You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விடுதலை புலிகள் குறித்து பேசிய விஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுதலை
இன்று காலை கைதுசெய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த ஜூலை மாதம் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து குறித்து வாக்குமூலம் வழங்க, திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவிற்கு விஜயகலா எம்.பி. இன்று காலை சென்றிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் கைதுசெய்யப்பட்ட அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடந்த ஜுலை மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கம் என சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள விஜயகலா யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரை குறித்த விசாரணைகள் முடிந்துள்ளதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது. இதனால் சாட்சியங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதாலும், விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால், அவர் நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்தும் ஏதுநிலை இல்லை என்பதாலும், பிணை வழங்க முடியும் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஆராய்ந்த நீதவான், விஜயகலா மகேஸ்வரனுக்கு ரூபாய் 5 லட்சம் சரீரப் பிணையில் செல்வதற்கு அனுமதியளித்தார். இதுகுறித்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் 07ஆம் திகதி மீண்டும் விசாரிப்பதாக நீதவான் அறிவித்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்னுமொரு வழக்கு
''விடுதலைப் புலிகளின் கை ஓங்க வேண்டும்'' எனப் பேசிய விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய உரை குறித்து பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் அரசியலைமைப்பை மீறியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடர ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் ஜுலை மாதம் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரையின் சுருக்கம்
''நாங்கள் நிம்மதியாக வாழவும், நாங்கள் நிம்மதியாக வீதியில் நடக்கவும், எங்களுடைய பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்ப வேண்டுமாகவும் இருந்தால் வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கை ஓங்கவேண்டும்." என்று தெரிவித்தார்.
"அண்மையில் யாழில் பாடசாலை செல்லும் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். இன்று ஜனாதிபதி தனது கட்சியை வளர்க்கிறார். எங்களுடைய மக்களை அவர் காப்பற்றவில்லை."
"நாங்கள் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பதை இப்போது தான் உணர்கின்றோம்" என்று கூறியிருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :