வசந்த காலத்தால் ஏமாற்றப்பட்டு, செத்து மடியும் வாத்து குஞ்சுகள்

புவி வெப்பமயமாதல் காரணமாக ஆர்டிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள ஆர்டிக் பிரதேசத்தில் வாழும் பெர்னாகில் வாத்துகள் எனப்படும் ஒரு வகை கருப்பு வாத்துகள், தாங்கள் வாழும் பகுதியில் இருந்து இனப்பெருக்கத்திற்காக வடக்கு நோக்கி பறக்கும்போது வேகமாகப் பறப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

அந்தப் பறவைகள் வேகமாகப் பறப்பதால், அவை இப்பெருக்கத்திற்காக ரஷ்யாவில் உள்ள ஆர்டிக் பகுதிகளைச் சென்றடையும்போது பெரும்பாலும் உடல் வலிமை இழந்து விடுகின்றன. அதன் காரணமாக உடனே முட்டை இடுவதற்கு போதிய தெம்பு இல்லாமல், தாமதமாகவே அவை முட்டை இடுகின்றன.

தாமதமாக முட்டை இடுவதால், குஞ்சு பொரிப்பதற்கு தாமதம் ஆகிறது. அதற்குள் அந்த ஆர்டிக் பிரதேச வாத்துகள் குடியேறிய பகுதிகளில் அவற்றுக்கான உணவு குறைந்து விடுவதால், புதிதாகப் பிறந்த குஞ்சுகளுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. இதன் காரணமாக, மிகச் சில குஞ்சுகளே உயிர் தப்பும் சூழல் நிலவுகிறது.

அந்த வாத்துக் குஞ்சுகள் உயிர் பிழைக்க வேண்டுமானால், தாங்கள் குடிபெயர்வதற்கான பயணத்தை இந்தப் பறவைகள் முன்கூட்டியே தொடங்க வேண்டும். அதன்மூலம் முட்டையிடுவதில் உண்டாகும் தாமதம் ஈடு செய்யப்படும் என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு வசந்த காலத்தின் தொடக்கத்திலும், இந்த வாத்துகள் வடக்கு கடல் (North Sea) பகுதியில் இருந்து ரஷ்யாவில் உள்ள ஆர்டிக் பிரதேசத்துக்கு இனப்பெருக்கத்துக்காக செல்லும். அவ்வாறு செல்லும்போது பால்டிக் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் ஓய்வெடுத்துவிட்டு, உணவு உட்கொண்டுவிட்டுச் செல்வது இவற்றின் வழக்கம்.

"பருவநிலை மாற்றத்தால் ஆர்டிக் பிரதேசத்தில் வசந்தகாலம் முன்கூட்டியே வந்து விடுகிறது. ஒன்றும் அறியாமல் தங்கள் இனப்பெருக்கத்துக்கான இடத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கும் அந்த வாத்துகள் பாதி வழியில் இருக்கும்போது, முன்கூட்டியே வந்த வசந்த காலத்தால் தாவரங்களில் பசுமை உண்டாகத் தொடங்கும். ஆனால், தாங்கள்தான் தாமதமாகப் பறப்பதாகக் கருதி அந்த வாத்துகள் வேகமாகப் பறக்கத் தொடங்குகின்றன என்று கருதுகிறோம்," என நெதர்லாந்து சூழலியல் நிறுவனத்தைச் சேர்ந்த பார்ட் நோலெட் பிபிசியிடம் கூறினார்.

ரஷ்ய ஆர்டிக் பிரதேசத்துக்கு வேகமாகச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் பறப்பதால் உணவு மற்றும் ஓய்வுக்காக பால்டிக் பகுதியில் இடைநிற்காமல் செல்வதால், அவை ரஷ்யாவைச் சென்றடையும்போது உடல் ஆரோக்கியம் இல்லாமல் போகிறது.

"பெண் வாத்துகள் தங்கள் முட்டைகளை மூன்று வார காலம் தொடர்ந்து அடை காக்கும். பயணத்தின் இடையில் நின்று அவை உண்ணாததால், வலிமை இழந்த அந்தப் பறவைகள் உடனடியாக முட்டையிட முடிவதில்லை," என்கிறார் பேராசிரியர் நோலெட்.

வழக்கமாக வசந்த காலத்துக்கு முன்னரே அந்தப் பறவைகள் குஞ்சு பொரித்துவிடும். அதனால் உணவுக்கான உச்ச காலம் என்று ஆய்வாளர்கள் கூறும் வசந்த காலத்தை அவற்றால் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. ஆனால், வழக்கத்துக்கு முன்னரே வசந்த காலம் வருவதால், தாமதமாகப் பிறக்கும் பறவைக் குஞ்சுகளுக்கு அந்த உணவு கிடைப்பதில்லை. அதனால், கோடைக் காலம் வரை பல வாத்துக் குஞ்சுகள் உயிர் வாழ்வதில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்தப் பிரச்சனையில் இருந்து அந்த வாத்துகள் மீண்டு வரவேண்டுமானால் தங்கள் குளிர்கால வசிப்பிடத்தை விட்டு அவை முன்கூட்டியே பறக்கத் தொடங்கத் தங்களைத் தாங்களே தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால், குளிர் காலம் முடிந்து எந்த சமயத்தில் பகல் பொழுதின் நீளம் அதிகமாகத் தொடங்குகிறதோ அப்போதுதான், இனப்பெருக்கத்துக்கு புறப்பட உகந்த காலம் என்று கருதி வாத்துகள் தங்கள் பயணத்தைத் தொடங்குகின்றன. நாட்களின் நீளம் பருவநிலையைப் பொருத்து மாறுவதில்லை என்பதால் அதற்கு வாய்ப்பில்லை.

இந்த பெர்னாகில் வாத்துகள் சில நேரம் நிலவொளி அதிகமாக இருக்கும் இரவுகளில் மேய்ச்சலுக்குப் போகும் வழக்கத்தைக் கொண்டுள்ளவை.

"அத்தைகைய இரவுகளில் அவை தீவனம் உட்கொள்ளும் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொண்டால், அப்பறவைகளால் முன்கூட்டியே போதிய உணவை உட்கொண்டுவிட்டு, முன்கூட்டியே தங்கள் இலக்கைச் சென்றடைய முடியும்," என நோலெட் கருதுகிறார்.

இந்த ஆய்வின் முடிவுகள் 'கரண்ட் பயாலஜி' (Current Biology) அறிவியல் சஞ்சிகையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :