அனைத்து ஜாதி அர்ச்சகர் வழக்கு: நீதிமன்ற தீர்ப்பு என்ன தாக்கத்தை ஏற்படுத்தலாம்?

தமிழ்நாடு
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

அனைத்து ஜாதியைச் சேர்ந்தவர்களும் கோவில்களில் அர்ச்சகராகும் விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் விதிகள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகம விதிகளின்படி இயங்கும் கோவில்களைக் கண்டறிய ஐந்து பேர் கொண்ட குழுவை நியமிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதன் தாக்கம் என்னவாக இருக்கும்?

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் அனைத்து ஜாதியைச் சேர்ந்த 28 பேரை பல்வேறு கோவில்களில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழ்நாடு அரசு நியமனம் செய்தது. இவர்களில் 4 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்.

மேலும், 2020ஆம் ஆண்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனத்திற்கென புதிய விதிகள் கொண்டுவரப்பட்டன. அந்த புதிய விதிகளின்படி, அர்ச்சகராக சேர்வோர் 18 வயதிலிருந்து 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டுமென்றும் ஆகமப் பள்ளிகளில் பயிற்சி பெறுவோராக இருக்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அனைத்து ஜாதி அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்தும் இந்த புதிய விதிகளை எதிர்த்தும் அகில இந்திய ஆதி சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்பட பத்துக்கும் மேற்பட்ட தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அர்ச்சகர்கள் நியமனம், இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

இதற்குப் பிறகு இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான முதன்மை அமர்வு விசாரித்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், கோவில்களுக்கு பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், தக்கார்கள் மூலம் அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்டவிரோதமானது என்றும் அறங்காவலர்களுக்கு மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்க அதிகாரம் உள்ளதாகவும் வாதிட்டனர்.

மேலும், குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்கள் மட்டும்தான் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என ஆகம விதிகள் உள்ள நிலையில், அதை மீறி அர்ச்சகர் பயிற்சியை முடித்த அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிப்போம் என இந்து சமய அறநிலையத் துறை கூறியிருப்பதாகவும் அது செல்லாது எனவும் மனுதாரர்கள் வாதிட்டனர்.

இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், கோவில்களில் காலியாக உள்ள அர்ச்சகர், ஓதுவார்கள், பட்டர்கள் மற்றும் பிற பணியாளர்கள் காலியிடங்களை நிரப்ப வேண்டுமென கடந்த ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றியே கோவில் செயல் அலுவலர்கள் மூலம் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதாகவும் அர்ச்சகர்களை நியமிப்பதற்கான தகுதிகள் குறித்து உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்து, அதன் பரிந்துரையின் அடிப்படையிலேயே ஒரு வருட பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அர்ச்சகர் போராட்டம்

மேலும் இந்து சமய அறநிலையத்துறை பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை எனவும் அறநிலையத் துறையின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு கடந்த ஓராண்டாக நடந்துவந்த நிலையில், வழக்கை விசாரித்துவந்த தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் மாலா அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விதித்த விதிகள் செல்லும் என்றும் ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களில் அந்த ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எந்தெந்தக் கோவில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றுகின்றன, எந்தெந்தக் கோவில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றவில்லை என்பது குறித்துக் கண்டறிய ஐந்து பேர் குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த ஐந்து பேர் கொண்ட குழுவில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஒருவரும் அரசு நியமிக்கக்கூடிய இரண்டு பேரும் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் வரவேற்றாலும், கோவில்களை ஆகம அடிப்படையில் பிரிப்பதென்பது மறுபடியும் ஜாதி சார்ந்த நியமனங்களுக்கு வழிவகுக்கும் என்று கருதுகிறார்கள்.

"நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அரசு விதிகள் செல்லும் என்று சொல்லியிருப்பது எங்களுக்குக் கிடைத்த வெற்றி. ஆனால் எந்தக் கோவில் ஆகமத்தின் அடிப்படையில் செயல்படும் கோவில், எந்தக் கோவில் ஆகம அடிப்படையில் செயல்படாத கோவில் என்பதை அறிய ஐந்து பேர் கொண்ட குழுவை அமைப்பது தவறு. கோவில்களை இந்த அடிப்படையில் பிரிப்பதே தவறு. இவை எல்லாமே பொதுக் கோவில்கள். இந்த ஐந்து பேர் குழுவில் ஆகமம் தெரிந்த ஒருவர் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி இடம்பெறுவோர், எல்லாக் கோவில்களையும் ஆகமக் கோவில்கள் என்று சொல்லக்கூடும். ஆகவே இது ஆபத்தாக முடியக்கூடும்" என்று அச்சம் தெரிவிக்கிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவரான ரங்கநாதன்.

மீண்டும் துவங்கப்பட்டுள்ள அரச்சகர் பயிற்சிப் பள்ளிகள்

அர்ச்சகர் போராட்டம்

இதற்கிடையில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் இருந்த அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் துவங்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு.

2007ஆம் ஆண்டில் அனைத்து ஜாதியினரையும் சேர்ந்தவர்கள் அர்ச்சகராகும் திட்டம் கொண்டு வரப்பட்டபோது தமிழ்நாட்டில், சென்னை, திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர், பழநி, ஸ்ரீரங்கம் ஆகிய ஆறு இடங்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் துவங்கப்பட்டன. இதில் 240 பேர் பயிற்சிக்காக சேர்ந்தனர்.

ஆனால், இந்தத் திட்டத்தை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்ட பிறகு, முதல் பேட்ச்சிற்குப் பிறகு புதிதாக மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. அனைத்து மாணவர்களும் படித்து முடித்த பிறகு அந்தப் பள்ளிகள் செயல்படாமல் போயின. இந்த நிலையில், மீண்டும் அந்த அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைப் புதுப்பித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று துவக்கி வைத்துள்ளார். இதில் 151 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது தவிர, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஓதுவார் பயிற்சிப் பள்ளி, கும்பகோணம் நாகநாதசுவாமி கோவிலில் தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளி, திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) கோவிலில் திவ்ய பிரபந்தப் பாடசாலை ஆகியவையும் திறக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று பயிற்சிப் பள்ளிகளிலும் 46 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைப் பொறுத்தவரை சென்னை, திருவரங்கம் ஆகிய இடங்களில் வைணவ முறைப்படியும் திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர் , பழநி ஆகிய இடங்களில் சைவ முறைப்படியும் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளிட்ட ஒன்பது பயிற்சிப் பள்ளிகளும் உண்டு உறைவிட பள்ளியாக செயல்படுவதோடு, பயிற்சி பெறும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் மூன்றாயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்னையின் பின்னணி

அனைத்து ஜாதியினரும் கோவில் கருவறைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென்று கூறிவந்த பெரியார், 1970ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று இதற்காக கிளர்ச்சி ஒன்றை நடத்தப்போவதாக அறிவித்தார். நடக்குமென அறிவித்தார்.

இந்த அறிவிப்பையடுத்து, அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம் விரைவில் இயற்றப்படும் என்றும் பெரியார் தன் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். அதன்படி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அர்ச்சகர் போராட்டம்

எல்லோரையும் அர்ச்சகராக்க அனுமதிக்கும் இந்தச் சட்டம் என்பது, ஏற்கனவே இருந்த இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை சட்டத்தின் பிரிவு 55, 56, 116 ஆகியவற்றில் செய்யப்பட்ட திருத்தச் சட்டம்தான். இதற்கான மசோதா 2.12.1970ல் தமிழக சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதன் முக்கிய கூறு, இந்துக் கோவில்களின் எல்லாப் பகுதிகளின் நியமனத்திலும் பாரம்பரிய (வாரிசு அடிப்படையில் நியமனம்) கொள்கையை நீக்குவது (பிரிவு55ல் செய்யப்பட்ட திருத்தம்).

இந்தச் சட்டத்தை எதிர்த்து சேஷம்மாள் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். உச்ச நீதிமன்றத்தில் எஸ்.எம். சிக்ரி, ஏ.என். குரோவர், ஏ.என். ரே, டி.ஜி. பாலேகர், எம்.எச். பெக் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து 1972 மார்ச் 15ஆம் தேதி தீர்ப்பு வழங்கினர். ஒரு கோவிலில் அர்ச்சகரை நியமனம் செய்யும்போது, ஆகமங்களை மீறி அறங்காவலர் நியமனங்களை மேற்கொள்ள மாட்டார் என்று அரசு கூறியதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குறிப்பிட்ட இனம், உட்பிரிவு, குழுவிலிருந்தே அர்ச்சகரை நியமிக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டியது. ஆனாலும் மனுதாரரின் அச்சத்திற்கு இப்போது அவசியமில்லை என்று கூறி சேஷம்மாளின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

சட்டத்தை எதிர்த்தவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகத் தோன்றினாலும் ஆகமத்திற்கு உட்பட்டே நியமனங்களைச் செய்ய வேண்டும் என்பதை இந்த உத்தரவு வலியுறுத்தியது. இந்த நீதிமன்ற உத்தரவை பெரியார் கடுமையாக விமர்சித்தார். 1973 டிசம்பர் 8-9ல் பெரியார் திடலில் நடந்த தமிழர் சமுதாய இழிவு மாநாட்டில் பேசிய பெரியார், நண்பர் கருணாநிதி கொண்டுவந்த சட்டத்தை நீதிமன்றம் செல்லாது என்று ஆக்கியதால் ஆத்திரம் அதிகமாவிட்டதாகக் குறிப்பிட்டார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் அரசியல் சாஸனப் பிரிவு 25ஐப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்குவதற்கு ஏதுவாக அந்தப் பிரிவை நீக்க வேண்டுமென கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்த ஆரம்பித்தார். பிரதமருக்கு கடிதங்களை எழுதினார். பிரிவு திருத்தப்படவில்லை.

எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த பிறகு 1982ல் நீதியரசர் மகாராஜன் தலைமையில் கோவில் வழக்கங்களில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழுவும் அனைத்து ஜாதியினரும் உரிய பயிற்சிக்குப் பிறகு அர்ச்சகராக நியமிக்கப்படலாம் என்று கூறியது. ஆனால், அதற்கு முன்பாக அரசியல் சாஸன சட்டப்பிரிவு 25 -2ல் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கூறியது.

இதற்குப் பிறகு பல ஆண்டுகள் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் 2002ல் ஆதித்யன் Vs கேரள அரசு என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதின்றம், "ஆகமங்கள், மதப் பழக்க வழக்கங்கள் போன்றவை 'எல்லோரும் சமம்' என்ற இந்திய அரசியல் சாஸனத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக இருந்தால், அவை சட்டரீதியாக செல்லாது என்று கூறி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க முடியும் என்று தீர்ப்பளித்தது.

இதற்குப் பிறகு, 2006ஆம் ஆண்டில், மீண்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான அரசாணையை வெளியிட்டது. இதற்கான சட்டமும் இயற்றப்பட்டது.

அந்த அரசாணையின் அடிப்படையில், நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம், பயிற்சிக் காலம், கோவில்களில் நடைபெறும் பூஜை முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து பரிந்துரைகளை அளித்தது.

இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னை பார்த்தசாரதி கோவில், திருவரங்கம் ஆகிய இடங்களில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் மதுரை, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் உருவாக்கப்பட்டன.

இவர்களில் இருந்து ஒவ்வொரு மையத்திற்கும் 40 பேர் வீதம் ஆறு மையங்களுக்குமாக சேர்த்து 240 பேர் பயிற்சிக்காகத் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களுக்கான பயிற்சிகள் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது. அடுத்த 13 மாதங்களில் தமிழ் மந்திரங்கள், பூஜை முறைகள், கோவில்களின் பழக்க வழங்கங்கள் ஆகியவை தொடர்ந்து கற்பிக்கப்பட்டன.

240 பேரில் 33 பேர் பயிற்சிக் காலத்தில் விலகிவிட, 207 பேர் முழுமையாக பயிற்சியை முடித்தார்கள்.

ஜாதி அர்ச்சகர்

ஆனால், இதற்கிடையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் நீதிமன்றத்தை அணுகி, பணி நியமனத்திற்கு தடை உத்தரவைப் பெற்றது. பயிற்சி பெற்ற மாணவர்கள் 2008ஆம் தீட்சையை முடித்துவிட்ட நிலையில், இவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆனால், வழக்கின் முடிவின் அடிப்படையில்தான் பணி நியமனங்கள் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பயிற்சி பெற்ற மாணவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதற்கு இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன.

2011ல் புதிதாகப் பதவியேற்ற அ.தி.மு.க. அரசு இந்த விவகாரத்தில் பெரிதாக ஆர்வம்காட்டவில்லை. இதற்குப் பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. "தமிழக கோவில்களில் ஆகமவிதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்கும் மரபு உள்ள இடங்களில் அதே முறைப்படி நியமிக்க வேண்டுமென்றும் ஆகம விதிகளின் கீழ் அர்ச்சகர் நியமனங்கள் நடக்கும்போது, பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றங்களை அணுகி, தனித்தனியாக நிவாரணம் கோர வேண்டுமென்றும்" உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெரிவித்தது.

ஆனால், இந்தத் தீர்ப்பின் மூலம் எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாமா என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லை என அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் கருதினர். தமிழ்நாடு அரசும் இது தொடர்பாக தன்னுடைய நிலைபாடு எதையும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டில் மதுரையில் அழகர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறிய ஐயப்பன் கோவிலில் மாரிமுத்து என்ற பயிற்சிபெற்ற மாணவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். ஆனால், இது தொடர்பான அறிவிப்பு எதையும் இந்து சமய அறநிலையத் துறை வெளியிடவில்லை.

இதற்குப் பிறகு 2020ஆம் ஆண்டில் மதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் தியாகராஜன் என்ற பயிற்சி பெற்ற மாணவர் நியமிக்கப்பட்டார்.

இதன் பின்னர் 2021ஆம் ஆண்டு தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு, அந்த ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி முடித்த 28 பேருக்கு பணிகள் வழங்கப்பட்டன.

இந்த நியமனங்களை எதிர்த்தும் புதிய விதிகளை எதிர்த்தும்தான் வழக்குகள் தொடரப்பட்டன.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: