப்புழுத் தாக்குதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்குடனேயே இந்த முடிவு எட்டப்பட்டதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் அநேகமான பகுதிகளிலுள்ள சோளப் பயிர் செய்கைகள், படைப்புழுவின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
சோளப் பயிர் தவிர்த்த, பிற பயிர்களிலும், இந்தப்புழுவின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் அநேகமான பகுதிகளில் படைப்புழுவின் தாக்கம் தற்போது மிகவும் வேகமாக அதிகரித்து வருவதாக விவசாயத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதனால், சோளப் பயிர் மட்டுமின்றி, வேறு பல பயிர்களும் இந்தப் புழுவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பின்னணியிலேயே விவசாய அமைச்சு இன்று இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
இதேவேளை, படைப்புழுத் தாக்குதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நிதியுதவிகளை, விவசாய அமைச்சுக்கு வழங்குமாறு, நிதி அமைச்சுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த திங்கட்கிழமை தெரிவித்திருந்தார்.
படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கும்படி பிரதமரும், ஜனாதிபதியும் அமைச்சர் ஹரிசனுக்கு பணிப்புரை செய்திருந்தனர். அத்துடன் இந்த நடவடிக்கையின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை ஒவ்வொரு வாரமும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் சமர்ப்பிக்க உள்ளதாக ஹரிசனும் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தின் சோளப் பயிர்ச் செய்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படும் படைப்புழுவே, தற்போது இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயத்துறை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்