இந்தியா-சீனா எல்லைப்பதற்றத்தை தணிக்க குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கின் முயற்சி

பட மூலாதாரம், AFP
இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் நீடிப்பதற்கு மத்தியில், அமைதியை ஏற்படுத்தும் நல்லெண்ணத்துடன், சீனாவுடன் அண்மையில் மோதி வெற்றி பெற்ற சாம்பியன்ஷிப் பட்டத்தைத் திருப்பி அளிக்க விரும்புவதாக இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
மும்பையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற டயிள்யூபிஓ ஒரியண்டல் சூப்பர் மத்திய எடைப் பிரிவு போட்டியில் சீன வீரர் ஜுல்பிகர் மய்மைதியாலியை ஒலிம்பிக் வீரர் விஜேந்தர் சிங் வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்.
ஆனால், தமது வெற்றியை இந்தியா - சீனா நட்புறவுக்கு அர்ப்பணிப்பதாகவும், அதன் அடையாளமாக தமது வெற்றியைக் குறிக்கும் பெல்ட்டைத் திருப்பி அளிக்க விரும்புவதாகவும் விஜேந்தர் சிங் தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் மூதல் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதி தொடர்பாக மோதல் நிலை காணப்படுகிறது.

பட மூலாதாரம், AFP
இந்தியாவில் தோக்லாம் என்றும் சீனாவில் தோங்லாங் என்றும் அழைக்கப்படும் இடத்தில், எல்லைப்புறச் சாலையை நீ்ட்டிக்க சீனா முயன்றபோது அதை இந்தியா எதிர்த்ததால் இந்த பிரச்னை தீவிரமானது.
மும்பையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்ததற்காக, விஜேந்தர் சிங்குக்கு நாடு முழுவதும் பரவலாக பாராட்டுகள் குவிந்தன.
ஆனால், அவரது செயல் சமரசத்துக்கு வழிவகுக்காது என்று சிலர் கருதுகின்றனர்.
மும்பையில் மிகப் பெரிய தோல்வியை சீனர்கள் சந்தித்தது போல தோக்லாமிலும் நடைபெறும் என்று யோகா குருவும் தொழிலதிபருமான பாபா ராம்தேவ் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
விஜேந்தர் சிங்கின் அறிவிப்புக்கு, சீன குத்துச் சண்டை வீரர் பதிலளித்தாரா அல்லது அப்போட்டியை நடத்தியவர்கள் விஜேந்தர் தமது பட்டத்தைத் திருப்பி அளிக்க அனுமதிப்பார்களா என்பது பற்றி தெளிவற்ற நிலை உள்ளது.
சீனாவுக்கும், வடகிழக்கு இந்திய மாநிலமான சிக்கிம் மற்றும் பூட்டானுக்கும் இடையிலான சந்திப்பில் சர்ச்சைக்குரிய அந்த பீடபூமி உள்ளது.

சீனாவுக்கும் பூட்டானுக்கும் இடையிலான அந்த சர்ச்சையில், அந்த பகுதிக்கு உரிமை கொண்டாடும் பூட்டானின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இந்தியா உள்ளது.
அந்த சாலை பணிகள் நிறைவடைந்தால், இந்தியாவின் கேந்தர முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படும் "கோழியின் கழுத்து" எனப்படும் 20 கிலோமீட்டர் (12 மைல்) நிலப்பரப்பை சீனா எளிதாக சென்றடைய வழி ஏற்படும் என்பதால் இந்தியா கவலை கொண்டுள்ளது.
இந்திய பெருநிலப்பகுதியின் வட கிழக்கில் அமைந்துள்ள ஏழு மாநிலங்களை இந்த பகுதிதான் இணைக்கிறது.
தனது நடவடிக்கையில் பின்வாங்கப் போவதில்லை என்று இந்தியாவுக்கு கடந்த வியாழக்கிழமை சீன பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
பிபிசியின் பிற செய்திகள்:
- பெண் ஊழியர்களுக்கு 'ஆணுறுப்பு' புகைப்படத்தை அனுப்பிய பிரபல செய்தி தொகுப்பாளர்
- கடைசி சர்வதேசப் போட்டியில் தங்கத்தைத் தவறவிட்ட உசைன் போல்ட்
- 'ராயல் இண்டியன்' விமானப்படை மத அடிப்படையில் பிரிக்கப்பட்டதா?
- செல்பேசியின் பெரிய எழுத்துருவால் சிக்கிய பாலியல் குற்றவாளி
- 'இந்தியா-சீனா' அமைதிக்காக தனது பட்டத்தை திருப்பியளிக்க விஜேந்தர் சிங் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












