'காதலுக்குக் கண்கள் இல்லை' - கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

காதல்

பட மூலாதாரம், Getty Images

(இலங்கை மற்றும் இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (16/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)

"காதலுக்கு கண்கள் இல்லை" என்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பெங்களூரு மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிசர்கா (வயது 19). இவர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில், அந்த கல்லூரியில் ஓட்டுனராக வேலை செய்த நிகில் (26) என்பவருடன் காதல் ஏற்பட்ட நிலையில், இதற்கு நிசர்காவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த மே 13-ம் தேதி முதல் நிசர்காவை காணவில்லை என்றும் அவரை நிகில் கடத்திச் சென்று இருக்கலாம் என்றும் கூறி நிசர்காவின் தந்தை நாகராஜ் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் வீரப்பா, ஹேமலேகா முன்னிலையில் நடந்தது. இந்த நிலையில், பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல்லில் வசித்து வந்த நிசர்கா, நிகிலை போலீசார் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, நிசர்கா "தனக்கு 18 வயது பூர்த்தி அடைந்து விட்டதாகவும், எனது வாழ்க்கையை தீர்மானிக்கும் முடிவு என்னுடையது. எனக்கும், நிகிலுக்கும் திருமணம் முடிந்து விட்டது. இனி கணவருடன் தான் வாழ்வேன்" எனக்கூறிய நிசர்கா, பெற்றோருடன் செல்ல மறுப்பு தெரிவித்ததாக, 'தினத்தந்தி' செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது பேசிய நீதிபதிகள், "குழந்தைகளுக்காக பெற்றோர்கள் தங்களது உயிரை தியாகம் செய்யவும், பெற்றோருக்காக குழந்தைகள் தங்கள் உயிரை தியாகம் செய்யவும் தயாராக இருக்கின்றனர் என்பதை நமது வரலாறு வெளிப்படுத்துகிறது. பெற்றோர்-குழந்தைகள் இடையே அன்பு, பாசம் இருந்தால் குடும்பத்தில் விரிசல் ஏற்படாது. இந்த வழக்கில் பெற்றோரின் அன்பை விட காதல் சக்தி வாய்ந்த ஆயுதம் என்பது வெளிப்படுகிறது. காதலுக்குக் கண்கள் இல்லை" என்று கூறி, நாகராஜின் ஆட்கொணர்வு மனுவையும் தள்ளுபடி செய்ததாக, அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

'ஆபரேஷன் கந்துவட்டி': தமிழ்நாடு முழுவதும் ஒரு வாரத்தில் 124 புகார் மனுக்கள், 89 எஃப்ஐஆர், 32 பேர் கைது

சைலேந்திர பாபு

பட மூலாதாரம், SYLENDRA BABU

'ஆபரேஷன் கந்துவட்டி' சிறப்பு ஆய்வின் மூலம் ஒரு வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார் என, 'இந்து தமிழ் திசை' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடலூர், புவனகிரி அருகே கந்துவட்டி கொடுமையால் ஆயுதப்படைக் காவலர் செல்வக்குமார் தற்கொலை செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து, கந்துவட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க 'ஆபரேஷன் கந்துவட்டி' என்ற பெயரில் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், "கடந்த ஒரு வாரத்தில், தமிழ்நாடு முழுவதும் கந்துவட்டி மற்றும் மீட்டர் வட்டி தொடர்பாக 124 புகார் மனுக்கள் காவல் நிலையங்களில் பெறப்பட்டுள்ளன. இதில் 89 புகார் மனுக்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டடு, 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள புகார்களின் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

கந்துவட்டி குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 22 பேரின் வீடுகளிலிருந்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஆவணங்களான பூர்த்தி செய்யப்படாத காசோலைகள், புரோ நோட்டுக்கள், கையெழுத்திடப்படாத ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 7 வழக்குகள், நாமக்கல் மாவட்டத்தில் 6 வழக்குகள் மற்றும் சேலம் மாநகரில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளதாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயிரிடப்படாத நிலங்களை இளைஞர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை - இலங்கை ஜனாதிபதி

கோட்டாபய ராஜபக்ஷ

பட மூலாதாரம், Getty Images

அரசுக்கு சொந்தமான, பயிரிடப்படாத நிலங்களைக் கண்டறிந்து, பயிர்ச்செய்கையில் ஆர்வமுள்ள இளைஞர்களிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயம், உணவுப் பாதுகாப்பு, பொதுமக்களுக்கான சேவைகளை வினைத்திறனாக்க புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்துதல், மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்கல் மற்றும் அரச செலவினத்தை முகாமைத்துவம் செய்தல் தொடர்பில் நேற்று முற்பகல் கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அப்போது, "உலகின் பல நாடுகள் உணவுப் பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நாட்டின் அறுவடை விநியோகத்தின்போது, சுமார் 40% சதவீதம் அழிக்கப்படுகிறது. இது தொடர்பில் கடுமையான அவதானம் செலுத்துவதன் மூலம் பாரியளவிலான உணவுப் பொருட்களை பாதுகாக்க முடியும்.

அறுவடையை விநியோகிப்பதில் இடைத்தரகர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் விவசாயிக்கும் நுகர்வோருக்கும் நியாயமான விலையை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

அரசுக்கு சொந்தமான, பயிரிடப்படாத நிலங்களைக் கண்டறிந்து, பயிர்ச்செய்கையில் ஆர்வமுள்ள இளைஞர்களிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முப்படைகள், சிவில் பாதுகாப்புப் படை மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களமும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக உள்ளன.

அந்த நிறுவனங்களையும் விவசாயத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் வெற்றிகரமான பிரதிபலன்களை அடைய முடியும்" என தெரிவித்ததாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அழுத்தமே இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் பதவி விலகக் காரணம் - ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கை மின் திட்டம்

இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ பாரதூர தவறிழைத்துள்ளார், ஜனாதிபதியின் அழுத்தமே அவர் பதவி விலகக் காரணம் என, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர், "ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எவ்வாறு தனக்கு அழுத்தம் பிரயோகித்தார் என்பதை எம்.எம்.சி பெர்டினாண்டோ மிகத் தெளிவாக கோப் குழுவில் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி அழுத்தம் பிரயோகித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தலைவர் பதவியை ராஜினாமா செய்வதன் மூலம் இதிலிருந்து அவரால் தப்பிக்க முடியாது.

இவரால் தெரிவிக்கப்பட்ட கருத்தினால் இலங்கையில் மாத்திரமின்றி இந்தியாவிலும் தீப்பற்றியுள்ளது.

இது நாட்டின் வலுசக்தியுடன் தொடர்புடைய பிரச்னை என்பதைப் போலவே, நாட்டின் எதிர்காலம் பற்றிய பிரச்னையுமாகும்" என தெரிவித்துள்ளதாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: