ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வழங்கும் திருத்த ஒப்பந்தத்திற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் சீன நிறுவனமொன்றுடன் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த ஒப்பந்தத்திற்கு இலங்கை அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் பிரதியொன்றை துறைமுக அபிவிருத்தி அமைச்சர் மகிந்த சமரசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த ஒப்பந்தம் இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் China Merchants Port Holdings Company Ltd என்ற சீன நிறுவனமொன்றுடன் ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்கீழ் இரண்டு நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

அதன்படி ஹம்பாந்தோட்டை துறைமுக சேவைகள் மற்றும் பொது வசதிகள் முகாமைத்துவத்துவ நடவடிக்கைகள் Hambantota International Port Services Co.(Pvt) Ltd எனும் நிறுவனத்தினால் மேற்கொள்வதுடன் இதில் 606 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளது.

இந்த நிறுவனத்தின் பங்குகளில் 50.7% உரிமை இலங்கை துறைமுக அதிகார சபைக்கும், 49.3% உரிமை China Merchants Port Holdings Company Ltd எனும் சீன நிறுவனத்திற்கும் உரித்தாகவுள்ளது.

அதற்கு மேலதிகமாக Hambantota International Port Group (Pvt) Ltd எனும் நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன் அதன் கீழ் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் சொத்துக்களை முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் 794 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளது.

அதன் பங்குகளில் 15% உரிமை இலங்கை துறைமுக அதிகார சபைக்கும், 85% உரிமை சம்பந்தப்பட்ட சீன நிறுவனத்திற்கும் உரித்தாகவுள்ளது.

மேலும், யுத்த நடவடிக்கைகளுக்காக இந்த துறைமுகத்தை பயன்படுத்த முடியாது என்றும் துறைமுகத்தின் பாதுகாப்பு தொடர்பான முழு பொறுப்பும் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :