You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது பாகிஸ்தான்
லண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில், 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்ற பாகிஸ்தான் முதல் முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.
தொடக்கத்திலேயே அதிர்ச்சி
339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், களமிறங்கிய இந்தியாவுக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் பந்துவீச்சில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணித்தலைவர் விராத் கோலி 5 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அமீர் வீசிய அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார்.
5 ஓவர்களில் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 10 ரன்கள் எடுத்த இந்தியா போட்டியில் தடுமாறியது.
யுவராஜ்சிங் மற்றும் தவான் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், தோனி மற்றும் ஜாதவ் ஆகிய இருவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
முன்னணி வீரர்கள் பலரும் ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணிக்கு நம்பிக்கையூட்டும் வகையில், ஹர்திக் பாண்ட்யா அதிரடி ஆட்டம் மேற்கொண்டார்.
6 சிக்ஸர் அடித்து, 43 பந்துகளில் 76 ரன்கள் பெற்ற எதிர்ப்பாராவிதமாக ரன்அவுட் ஆனார். இதன் பின்னர் களமிறங்கிய மற்ற வீரர்கள் நீண்ட நேரம் களத்தில் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில் 30.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்களை மட்டுமே இந்தியா பெற்றது. இதனால், 180 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது.
பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமீர் மற்றும் ஹாசன் அலி ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுக்களை எடுத்தனர்.
பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ஃபகார் ஜமான் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
முன்னதாக, இன்றைய போட்டியில் 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி இந்திய அணி முதலில் பீஃல்டிங் செய்யும் என்று அறிவித்தார்.
இன்றைய இறுதிப்போட்டியின் தொடக்கத்தில் இருந்தே பாகிஸ்தான் மட்டைவீச்சாளர்கள் நன்கு அடித்தாடினர். தொடக்க ஆட்டக்காரர்கள் அஸார் அலி மற்றும் ஃபகார் ஜமான் ஆகிய இருவரும் அரைச்சதம் அடித்த நிலையில், அஸ்வின் வீசிய 23-ஆவது ஓவரில், பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் அஸார் அலி மற்றும் ஃபகார் ஜமான் ஆகியோரின் தவறான கணிப்பால், தன்னை நோக்கி வந்த பந்தை பீஃல்டர் பூம்ரா விக்கெட்கீப்பர் தோனியை நோக்கி வீச, அவர் அஸார் அலியை ரன் அவுட் செய்தார்.
106 பந்துகளில், 3 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் விளாசி, தனது முதலாவது ஒருநாள் சதத்தை பாகிஸ்தான் தொடக்க வீரர் ஃபகார் ஜமான் பெற்றார். 114 ரன்கள் எடுத்த நிலையில் பாண்டியாவின் பந்துவீச்சில் ஃபகார் ஜமான் ஆட்டமிழந்தார்.
தனது நான்காவது ஒருநாள் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி பஃக்கார் ஜமான் சதம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
அனுபவம் மிருந்த ஸோயீப் மாலிக் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர், களமிறங்கிய முகமது ஹஃபிஸ் தனது அதிரடி ஆட்டத்தால், 37 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.
மட்டைவீச்சுக்கு சாதகமாக கருதப்படும் ஓவல் மைதானத்தில், பாகிஸ்தான் அணியின் மட்டைவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக விளையாடி 339 என்ற இமாலய இலக்கை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.
தொடர்பான செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்