தமிழ்நாடு ஆளுநர் ரவி: "ஆன்லைன் ரம்மி தடை மசோதா இன்னும் எனது பரிசீலனையில் உள்ளது"

தமிழ்நாடு ஆளுநர் ரவி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதா இன்னும் தமது பரிசீலனையில் இருப்பதாக மாநில ஆளுநர் ஆர்.என். ரவி பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தெரிவித்து விட்டதாக வெளிவரும் தகவல்களையும் அவர் நிராகரித்தார்.

இது குறித்து ஆளுநர் ரவியிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "மாநில சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்ட மசோதாவை முறையான மசோதாவாக தாக்கல் செய்ய என்னிடம் அனுமதி கோரப்பட்டபோது, அதற்கு நான் ஒப்புதல் தெரிவித்திருந்தேன். அத்தகைய நடைமுறையை மாநில ஆளுநராக நான் தடுக்கக் கூடாது," என்று கூறினார்.

"அந்த மசோதா முறையான மசோதாவாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு அதற்கு ஒப்புதல் அளிக்கும்படி தமிழ்நாடு சட்டப்பேரவை மூலம் எனது பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவின் அம்சங்கள், பிற சட்ட நிலவரங்கள் தொடர்பாக நான் பரிசீலித்து வருகிறேன். அந்த வகையில் இன்னும் மசோதாவுக்கான ஒப்புதலை நான் தெரிவிக்கவில்லை. அந்த மசோதா எனது பரிசீலனையில் இருக்கிறது," என்று ஆளுநர் ரவி தெரிவித்தார்.

சிவப்புக் கோடு

மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை: தமிழக அரசு, ஆன்லைன் சூதாட்டத்தை பந்தயம் என வரையறுக்கிறது. மேலும், பணம் அல்லது பிற வகை கட்டண முறை மூலம் ஆடப்படும் ஆன்லைன் கேம்களை விளையாடுவதை அது உள்ளடக்கியுள்ளது. இந்த கட்டண முறையில் மெய்நிகர் கிரெடிட்கள், டோக்கன்கள், பொருள்கள் அல்லது கேமில் வாங்கிய கட்டண மதிப்பு என அனைத்தும் உள்ளடக்கியிருக்கலாம். .

சில ஆன்லைன் கேம்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் தடை செய்தல்: பணம் அல்லது பிற முதலீட்டை வைத்து விளையாடப்படும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆன்லைன் கேம்களை புதிய மசோதா தடை செய்கிறது.

போக்கர், ரம்மி ஆகியவை இதில் அடங்கும். பின்வரும் நான்கு நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றைச் சந்திக்கும் வாய்ப்புக்கான ஆன்லைன் கேம்களை இது வரையறுக்கிறது:

(i) திறனை விட வாய்ப்பு ஆதிக்கம் செலுத்துவது (ii) கேம்கள் வாய்ப்பின் விளையாட்டுகளாக வழங்கப்படுவது (iii) வாய்ப்பின் தன்மையை மிகையான திறமையால் மட்டுமே முறியடிக்க முடிவது (iv) கேம்களில் சீட்டுகள், பகடை அல்லது ரேண்டம் நிகழ்வு ஜெனரேட்டர்களில் இயங்கும் அதிர்ஷ்ட சக்கரம் மூலம் ஆடுவது ஆகியவை அடங்கும்.

தமிழ்நாடு கேமிங் ஆணையத்தை நிறுவுதல்: வாய்ப்புள்ள ஆன்லைன் கேம்களைக் கண்டறிந்து, தடைசெய்யப்பட்ட கேம்களின் அட்டவணையில் அவற்றைச் சேர்க்க மாநில அரசுக்குப் பரிந்துரைக்கும் பொறுப்பு இந்த ஆணையத்தின் பொறுப்பாகும். இந்த ஆணையம் கீழ்கண்ட அதிகாரத்தைப் பெற்றிருக்கும்.

(i) மாநிலத்தில் செயல்பட உள்ளூர் ஆன்லைன் கேம் வழங்குநர்களுக்கு சான்றிதழ்களை வழங்குதல்

(ii) ஆன்லைன் கேம்களுக்கான நேர வரம்பு, பண வரம்பு மற்றும் வயதுக் கட்டுப்பாடுகள் தொடர்பான விதிமுறைகளை உருவாக்குதல்

(iii) தகவல்களைச் சேகரித்து பராமரித்தல் மற்றும் ஆன்லைன் கேம் வழங்குநர்களின் செயல்பாடுகள் தொடர்பான தரவை வைத்திருத்தல்

உள்ளூர் அல்லாத கேம் சேவை வழங்குநர்களின் கட்டுப்பாடு: தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள கேம் வழங்குநர்கள், மாநிலத்தில் உள்ள பயனர்களுக்கு தடை செய்யப்பட்ட கேம்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது உரிய கவனத்துடன் செயல்பட வேண்டும்.

(i) ஆன்லைன் விளையாட்டில் பங்குபெறும் நபரின் இருப்பை உடல் ரீதியாக அவர் அங்குதான் இருக்கிறாரா என்பதை கண்டறிந்து உறுதிப்படுத்தும் நிபந்தனைக்கு உட்பட்டு விளையாட ஒப்பந்தம் செய்தல்

(ii) மாநிலத்தில் தங்கள் உடல் இருப்பை நிலைநாட்ட வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களைச் சேகரித்தல்

(iii ) ஆன்லைன் சூதாட்டம் மற்றும் சில ஆன்லைன் கேம்களை அரசு தடைசெய்கிறது என்று வருங்கால வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்தல்

(iv) மாநிலத்தில் உடல் ரீதியாக விளையாட்டில் பங்கெடுக்கும் நபர்களுக்கு, தடை செய்யப்பட்ட கேம்களுக்கான அணுகல் இல்லை என்பதை உறுதிப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

அபராதம்: தடைசெய்யப்பட்ட விளையாட்டுகளை விளையாடுபவர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

தடைசெய்யப்பட்ட விளையாட்டுகளை வழங்குபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

குற்றங்கள் கூட்டும். உள்ளூர் அல்லாத கேம் வழங்குநரால் மீறப்பட்டால், தமிழ்நாடு கேமிங் ஆணையம், மாநிலத்தில் உள்ள நபர்கள், அத்தகைய கேம்களை அணுகுவதைத் தடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்ளும்.

சிவப்புக் கோடு

ஆன்லைன் ரம்மி தடை மசோதா எப்போது நிறைவேறியது?

ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்கும் ஆன்லைன் கேமிங்கை ஒழுங்குபடுத்துவதற்கும் அக்டோபர் 19ஆம் தேதி ஒரு மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றியது.

இந்த மசோதா தமிழ்நாடு சட்ட அமைச்சர் எஸ். ரெகுபதியால் தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்கவும், ஆன்லைன் கேம்களை ஒழுங்குபடுத்தவும் வகை செய்யும் அவசர சட்டத்துக்கு அக்டோபர் 7ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருந்தார்.ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பல ஆன்லைன் சூதாட்ட தளங்களில் பெரும் தொகையை இழந்தவர்களின் தொடர் தற்கொலைகள் குறித்து பரவலாக புகார்கள் வந்ததால், ஆன்லைன் சூதாட்டத்தை தமிழ்நாட்டில் தடை செய்ய மாநில அரசு முடிவு செய்தது.

ஆளுநர் ரவி

பட மூலாதாரம், Getty Images

முன்னதாக, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இதைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான மசோதாவை தாக்கல் செய்ய அரசு முடிவு செய்தது.

நீதிபதி சந்துரு குழு 2022ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி 71 பக்க அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது, அதன்பிறகு, மாநில அமைச்சரவை செப்டம்பர் 26ஆம் தேதி அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடிவு செய்தது.

காணொளிக் குறிப்பு, பிரிட்டன் அரசர் சார்லஸை விட பிரதமர் ரிஷி சூனக் பணக்காரரா ?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: