You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காமன்வெல்த் போட்டியில் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றது இந்தியா
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21ஆவது காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
53 கிலோ பளு தூக்கும் பிரிவில் மணிப்பூரை சேர்ந்த சஞ்சிதா சானு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இதுவரை இந்தியா மூன்று பதக்கங்களை பெற்றுள்ளது. மூன்றும் பளு தூக்கும் போட்டியிலிருந்து கிடைத்துள்ளது.
இதற்கு முன்பாக கர்நாடகாவை சேர்ந்த குருராஜா வெள்ளிப் பதக்கத்தையும், மணிப்பூரை சேர்ந்த மிராபாய் சானு 48 கிலோ பளு தூக்கும் பிரிவில் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
யார் இந்த சஞ்சிதா சானு?
நான்கு வருடங்களுக்கு முன்பு இந்தியா கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் தனது பயணத்தை துவங்கியபோது அனைவரும் இந்தியாவின் முதல் பதக்கத்துக்காக காத்திருந்தனர். இந்தியாவுக்காக அப்போது முதல் பதக்கத்தை வென்றவர் இருபது வயது சஞ்சிதா சானு. அதுவும் அவர் வென்றது தங்கப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தச் சமயத்தில் மேடைக்கு பின்புறம் இருந்து அவரை உற்சாகமூட்டியவர் குஞ்சுராணி தேவி. ஒலிம்பியன் குஞ்சுராணி தேவிதான் சஞ்சிதாவின் சிறு வயதில் அவருக்கு உத்வேக மூட்டியவராக இருந்தார். சஞ்சிதாவும் தனது வழிகாட்டியை ஏமாற்றத்துக்குள்ளாக்கவில்லை.
24 வயது சஞ்சிதா ஏற்கனவே கடந்த காமன்வெல்த் போட்டிகளில் தங்கத்தை வென்றுள்ளார். ஆனால் அவரது தற்போதைய கவனமெல்லாம் ஆஸ்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கத்தை வெல்வதிலேயே இருந்தது. தற்போது அதை சாதித்தும் காட்டியுள்ளார் சஞ்சிதா.
பளுதூக்கும் வீராங்கனை மிராபாய் சானு, குத்துச் சண்டை வீரர் மேரிகொம் மற்றும் சரிதா தேவி ஆகியோரை உற்பத்தி செய்த மணிப்பூர்தான் சஞ்சிதாவுக்கும் சொந்த ஊர்.
கூச்சமும் வலிமையையும்
இந்திய ரயில்வேயில் பணிபுரியும் சஞ்சிதா, நிஜ வாழ்க்கையில் சற்று கூச்ச சுபாவமுடையவர். ஆனால், பளுதூக்கும் அரங்கில் ஏறிவிட்டால் அவர் முற்றிலும் வித்தியாசமானவராக மாறிவிடுவார்.
கிளாஸ்கோ காமன்வெல்த்தில் 48 கிலோ எடைப்பிரிவில் போட்டி போட்டு 173 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். அவர் இன்னும் இரண்டு கிலோ அதிக எடையை தூக்கியிருந்தால் அந்தப் பிரிவில் அதிக எடையை தூக்கியவர் என்ற புது காமன்வெல்த் சாதனையை படைத்திருப்பார்.
எப்படியியானும் அவர் தனது வாழக்கையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார்.
`புறக்கணிக்கப்பட்ட அர்ஜூனா விருது`
பல பதக்கங்களை வென்ற பெருமைக்குரிய சஞ்சிதா, 2017-ல் இந்திய அரசு அறிவித்த அர்ஜுனா விருது வென்றவர்கள் பட்டியலில் தனது பெயர் இல்லாதது குறித்து நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்க முடிவு செய்திருந்தபோது செய்திகளில் அடிபட்டார்.
அவர் போராடியபோதும் அவரது பெயர் அர்ஜுனா விருதுக்கு சேர்க்கப்படவில்லை. எனினும் அவர் அந்தச் சமயத்துக்கு பிறகு சில மாதங்கள் கழித்து நடந்த காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் 53 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று தனது பாணியில் பதில் தந்தார்.
மிராபாய் சானு மற்றும் சஞ்சிதா சானு இருவருமே போட்டியாளர்கள். ஆனால் சிறந்த நண்பர்களும் கூட. கடந்த காமன்வெல்த் போட்டிகளில் இருவரும் ஒரே பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று வந்தனர்.
சஞ்சிதா தற்போது 48 கிலோ பிரிவில் இருந்து 53 கிலோ பிரிவுக்கு வந்துள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்