You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: வெடி பொருளில் சிக்கி உயிருக்கு போராடும் 4 வயது யானை
இலங்கையில் மிருகங்களை வேட்டையாட மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருளை கடித்ததால் காயமுற்ற 4 வயதான காட்டு யானையொன்று தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக உள்நாட்டு ஆங்கில ஊடகமான ''த சன்டே ரைம்ஸ்'' தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த வன பகுதியில் கடந்த வாரம் கண்டு பிடிக்கப்பட்ட அந்த யானைக்கு தற்போது உடவளவ யானைகள் இடைத்தரிப்பு மையத்தில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
சட்ட விரோதமான முறையில் மிருகங்களை வேட்டையாட தயாரிக்கப்படுகின்ற "ஹக்க பட்டாஸ்" எனப்படும் வெடிப் பொறியில் சிக்கியே இந்த யானை காயமுற்றது.
ஈயத்தினாலான சன்னங்கள் மற்றும் பட்டாசு தூள்களை உள்ளடக்கியதாக "ஹக்க பட்டாஸ்" எனப்படும் இந்த வெடிப் பொறி பூசணிக்காய்க்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
சம்பவம் நடைபெற்று சுமார் இரு வாரங்களின் பின்னர்தான் இந்த யானை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வெடி பொருள் வெடிப்புச் சம்பவம் காரணமாக யானையின் தாடை எலும்புகள், பற்கள் சிதைவடைந்துள்ளதோடு தும்பிக்கையும் பிளவு பட்டுள்ளதாகவும் ''த சன்டே ரைம்ஸ '' தெரிவிக்கின்றது.
"யானைக்கு கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சக்தி மருந்துகள் ஊட்டப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வந்தாலும் வெள்ளிக்கிழமை வரையில் முன்னேற்றம் இல்லை" என்கின்றார் வன விலங்கு வைத்திய நிபுணரான டாக்டர் மாலக அபேவர்த்தனா .
தாடை எலும்புகள் சிதைந்துள்ள நிலையில் உணவுகளை உண்ண முடியாத நிலையில் திரவ உணவுகளே வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
இதே வேளை துப்பாக்கி கலாவெவ மற்றும் மின்னேரிய ஆகிய இடங்களிலும் கொம்பன் யானை உள்ளிட்ட இரு யானைகள் துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்குள்ளான நிலையில் உயிருக்காக போரடிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்