செஸ் ஒலிம்பியாட்: நரேந்திர மோதி படத்துடன் தயார் நிலையில் மேடை - கடைசி நேர பரபரப்பு

44ஆவது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் படத்தை பேனர்களில் இடம்பெறச் செய்யவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், எல்லா இடங்களிலும் மோதியின் படத்தை வைத்து நிகழ்ச்சிக்கு ஆயத்தமாகியிருக்கிறது தமிழ்நாடு அரசு.

சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட், மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் சென்னை நகரின் முக்கிய சந்திப்புகள், சாலைகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் நிகழ்ச்சிப் பகுதியில் பிரதமர் நரேந்திர மோதியின் பெயர் மற்றும் படங்கள் சரியான வகையில் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியினர் கடந்த இரண்டு தினங்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

பல இடங்களில் இடம்பெற்ற விளம்பர டிஜிட்டல் போர்டுகளில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் படம் மட்டுமே இடம் பெற்றிருந்தது.

இந்த நிலையில், சென்னை முழுவதும் உள்ள செஸ் ஒலிம்பியாட் விளம்பர போர்டுகளில் பிரதமர் மோதியின் படத்தை கம்யூட்டர் பிரின்டிங் செய்து அதை பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஒட்டினர்.

முன்னதாக, ஜூலை 26ஆம் தேதி நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் சுடர் ஓட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோதியின் பெயர் குறிப்பிடப்படாததால் வருத்தத்தை வெளிப்படுத்தும் விதமாக பல நகரங்களில் பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இதற்கிடையே, பாரதிய ஜனதா கட்சியினர் எங்கெல்லாம் பிரதமர் மோதியின் படத்தை ஒட்டியிருந்தனரோ அங்கெல்லாம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களாக அறியப்படும் சிலர் கறுப்பு மை பூசி மோதியின் படத்தை அழிக்கத் தொடங்கினர். இது குறித்த தகவலறிந்ததும் காவல்துறையினர் வந்து அந்த கும்பலை கைது செய்தனர்.

இந்த நிலையில், பிரதமர் மோதியின் படத்தை அனைத்து விளம்பர பேனர்கள், நிகழ்ச்சி பேனர்களில் இடம்பெற வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பல இடங்களில் பிரதமர் மோதி இல்லாமல் இருந்த விளம்பர ஃபிளஸ்க் பேனர்கள் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டு மோதி ஒருபுறமும் முதல்வர் ஸ்டாலின் ஒருபுறமும் இருக்கக் கூடிய பேனர்கள் இடம்பெறச் செய்யப்பட்டன.

மாமல்லபுரத்தில் புதன்கிழமை மாலையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் சுடர் வரவேற்பு நிகழ்வு மேடையில் பிரதமர் மோதியின் படம் ஒரு புறமும் முதல்வர் ஸ்டாலினின் படம் மறுபுறமும் இருக்கும் வகையிலேயே பேனர் இடம்பெற்றிருந்தது.

இது குறித்து தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "சில இடங்களில் பிரதமர் மோதியின் படத்தை அழிப்பதாகக் கூறி சிலர் நடந்து கொண்ட விதம் வருத்தம் அளிக்கிறது. எல்லா இடங்களிலும் பிரதமர் மோதியின் படம் இருக்கும் வகையில் உறுதிப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சென்னை ஒலிம்பியாட் ஒரு சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சி. அது தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கக் கூடிய விஷயம். இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் வருவதும் தமிழ்நாட்டுக்கு பெருமை தரும் விஷயம். அவருக்குரிய மரியாதையில் எந்த வகையிலும் குறைவு இருக்கக் கூடாது. அதை நாங்கள் உறுதிப்படுத்தி இருக்கிறோம். இந்த விளையாட்டு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேற எல்லோரும் ஒத்துழைப்பு தர வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.

பிரதமரின் படத்துக்கு சிலர் கறுப்பு மை ஸ்ப்ரே தெளித்தது குறித்து கேட்டபோது, "அத்தகைய செயலில் யார் ஈடுபட்டிருந்தாலும் அது தவறுதான்," என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

பிரதமரின் படத்தை ஒட்டிய பாஜகவினர்

முன்னதாக, புதன்கிழமை காலையில், பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு அணியின் தலைவரான அமர் பிரசாத் ரெட்டி தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டார். அதில், மத்திய அரசால் தான் தமிழ்நாடு அரசுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த வாய்ப்பு கிடைத்ததாகக் கூறியிருந்தார்

