You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"கொழும்பு நகரின் குப்பைகளால் புத்தளம் சூழல் மாசடையும்"
கொழும்பு நகரில் இருந்து அகற்றப்படும் குப்பைகளை ரயில் மூலம் புத்தளத்திட்கு கொண்டு சென்று கொட்டும் அரசாங்கத்தின் உத்தேச திட்டத்திற்கு சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அண்மையில் ஒரு அறிவிப்பை விடுத்திருந்த அரசாங்கம், நாளொன்றுக்கு கொழும்பு நகரில் இருந்து அகற்றப்படும் 700 டன் வரையிலான குப்பைகளை ரயில் மூலம் தினம் தோறும் கொண்டு சென்று அங்கு கொட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது.
புத்தளம் , அருக்காவலு பகுதியில் சிமெண்ட் உற்பத்தி செய்வதற்காக மூலப் பொருட்கள் தோண்டி எடுக்கப்பட்டதால், பாரிய குழிகள் உண்டாகியுள்ளன. அந்தக் குழிகளில் குப்பைகளை கொட்ட முடியுமென்று கருத்து தெரிவித்துள்ள நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க இதன் மூலம் கொழும்பு நகரில் குப்பை பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியுமென்று கூறியிருந்தார்.
ஆனால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இலங்கை சூழல் பாதுகாப்பு குழுவின் தலைவர் ரவீந்திரநாத் தாபரே புத்தளம் சிமெந்து உற்பத்தி சாலை மற்றும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் காரணமாக பாரிய சூழல் பிரச்சிக்னைகளை சந்தித்துள்ள புத்தளம் மாவட்டம் இந்த குப்பைகளை கொட்டுவதன் மூலம் அப்பகுதி சூழல் மேலும் மாசடையும் ஆபத்து இருப்பதாக குற்றம்சாட்டினார்.
கொழும்பில் இருந்து அகற்றப்படும் குப்பைகளை அருக்காவலு பகுதியில் அமைந்துக்க பாரிய குழிகளில் கொட்டப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக சம்பந்தப்பட்ட குப்பை கிடங்குகளுக்கு அடியே அமைந்துள்ள நீர் ஊற்றுகள் மாசடையும் ஆபத்து இருப்பதாக கூறியுள்ள ரவீந்திரநாத் தாபரே, இதன் மூலம் அருகில் அமைந்துள்ள வில்பத்து தேசிய சரணாலயத்திற்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
எனவே அரசாங்கம் இந்த திட்டத்தை கைவிடவேண்டுமென்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதேவேளை இந்த திட்டத்திற்கு புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆளும் கட்சியின் அமைச்சருமான பாலித்த இங்கே பண்டாரவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
புத்தள மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை ஆராய்வதை தவிர்த்து இவ்வாறான திட்டமொன்றை பலவந்தமாக நடைமுறை படுத்த இடமளிக்கப்பட மாற்றாதேன்றும் அமைச்சர் இங்கே பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :