You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிருஷ்ணகுமார் குன்னத் உடலில் காயங்கள் - விசாரணையைத் தொடங்கிய கொல்கத்தா போலீஸ்
பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத், மே 31-ஆம் தேதியன்று, மாரடைப்பால் உயிரிழந்தார். நேற்று கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பாடிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சியின்போது அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் கோளாறால், சிஎம்ஆர்ஐ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர், உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
மருத்துவமனைக்கு வந்த மாநில அமைச்சர் அருப் பிஸ்வாஸ், செய்தியாளர்களிடம் கே.கே-யின் மரணத்தை உறுதி செய்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மருத்துவர்கள், முதல்கட்ட கணிப்பின்படி, கே.கே. மாரடைப்பால் இறந்ததாகத் தெரிவிக்கின்றனர். ஆனால், மூல காரணத்தை அறிவதற்காக உடற்கூறாய்வுக்கு அவருடைய உடல் அனுப்பப்பட்டுள்ளது," எனத் தெரிவித்தார்.
செவ்வாய் கிழமை இரவு ஒரு கல்லூரியில் நேரலை நிகழ்ச்சியின்போது கேகே-யின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. அதனால் விடுதிக்குத் திரும்பியவரின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், அவர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
'முகம் மற்றும் தலையில் காயங்கள்'
கேகே, அழைத்துச் செல்லப்பட்ட தனியார் மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் பேசும்போது, "அவருடைய முகம் மற்றும் தலையில் காயங்கள் இருந்ததாகவும் அவை விடுதி அறையில் கீழே விழுந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினார். மேலும், அந்த அதிகாரி கேகே இரவு பத்து மணியளவில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டார்", என்றார்
அவருடைய மனைவி, மகன் மற்றும் மகள் மும்பையில் இருந்து வரக் காத்திருக்கிறார்கள். அதன் பின்னர், அவருடைய உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இயற்கைக்கு மாறான மரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் கொல்கத்தா காவல்துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது.
54 வயதான கேகே என்றழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், இந்திய சினிமா துறையில் குறிப்பிடத்தக்க பின்னணி பாடகராகத் தடம் பதித்தவர்.
இசையில் பயிற்சி இல்லாமல் சினிமாவில் பாடியவர்
90-களின் தலைமுறையினரால் பெரிதும் கொண்டாடப்பட்ட பல்வேறு பாடல்களை அவர் பாடியுள்ளார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அவர், இசைத் துறையில் எந்தவித முறையான பயிற்சியும் இல்லாமலே, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, பெங்காளி, குஜராத்தி மொழிகளில் பல்வேறு பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றார்.
கேகே 1968, ஆகஸ்ட் 23-ஆம் தேதியன்று, சி.எஸ்.மேனன் மற்றும் குன்னத் குனகவள்ளி ஆகியோருக்குப் பிறந்தார். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு குறைந்த காலகட்டத்திற்கு மார்க்கெட்டிங் அசோசியேட்டாக பணியாற்றியவர், இசைத் துறையில் ஈடுபடுவதற்காக மும்பைக்கு இடம் பெயர்ந்தார்.
1996-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். தமிழ் சினிமாவில் 1997-ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு திரைப்படத்தில் பிரபல பாடலான ஸ்டிராபெர்ரி கண்ணே என்ற பாடல் முதல், காதல் வளர்த்தேன், உயிரின் உயிரே, காதலிக்கும் ஆசை இல்லை, அப்படி போடு எனப் பல பிரபல பாடல்களைப் பாடியவர், தமிழ் திரைப்படங்களில் இதுவரை அவர் சுமார் 66 பாடல்களைப் பாடியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோதி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் இறப்புக்கு, "கேகே என்று பிரபலமாக அறியப்பட்ட கிருஷ்ணகுமார் குன்னத்தின் எதிர்பாராத மரணம் வருத்தமளிக்கிறது. அவருடைய பாடல்கள் அனைத்து வயதினரின் மனதிலும் பலவிதமான உணர்ச்சிகளை ஏற்படுத்தின. அவருடைய பாடல்களின் வழியாக நாம் அவரை நினைவில் வைத்திருப்போம். அவருடைய குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கேகே-வின் இறப்புக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அதில், "எனது 'உயிரின் உயிரே' பிரிந்துவிட்டது. பாடகர் கேகே-வுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவர் கடைசியாகப் பாடிய கொஞ்சிக் கொஞ்சி பாடலை உலகம் புகழ்ந்துகொண்டிருக்கும் போது இந்த அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்," என்று தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு ட்விட்டர் முழுவதும் ரசிகர்கள் அவருடைய பாடல்களையும் அவை ஏற்படுத்திய தாக்கத்தையும் குறிப்பிட்டு தங்களது இரங்கலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒருமுறை அவர் பிபிசியிடம் பேசியபோது, அவரிடம் ஒரு நல்ல பாடகர் என்பதற்கான வரையறை என்னவென்று கேட்டதற்கு, "என்னைப் பொறுத்தவரை ஓர் இசைக்கலைஞரின் பாடலைத் தன் சொந்தப் பாடலாகப் பாடக் கூடியவர்தான் நல்ல பாடகர். பாட்டு மகிழ்ச்சியாக இருக்கலாம் அல்லது உங்கள் மனநிலை வேறு மாதிரியாக இருக்கலாம். ஆகவே, ஒரு நாளைக்கு ஒரு பாடலை மட்டுமே பதிவு செய்கிறேன். பாடகர் தானே பாடலை உணர முடியாமல் போனால், கேட்பவர் எப்படி அதை முழுமையாக உணர முடியும்?" என்றார் கேகே.
காதல் தேசம் முதல் தி லெஜண்ட் வரை
தமிழில் 'காதல் தேசம்' படத்தில் கல்லூரி சாலை பாடலில் ஆரம்பித்த பாடகர் கிருஷ்ணகுமாரின் பயணம் இறுதியில் 'தி லெஜண்ட்' திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 'போ போ போ' பாடலோடு நிறைவடைந்து இருக்கிறது. கிருஷ்ணகுமாரோடு அந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி இயக்குநர் ஜேடி பகிர்ந்து கொண்டார். "காலையில் எழுந்ததும் தான் அவருடைய மரண செய்தி கேள்விப்பட்டேன். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. 'தி லெஜண்ட்' படத்திற்காக பாம்பேவில் அவருடன் பாடல் பதிவு செய்தோம். நீண்ட நாள் பழகியவர் போல முதன் முறை பார்த்த போதே மிகவும் நட்புடன் பழகக் கூடியவர். பாடல் பல முறை பாட சொல்லி டேக் எடுத்தாலும் சலிப்பு காட்டாமல் உற்சாகமாக வேலை செய்து தருவார்.
ஹாரிஸ் ஜெயராஜூக்கும் அவருக்கும் இடையில் நல்ல நட்பு இருந்தது. காலம் கடந்து இந்த கலைஞனின் குரல் நிலைத்து நிற்கும். அவர் இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. வாழ்வின் நிலையாமையை சொல்லி செல்லும் நாட்கள்" என வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார்.
பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல் தனது சமூக வலைதள பக்கத்தில், 'கேகே இறந்து விட்டார் எனும் செய்தியை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. உணர்ச்சிகளற்ற நிலையில் இருக்கிறேன். இந்த செய்தியை எடுத்து கொள்வதற்கே கடினமாக இருக்கிறது. என் மனம் தற்போது அமைதி இழந்து இருக்கிறது. நான் இதுவரை சந்தித்த மனிதர்களில் மிகவும் நல்ல உள்ளம் கொண்டவர்.
தன்னை சுற்றி இருப்பவர்களிடம் அன்பை மட்டுமே பகிர்ந்து இருக்கிறார். அப்படியான ஒருவர் தான் இப்போது கடவுளுக்கு தேவைப்படுகிறாரா? இது கருணையற்றது. அவருடைய குடும்பம் இதில் இருந்து எப்படி மீள்வார்கள் என்று நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது. என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். அவருடைய ஆத்மார்த்தமான குரல் நம் இதயத்தில் எப்போதும் ஒலிக்கும்' என்று கூறியுள்ளார்.
இதே போல, பின்னணி பாடகரான ஆலப்ராஜூ, தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த 2012-ல் முதல் முறையாக இசையமைப்பாளர் ஹார்ஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சி ஒன்றில் கேகே-வை சந்தித்தை நினைவுகூர்கிறார்.
'முதல் முறையாக அவரை நான் மேடையின் பின்புறம் தான் சந்தித்தேன். முகத்தில் எப்போதும் புன்னகையோடு அன்போடு எல்லாரையும் சமமாக நடத்தினார். எப்படி அந்த நாளை நான் மறப்பேன். உங்களுடைய இசையும் குரலும் எப்போதும் இருக்கும். சொர்க்கம் இப்போது அதிர்ஷ்டவசமானது' என அவரை பற்றி கூறியிருக்கிறார்.
இவர்கள் மட்டுமில்லாமல், பின்னணி பாடகி சித்ரா, இசையமைப்பாளர் தமன் என இசையௌலகை சேர்ந்த பலரும் கேகே-வின் இந்த திடீர் மறைவுக்கு தங்களது இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்