You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: மட்டக்களப்பின் சில பகுதிகளில் நுழைய பொது பல சேனாவிற்கு நீதிமன்றம் தடை
இலங்கையின் பௌத்த கடும்போக்கு அமைப்பான பொது பல சேனாவிற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளுக்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது,
பொது பல சேனாவின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட அந்த அமைப்பை சேர்ந்த பௌத்த பிக்குகள் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தரவிருந்த நிலையில் மட்டக்களப்பு மற்றும் ஏறாவூர் நீதிமன்றங்களினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தலாம்
பொது பல சேனாவின் வருகை அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தலாம் என போலிஸார் முன்வைத்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றங்கள் இந்த தடையை விதித்துள்ளன.
மட்டக்களப்பு போலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்வைத்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட பதில் நீதிபதி பேரின்பம் பிரேம்நாத், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்குள் நுழைவதற்கான தடை உத்தரவை பிறப்பித்தார்.
இந்த தடை உத்தரவு நடைமுறையிலிருக்கும் எதிர்வரும் 16 ஆம் தேதி வரை அந்த பகுதியில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது. கூட்டங்களோ அல்லது பேரணிகளோ நடத்தக் கூடாது என்றும் பொது பல சேனாவிற்கு பிறப்பித்துள்ள அந்த தடை உத்தரவில் பதில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு நகரிலுள்ள மங்களராமய விகாரையில் பொது பல சேனாவை சேர்ந்த பௌத்த பிக்குமார்கள் கலந்து கொள்ளும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தடை உத்தரவு வந்துள்ளது.
அதேவேளை ஏறாவூர் நீதிமன்றத்தில் கரடியனாறு போலிசார் முன்வைத்த அறிக்கையில் வெறுப்புணர்வை தூண்டும் சட்ட விரோத ஓன்றுகூடலுக்கு தடை விதிக்க கோரியிருந்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட அந்த அமைப்பை சார்ந்தவர்கள் ஏறாவூர் நீதிமன்ற ஆளுகைக்குட்பட்ட பகுதிக்குள் நுழைய தடை விதிக்கும் கட்டளையை பிறப்பித்துள்ளது.
போலிஸ் பாதுகாப்பு
அதேவேளை பொது பல சேனா ஏனைய பௌத்த அமைப்புகளுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பௌத்த மரபுரிமைகள் மற்றும் பௌத்த அடையாளங்களை பார்வையிட்டு அதனை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், அந்த இடங்களுக்கு நேரடியாக செல்லவிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
தற்போது நீதிமன்ற தடை விதித்துள்ள நிலையில் மட்டக்களப்பு நகர் உட்பட அவர்கள் விஜயம் செய்யக் கூடும் என கருதப்படும் இடங்களில் அவர்களை தடுக்கும் வகையில் போலிஸார் தயார் நிலையில் காணப்படுகின்றனர்.