You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எடப்பாடி பழனிசாமி பேட்டி: "ஓ.பி.எஸ். வருவார் என்று இருக்கையெல்லாம் போட்டிருந்தோம்"
பொதுக்குழுக் கூட்டத்தில் ஓ.பி.எஸ். கலந்துகொள்வார் என்று இருக்கையெல்லாம் போட்டிருந்தோம் என்று தெரிவித்தார் தற்போது அதிமுக தற்காலிகப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி.
தாற்காலிகப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல்முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பாக தமிழ்நாடு அரசையும், ஓ.பி.எஸ்.சையும் கடுமையாக குற்றம்சாட்டிப் பேசினார்.
அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசியதில் முக்கிய அம்சங்கள்:
- அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு வேண்டும் என்று காவல் நிலையத்திலும், காவல் ஆணையரிடத்திலும் கேட்டிருந்தோம். ஆனால் அவர்கள் பாதுகாப்பு அளிக்கவில்லை
- ஓ.பி.எஸ். தன் சொந்தக் கட்சிக்காரர்கள் மீதே ரௌடிகளை அழைத்து வந்து கற்களைக் கொண்டு தாக்கியுள்ளார். அவர்கள்தான் அவருக்கு கட்சிப் பதவி தந்தவர்கள், அவரை துணை முதல்வர் ஆக்கியவர்கள். அவர்கள் தாக்கப்பட்டபோது அவர்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும்?
- மீன்பாடி வண்டியில் கற்களைக் கொண்டுவந்து வீசி எறிகிறார்கள். கற்களை எறிந்த ரௌடிகளை போலீசார் கைது செய்யவில்லை. அவர்களோடு சேர்ந்துகொண்டு காவல்துறை எங்கள் கட்சி நிர்வாகிகளை தாக்கியுள்ளனர்.
- பொதுக்குழுக் கூட்டம் முடிந்தவுடன் கட்சி நிர்வாகிகள் தலைமை அலுவலகம் வந்து இரண்டு தலைவர்களுக்கு மாலை அணிவிக்கத் திட்டமிட்டுவந்தார்கள். அதைத் தடுக்கும் வகையில் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
- இது அதிமுகவுக்கு மட்டும்தான் நடக்கிறது என்று நினைக்கவேண்டாம். எல்லாக் கட்சிக்கும் இந்த நிலை வரும்.
- ஓ.பி.எஸ்.சும், ஸ்டாலினும் சேர்ந்து போட்டத் திட்டம்தான் இது.
- தலைமை நிலையத்தில் இருந்த எல்லா பதிவேடுகளையும் அள்ளிச் சென்றிருக்கிறார்கள். இதற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கிறது. இது அவர்களது சொந்தச் சொத்தா? கார்ப்பரேட் கம்பெனியா? அள்ளிக்கொண்டு செல்வதற்கு? காலம் மாறும். அப்போது நாங்கள் பாடம் புகட்டுவோம்.
- ஓ.பி.எஸ். எந்தக் காலத்திலும் மக்களுக்கு நன்மை செய்ததில்லை. 98 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களோடு இருக்கிறார்கள். 2 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள்தான் அவர்களோடு இருக்கிறார்கள். இன்றைய பொதுக்குழுக் கூட்டத்தில் 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றார்கள்.
- சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய இந்த அரசு, பாதுகாப்பு தர தவறிவிட்டது. காவல்துறையில் புகாரளித்தும் பலனில்லை. தலைமைக்கழகத்தை காப்பாற்ற முயற்சித்த எங்கள் நிர்வாகிகள் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு காரணம் தமிழக அரசும், இன்று துரோகியாக இருக்கின்ற அண்ணன் ஓபிஎஸ் அவர்களும்தான்.
- சட்டரீதியாக எதிர்கொண்டு தலைமை அலுவலகத்தை மீண்டும் கைப்பற்றி அதைப் பொலிவோடு உருவாக்குவோம்.
என்று பேசினார் எடப்பாடி பழனிசாமி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்