ரோகித் சர்மா: தொடக்க வீரராக முதல்முறையாக களமிறங்கி சதமடித்தார் - 5 முக்கிய அம்சங்கள்

விசாகப்பட்டினத்தில் இந்தியா மற்றும் தென்னப்பிரிக்கா இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா சதமடித்தார்.

6 சிக்ஸர்கள் மற்றும் 23 பவுண்டரிகள் உதவியுடன், ரோகித் சர்மா 176 ரன்கள் எடுத்தார்.

சதமடித்த ரோகித் சர்மாவின் இன்னிங்ஸ் குறித்த 5 முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

  • டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக தொடக்க வீரராக களமிறங்கி சதமடித்த ரோகித் சர்மா, இதன்மூலம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவங்களிலும் தொடக்க வீரராக களமிறங்கி சதமடித்த ஏழாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
  • டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவங்களிலும் தொடக்க வீரராக களமிறங்கி சதமடித்த முதல் இந்திய வீரர் ரோகித் சர்மாதான்.
  • அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய முதல் இன்னிங்ஸில் சதமடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமை ரோகித் சர்மாவுக்கு கிடைத்துள்ளது. ஷிகர் தவான், கே. எல். ராகுல் மற்றும் பிரித்வி ஷா ஆகியோரே மற்ற மூன்று இந்திய வீரர்கள்.
  • டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக முதல் சதமும், ஒட்டுமொத்தமாக நான்காவது சதத்தையும் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
  • தான் இந்தியாவில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவின் பேட்டிங் சராசரி 98.22 ஆக உள்ளது. இந்தியாவில் அவர் விளையாடிய 15 இன்னிங்ஸ்களில் ரோகித் 884 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நான்கு சதங்களும், 5 அரைசதங்களும் அடங்கும்.

இதனிடையே, 206 பந்துகளில் 13 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் மாயங்க் அகர்வால் சதம் அடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார். 88 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்து இந்தியா தொடர்ந்து விளையாடி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :