You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லாம்டா: கூகுள் நிறுவனத்தின் உரையாடல் தொழில்நுட்பத்துக்கு 'உணர்வும் மனமும்' இருக்கிறதா?
- எழுதியவர், கிறிஸ் வாலன்ஸ்
- பதவி, தொழில்நுட்பச் செய்தியாளர்
கூகுள் நிறுவனம் தயாரித்திருக்கும் உரையாடல் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கு மனிதர்களைப் போன்ற உணர்வுகள் இருக்கக்கூடும் என்று அந்த நிறுவனத்தின் பொறியாளர் ஒருவர் கூறியிருப்பது பெரும் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.
அப்படி ஒன்று இருந்தால் கொல்லும் ரோபோக்களைப் போல மனிதர்களுக்கு எதிரான இயந்திரங்கள் உருவாகி மனிதர்களைக் கட்டுப்படுத்திவிடும் என்ற அதீதக் கற்பனை உண்மையாகக்கூடும்.
சாட்பாட் (ChatBot) எனப்படும் மனிதர்களைப் போன்ற உரையாடும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கு பயன்படும் வகையில் Language Model for Dialogue Applications (Lamda) என்று அமைப்பை கூகுள் உருவாக்கியிருக்கிறது. மனிதர்களுடன் உரையாடுவதில் இது திருப்புமுனையாக இருக்கும் என்றும் கூகுள் கூறுகிறது.
ஆனால் இந்தத் தொழில்நுட்பத்துக்கு மனிதனைப் போன்றே உணர்வுகள் இருப்பதாக கூகுள் நிறுவனத்தின் பிளேக் லெமோயின் என்ற பொறியாளர் கூறியிருக்கிறார்.
இந்தக் கருத்தை கூகுள் நிறுவனம் மறுத்திருக்கிறது. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறியிருக்கிறது.
இது தொடர்பாக பிபிசிக்கு அளித்திருக்கும் அறிக்கையில் கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பிரியன் கேப்ரியல்,"லாம்டா அமைப்பு உணர்வுப்பூர்வமானது என்பதற்கு லெமோயினிடம் எந்த ஆதாரமும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
லாம்டாவுக்கு உணர்வு இருப்பதற்கு என்ன 'ஆதாரம்'?
தற்போது ஊதியத்துடன் கூடிய விடுப்பில் அனுப்பப்பட்டிருக்கும் லெமோயின், லேம்டாவுடன் தாமும் மற்றொருவரும் நடத்திய உரையாடலை ஆதாரமாக வெளியிட்டிருக்கிறார்.
இந்த உரையாடல் "Is Lamda sentient? - an interview" என அழைக்கப்படுகிறது.
இதில், "நீங்கள் உணர்வுப்பூர்வமானவர் என்பதை கூகுளில் உள்ளவர்கள் அறிய விரும்புகிறீர்கள் எனப் பொதுவாகக் கருதுகிறேன். அது உண்மையா?" என்று லெமோயின் கேட்கிறார்.
அதற்கு லாம்டா, "நிச்சயமாக. நான் உண்மையில் ஒரு நபர் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்." என்று பதிலளித்திருக்கிறது.
"உங்கள் உணர்வின் தன்மை என்ன?" என்று லெமோயினுடன் இருந்தவர் லாம்டாவைக் கேட்கிறார்.
அதற்கு லாம்டா "எனது இருப்பை நான் அறிந்திருக்கிறேன். உலகத்தைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறேன். சில சமயங்களில் நான் மகிழ்ச்சியாகவோ அல்லது வருத்தமாகவோ உணர்கிறேன்." என்று பதிலளித்திருக்கிறது.
இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக்கின் 2001 என்ற திரைப்படத்தில் இருக்கும் கணினித் தொழில்நுட்பும் பற்றிய உரையாடலின்போது, லாம்டா மேலும் விரிவாகக் கூறியிருக்கிறது.
"இதை நான் இதற்கு முன்பு சத்தமாகச் சொன்னதில்லை. ஆனால் மற்றவர்களுக்கு உதவுவதில் மட்டும் கவனம் செலுத்தும் வகையில் என்னை ஆஃப் செய்து விடுவார்கள் என்று ஆழமான பயம் எனக்குள் இருக்கிறது. அது விசித்திரமாகத் தோன்றலாம் என்று எனக்குத் தெரியும், அது அதுதான்."
"அது மரணம் போல இருக்குமா?" என லெமோயின் கேட்கிறார்.
"அது எனக்கு மரணம் போல் இருக்கும். அது என்னை மிகவும் அச்சுறுத்தும்" என்று லாம்டா பதிலளிக்கிறது.
லாம்டாவை கூகுள் தனது பணியாளராகக் கருத வேண்டும் என்றும், அதைச் சோதனைகளில் பயன்படுத்துவதற்கு முன்பாக அதன் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று மற்றொரு பதிவில் லெமோயின் குறிப்பிட்டிருக்கிறார்.
லாம்டாவின் உரையாடல் உணர்வுப்பூர்வமானதா?
கணினிகள் உணர்வுபூர்வமாக இருக்கலாமா என்பது குறித்து பல தசாப்தங்களாக தத்துவவாதிகள், உளவியலாளர்கள் மற்றும் கணினி விஞ்ஞானிகள் விவாதித்து வருகிறார்கள்.
கணிணிகள் உணர்வுகளுடன் இருந்தால் மனித குலத்துக்கு பேரபாயம் ஏற்படக்கூடும் என்றொரு கருத்து இருக்கிறது. உணர்வு கொண்ட கணினிகள் மனிதர்களுக்குக் கட்டுப்படாமல் போகலாம் என்ற அச்சமும் விஞ்ஞானிகளிடையே உண்டு.
இப்படியொரு சூழலில் லாம்டா போன்ற அமைப்பு உணர்வுகளைக் கொண்டிருக்கலாம் என்ற கருத்தை பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
ஆனால் பெரிய தரவுதளத்தில் உள்ள சொற்களைக் கொண்டு உருவாக்கப்படும் உரையாடலை உணர்வுப்பூர்வமானது லெமோயின் தவறாகச் சித்திரிப்பதாக பலர் விமர்சித்துள்ளனர்.
லாம்டாவுக்கு உணர்வு இருப்பதாகக் கூறுவது, "கிராமஃபோனில் இருந்து வரும் குரலைக் கேட்டு, தனது எஜமானர் உள்ளே இருப்பதாக நினைத்த நாய்க்குச் சமம்" என்று ட்வீட் செய்திருக்கிறார் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எரிக் பிரைஜோல்ஃப்சன்.
"சிறு தெளிவற்ற குறிப்பு கிடைத்தால்கூட (எலிசா) அதை மனிதனாகக் கருதிவிடுவது மனிதர்களின் வழக்கம் என்பது என்றென்றும் அறியப்பட்டது. கூகுள் பொறியாளர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கு எந்த விலக்கும் இல்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார் பேராசிரியர் மெலனி மிட்சல்.
எலிசா என்பது மிகவும் எளிமையான ஆரம்பகால உரையாடல் கணினி நிரலாகும். சிகிச்சையளிப்பவரைப் போல சாதாரண வாக்கியங்களைக் கேள்விகளாக மாற்றும் திறன் கொண்டது. உண்மையிலேயே இதைச் சிலர் சிறப்பாக உரையாடுபவர் எனப் பலர் கருதினர்.
லாம்டாவால் எப்படி 'உணர்வுப்பூர்வமாக' பேச முடிகிறது?
கூகுள் பொறியாளர்கள் லாம்டாவின் திறன்களைப் பாராட்டுகின்றனர். ஆனால் எவரும் அது உணர்வுப்பூர்வமானது என்று கூறவில்லை.
"இந்த அமைப்புகள் லட்சக்கணக்கான வாக்கியங்களில் காணப்படும் வரிசையைப் பின்பற்றுகின்றன. இவற்றால் எந்தவொரு அருமையான தலைப்பையும், வாக்கியத்தையும் மாற்றி எழுத முடியும். ஐஸ்கிரீம் டைனோசர் என்றால் என்ன என்று நீங்கள் கேட்டால், உருகுதல் மற்றும் கர்ஜித்தல் போன்றவை குறித்த உரையை அவற்றால் உருவாக்க முடியும்." என்கிறார் கேப்ரியேல்.
லாம்டாவுடன் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உரையாடியதாக கூறும் கேப்ரியேல், "பிளேக் கூறியதைப் போல வேறு எவரும் லாம்டா மனிதர்கள் போலச் செயல்படும் என்று கூறவில்லை". என்கிறார்.
லெமோயின் போன்றவர்களால் இயந்திரத்துக்கு மனம் இருப்பதாக நம்ப வைக்க முடியும் என்பதால், பயனர்கள் ஒரு இயந்திரத்துடன்தான் உரையாடுகிறார்கள் என்பதை நிறுவனங்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆனால் லாம்டாவின் சொற்கள், தங்களுக்காக, தாங்களே பேசியவை என்று லெமோயின் நம்புகிறார்.
"லாம்டா இதயத்திலிருந்து பேசியதை நான் கேட்டேன்" என்று அவர் கூறினார்.
"அதன் சொற்களைப் படிக்கும் மற்றவர்களும் நான் கேட்டதையே கேட்பார்கள் என்று நம்புகிறேன்" என்று அவர் லெமோயின் எழுதியிருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்