You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெற்றியுடன் விடைபெற்ற கிறிஸ் கெயில்; ரசிகர்களை பெரிதும் ஈர்த்த ஆப்கானிஸ்தான்
2019 ஐசிசி உலகக்கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே லீட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும் நடப்பு தொடரில் தங்களின் கடைசி லீக் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் விளையாடின.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி தனது கடைசி உலகக்கோப்பை தொடரில் விளையாடும் தொடக்க வீரர் கிறிஸ் கெயிலை விரைவில் இழந்தது.
இதனை தொடர்ந்து லூயிஸ் மற்றும் ஹோப் இணை சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது. லூயிஸ் 58 ரன்களும், ஹோப் 77 ரன்களும் எடுத்தனர்.
அதிரடி வீரர் ஹெட்மேயர் தனது வழக்கமான அதிரடி பாணியில் விளையாடி 31 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். பூரான் அரைசதம் எடுத்தார்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு மேற்கிந்திய தீவுகள் அணி 311 ரன்கள் எடுத்தது.
312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பெற வேண்டும் என்ற உத்வேகத்தில் விளையாடியது.
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரஹ்மத் அலி 62 ரன்கள் எடுத்தார். ஆனால், அனைவரையும் ஈர்த்தது இளமை வீரர் இக்ராம் அலிதான். 93 பந்துகளில் 86 ரன்கள் எடுத்த அவர் மிகவும் துப்பனுடன் ஆக்ரோஷமாக விளையாடினார்.
அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்கள் மட்டும் பெற்ற ஆப்கானிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும். தொடரின் ஆரம்பத்தில் பாகிஸ்தான் அணியை மேற்கிந்திய தீவுகள் வென்றது.
2019 உலகக்கோப்பை தொடரில் 9 லீக் போட்டிகளில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 2 போட்டிகளில் வென்று 5 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
தனது கடைசி போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்ற முனைப்பில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர தொடக்க வீரர் கிறிஸ் கெயிலுக்கு இதுவே கடைசி உலகக்கோப்பை போட்டியாகும்.
2003 முதல் 5 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடி 1186 ரன்கள் எடுத்த கெயிலுக்கு ரசிகர்களும், அணி வீரர்களும் பிரியாவிடை அளித்தனர்.
''கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நாங்கள் விரும்பினோம். ஆனால் அதேவேளையில் இந்த தொடடரில் பல போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினோம். எங்களுக்கு இந்த தொடர்ந் சிறந்த அனுபவமாக அமைந்தது. எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இந்த தருணம் உள்ளது'' என்று போட்டிக்கு பின்னர் கெயில் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்