"முதலமைச்சரின் அதிகார வரம்பு தமிழ்நாட்டுக்குள்ளேயே முடிவடைகிறது. செஸ் ஒலிம்பியாட் ஒரு சர்வதேச நிகழ்ச்சி," என்றும் "பிரதமர் மோதியின் படத்தை பேனர்களிலோ நிகழ்ச்சிப் பகுதிகளிலோ சேர்க்காமல், செஸ் போட்டிக்கான விளம்பரத்தை மாநிலத்தில் ஆளும் திமுக அரசு முன்னெடுத்துச் சென்றது பெரும் தவறு," என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

"இது திமுக கட்சி விழா அல்ல. இது மத்திய அரசு (ஸ்பான்சர் செய்யப்பட்ட) ஆதரவு நிகழ்வு. பிரதமரின் படம் கட்டாயம் நிகழ்ச்சியில் இடம்பெற வேண்டும்" என்று அவர் காணொளியில் கூறியிருந்தார்.

மேலும், மற்றொரு காணொளியில் பிரதமரின் படத்தை பேருந்து நிலைய ஃபிளக்ஸ் பேனரில் ஒட்டும் காணொளியையும் அமர் பிரசாத் ரெட்டி ஒட்டினார்.

இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், இந்தியாவுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கக் கூடிய நிகழ்ச்சியில் பாரத பிரதமரின் படத்தை வைக்க வேண்டும் என்பதை எனது வேண்டுகோளாக வைக்கிறேன் என்று கூறினார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பரந்த மனப்பான்மையுடன் பிரதமர் மோதியின் படத்தை ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கான விளம்பர பேனர்களிலும் நிகழ்ச்சி மேடையிலும் வைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

விழாக்கோலம் பூண்ட சென்னை - மாமல்லபுரம் பகுதிகள்

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியையொட்டி சென்னை முதல் மாமல்லபுரம் வரையிலான சாலைகள் வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன. சென்னையில் விழாவையொட்டி கடற்கரையில் இருந்து அரசு தலைமைச்செயலகம் செல்லும் சாலையில் அமைந்துள்ள நேப்பியார் பால சாலையிலும் பக்கவாட்டுப்பகுதியிலும் சதுரங்கத்தை குறிக்கும் வகையில் பூசப்பட்ட கறுப்பு, வெள்ளை வண்ண சதுரங்க பெட்டிகள் மற்றும் சாலையின் இருபுறமும் வண்ண விளக்குகள் அந்த பகுதிக்கு ஒளிரூட்டியுள்ளன. அதில் வாகனங்கள் செல்வது புதிய அனுபவத்தை நகரவாசிகளுக்கு கொடுத்தது.

ஜூலை 28ஆம் தேதி மாலை 6 மணியளவில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சென்னை ஒலிம்பியாட் துவக்க விழா நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோதி, ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோதி சென்னை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை மாலையில் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் அடையாறில் உள்ள இந்திய கடற்படை முகாமுக்கு செல்கிறார். பின்னர் சாலை வழியாக ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டரங்க நிகழ்ச்சிக்கு செல்கிறார். இரவு அவர் ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.

மறுதினம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். பிறகு அங்கிருந்து சாலை வழியாக சென்னை விமான நிலையத்துக்குப் புறப்படுகிறார்.

பிரதமரின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் பணியில் 22 ஆயிரம் போலீஸார்

முன்னதாக, பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி மற்றும் மாமல்லபுரத்துக்கு செல்லும் சாலைகளில் மிக முக்கிய பிரமுகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படுவதையொட்டி அந்த பாதையில் இருந்த கடைகளை மூடவும் சில இடங்களில் கட்டுமானங்கள் நடந்தால் அதை நிறுத்தி வைக்கவும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர். பிரதமர் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் நடைபறவுள்ள நேரு உள் விளையாட்டரங்கத்தின் பக்கத்தில் உள்ள பகுதிகளிலும் கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க காவல்துறையினர் கேட்டுக் கொண்டதாக தெரிய வந்தது.

இதற்கிடையே, பிரதமர் மோதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் யாராவது அசம்பாவிதத்தில் ஈடுபட்டால் அவர்களை கண்காணித்து கைது நடவடிக்கை மேற்கொள்ள சென்னை முழுவதும் போலீஸார் முழு உஷார் நிலையில் இருப்பதாக நகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

சென்னை நகரில் மட்டும் பாதுகாப்புப் பணியில் 22 ஆயிரம் காவலர்கள், நான்கு கூடுதல் ஆணையர்கள், 7 இணை ஆணையர்கள் மற்றும் 26 துணை ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

வானில் எதையும் பறக்க விட முழு தடை விதிக்கப்படுள்ளதாகவும் அப்போது அவர் கூறினார். சிறிய ரக ட்ரோன் விமானங்கள் மற்றும் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் உள்ளிட்டவைகளை பறக்கவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: