மங்கள் பாண்டே: சிப்பாய் கலகத்தின் முதல் தோட்டா விசையை அழுத்திய வீரர்

மங்கள் பாண்டேயின் புகைப்படம்

பட மூலாதாரம், NIYOGI BOOKS

படக்குறிப்பு, மங்கள் பாண்டேயின் புகைப்படம்
    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், கல்கத்தாவிலிருந்து 16 மைல் தொலைவில் உள்ள பாரக்பூர், அமைதியான ராணுவ கண்டோன்மெண்டாக இருந்தது. கிழக்கு இந்தியாவில் மிக அதிகமான இந்திய ராணுவ வீரர்கள் இங்குதான் நிறுத்தப்பட்டிருந்தனர்.

மேலும் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலின் வீடும் இங்கு இருந்தது. 1857 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சியின் முதல் எக்காளம் இந்த கன்டோன்மென்ட்டில் இருந்து ஒலிக்கும் என்று யாரும் கற்பனை கூட செய்திருக்க முடியாது.

1857 மார்ச் 29, இது ஒரு ஞாற்றுக்கிழமை. ஆனால் ஞாயிறு மதியத்தின் அமைதியை மங்கள் பாண்டே என்ற ராணுவ வீரர் குலைத்தார்.

பிரபல வரலாற்றாசிரியர் ருத்ராங்ஷு முகர்ஜியின் புத்தகம்

பட மூலாதாரம், ROLI BOOKS

படக்குறிப்பு, பிரபல வரலாற்றாசிரியர் ருத்ராங்ஷு முகர்ஜியின் புத்தகம்

பிரபல வரலாற்றாசிரியர் ருத்ராங்ஷு முகர்ஜி தனது 'டேட்லைன் 1857 ரிவோல்ட் அகெயின்ஸ்ட் தி ராஜ்' என்ற புத்தகத்தில், 'அப்போது மங்கள் பாண்டே தனது படைப்பிரிவின் கோட் அணிந்திருந்தார்.

ஆனால் கால்சட்டைக்கு பதிலாக அவர் வேட்டியை அணிந்திருந்தார். அவர் வெறுங்காலுடன் இருந்தார். அவருக்கு அருகில் தோட்டாக்கள் நிறைந்த ஒரு துப்பாக்கி இருந்தது. அங்கு வந்த ராணுவ வீரர்களிடம் அவர் , ஆங்கிலேயர்கள் இங்கே இருக்கிறார்கள்.

நீங்கள் ஏன் தயாராக மறுக்கிறீர்கள்? இந்தத் தோட்டாக்களைக் கடித்தால், நாம் மத ஆசார அனுஷ்டானங்களை மீறியவர்களாகி விடுவோம். மதத்திற்காக எழுந்து நில்லுங்கள். இதையெல்லாம் செய்ய என்னைத் தூண்டிவிட்டீர்கள். ஆனால் இப்போது என்னை ஆதரிக்கவில்லை என்று சொன்னதாக" எழுதியுள்ளார்.

வீரர்கள் பயன்படுத்திய பிரவுன் பீஸ் துப்பாக்கி

மங்கள் பாண்டேவின் எதிர்ப்பு மனப்பான்மைக்குக் காரணம் பிரிட்டிஷ் ராணுவத்தில் இன்ஃபீல்ட் பி-53 துப்பாக்கிகளில் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள். 1856ஆம் ஆண்டுக்கு முன் இந்திய வீரர்கள் பிரவுன் பீஸ் என்ற துப்பாக்கியை பயன்படுத்தினர்.

1856 ஆம் ஆண்டில் இந்திய வீரர்களின் பயன்பாட்டிற்காக ஒரு புதிய துப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த துப்பாக்கியில் தோட்டாக்களை உள்ளே போடுவதற்கு கார்ட்ரிட்ஜை வாயால் கடிக்க வேண்டியிருந்தது.

இந்த துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் கார்ட்ரிட்ஜ்களில் பசு மற்றும் பன்றியின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய வீரர்கள் மத்தியில் வதந்தி பரவியது. இது தங்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக ராணுவ வீரர்கள் நம்பினர்.

இந்திய வீரர்களை இழிவுபடுத்துவதற்காக ஆங்கிலேயர்கள் வேண்டுமென்றே இதைச் செய்தார்கள் என்பது இந்திய வீரர்களிடையே நிலவிய பொதுவான கருத்து. அதற்குப் பின்னால் இன்னொரு கதையும் இருந்தது.

1857 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வீரர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர்

பட மூலாதாரம், ROLI BOOKS

படக்குறிப்பு, 1857 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வீரர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர்

பிராமணர் Vs தாழ்த்தப்பட்ட சிப்பாய் பகை உணர்வு

லெப்டினன்ட் ஜே.ஏ.ரைட், மங்கள் பாண்டே மீதான விசாரணையில் சாட்சியம் அளித்தபோது இதை குறிப்பிட்டுள்ளார். 'ஒருமுறை தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த கலாசி(கூலித்தொழிலாளி) ஒருவர், ஒரு பிராமண சிப்பாயின் பானையில் இருந்து தண்ணீர் குடிக்க விரும்பினார். அந்த தொழிலாளி தண்ணீரைக் குடிக்க சிப்பாய் அனுமதிக்கவில்லை. அத்தகைய செயல் தனது தண்ணீர் பானையை மாசுபடுத்திவிடும் என்று அவர் கூறினார்.

அதற்கு தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரர், "விரைவில் உங்கள் ஜாதியின் கெளரவமே இருக்காது. ஏனென்றால் நீங்கள் பன்றி மற்றும் மாட்டு கொழுப்பால் செய்யப்பட்ட கார்ட்ரிட்ஜ்களை கடிக்க வேண்டியிருக்கும்," என்றார்.

அவர்களின் சாதியையும் மதத்தையும் கெடுக்க அரசு முனைந்துள்ளது என்ற செய்தி விரைவில் காட்டுத்தீயாக பரவியது.இதனால் வீரர்கள் புதிய கார்ட்ரிட்ஜ்களை பயன்படுத்த மறுத்தனர்.

1857 பிப்ரவரி 2 ஆம் தேதி பாரக்பூரில் நடந்த மாலை அணிவகுப்பின் போது, இரண்டாவது நேட்டிவ் (இந்தியர்கள்) காலாட்படையின் வீரர்கள், இன்ஃபீல்ட் ரைஃபிள்களில் பயன்படுத்தப்படும் கார்ட்ரிட்ஜ்கள் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

அதிகாரிகளை எச்சரித்த சிப்பாய்கள்

இந்திய வீரர்கள் ஒன்றாகக்கூடி ஆங்கிலேய அதிகாரிகளை இரவில் கொல்லத் திட்டமிடுவதாக, ஆங்கிலேய அதிகாரிகளுக்கு விசுவாசமான வீரர்கள் தெரிவித்தனர். புர்ஹான்பூரில் நிலைகொண்டிருந்த 19 வது நேட்டிவ் காலாட்படையின் வீரர்களிடமிருந்து மிகக் கடுமையான எதிர்ப்பு வந்தது.

அவர்கள் புதிய கார்ட்ரிட்ஜ்களை பயன்படுத்த மறுத்ததால் ஆங்கிலேயர்கள் இந்த எதிர்ப்பைக் கட்டுப்படுத்த தங்கள் சேமிப்பு கிடங்கில் இருந்து ஆயுதங்களை கொண்டுவந்தனர்.

அதே நாளன்று இந்த வீரர்கள் பாரக்பூரில் ஒரு தந்தி அலுவலகத்தை எரித்தனர் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகளின் வீடுகள் மீது நெருப்பு அம்புகளை வீசினர்.

ஜே.டபிள்யூ.கே தனது 'தி ஹிஸ்ட்ரி ஆஃப் தி சிப்பாய் வார்' என்ற புத்தகத்தில், 'பிளாசி போருக்கு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1857 இல் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி முடிவுக்கு வரும் என்று அப்போது பிரபலமாக இருந்த வதந்தியுடன் இதற்கு தொடர்பு இருக்கலாம்.' என்று எழுதுகிறார்.

1857 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிந்த வீரர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1857 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிந்த வீரர்கள்

லெப்டினன்ட் போவை நோக்கி முதல் தோட்டாவை சுட்ட மங்கள் பாண்டே

மங்கள் பாண்டே தனது 22வது வயதில் 1849 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியின் வங்காள ராணுவத்தில் சேர்ந்தார். 1857 , மார்ச் 15 மற்றும் 27 க்கு இடையில் மங்கள் பாண்டே, ஹனுமான் மற்றும் சிவனை தொடர்ந்து வணங்கினார்.

மார்ச் 29, மாலை 5:10 மணிக்கு மங்கள் பாண்டே சலசலப்பைத் தொடங்கியவுடன், லெப்டினன்ட் பிஎச் போ அணிவகுப்பு மைதானத்தை அடைந்தார்.

மங்கள் பாண்டே அவரைப் பார்த்ததும் துப்பாக்கியால் சுட்டார். அது அவரது குதிரையின் காலில் பட்டது. குதிரை கீழே விழுந்தது. எழுந்து நின்ற பிஎச் போ மங்கள் பாண்டேயை நோக்கிச்சுட்டார். அது மங்கள் பாண்டே மீது படவில்லை. அதற்குள் சார்ஜென்ட் மேஜர் ஹெவ்சனும் போவின் பின்னால் வந்தார்.

பி.ஜி.ஒ டெய்லர் தனது ' வாட் ரியலி ஹேப்பெண்ட் ட்யூரிங் தி ம்யூட்டினி' என்ற புத்தகத்தில், 'சூழ்நிலையைப் பார்த்து, ஹெவ்சன் மற்றும் போ இருவரும் தங்கள் வாள்களை வெளியே எடுத்தனர். வாள்களைத் தவிர, அவர்களிடம் கைத்துப்பாக்கியும் இருந்தது. மங்கள் பாண்டே தனது வாளால் போ மற்றும் ஹெவ்சன் இருவரையும் தாக்கினார். அங்கிருந்த இந்திய வீரர்கள் அனைவரும் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். ஷேக் பால்டுவைத் தவிர வேறு யாரும் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு உதவ வரவில்லை. அவர் பின்னாலிருந்து மங்கள் பாண்டேயின் இடுப்பைப் பிடித்துக்கொண்டார். இதனால், பிரிட்டிஷ் அதிகாரிகள் இருவரும் தப்பியோடிவிட்டனர்.

மங்கள் பாண்டேவை பின்னால் இருந்து பிடிக்கும் ஷேக் பால்டு

பட மூலாதாரம், NIYOGI BOOKS

படக்குறிப்பு, மங்கள் பாண்டேவை பின்னால் இருந்து பிடிக்கும் ஷேக் பால்டு

பிரிட்டிஷ் அதிகாரியைத் தள்ளிய இந்திய வீரர்

பின்னர் சாட்சியம் அளித்த ஹெவ்சன், "மங்கள் பாண்டேயின் தாக்குதல் என்னை முழு பலத்துடன் தாக்கவில்லை. இதன் விளைவாக, எனக்கு ஒரு கீறல் மட்டுமே ஏற்பட்டது. லெப்டினன்ட் போ, மங்கள் பாண்டேயின் நேரடி தாக்குதலுக்கு இலக்கானார். அவரது ஜாக்கெட் ரத்தத்தால் தோய்ந்திருந்தது. ஆனால் இதற்கிடையில் ஒரு சிப்பாய் முன்னோக்கி வந்து என் முதுகில் துப்பாக்கியால் அடித்தார். அதன் காரணமாக நான் கீழே விழுந்தேன்.

அந்த சிப்பாயை என்னால் அடையாளம் காண முடியவில்லை. ஆனால் அவர் படைப்பிரிவின் சீருடை அணிந்திருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. எழுந்தவுடன் மங்களின் கோட்டின் காலரை இடது கையால் பிடித்தேன். நான் அவரை என் வாளால் பலமுறை தாக்கினேன். அவரும் என்னை வாளால் தாக்கினார். நான் காயம் அடைந்து மீண்டும் கீழே விழுந்தேன். மங்கள் இடது கையால் எங்களைத் தள்ளி, வலது கையால் வாளை வீசினார்."என்று குறிப்பிட்டார்.

ஹெவ்சன் மற்றும் லெப்டினன்ட் போவை வாளால் தாக்குகிறார் மங்கள் பாண்டே (விளக்கப் படம்)

பட மூலாதாரம், NIYOGI BOOKS

படக்குறிப்பு, ஹெவ்சன் மற்றும் லெப்டினன்ட் போவை வாளால் தாக்குகிறார் மங்கள் பாண்டே (விளக்கப் படம்)

தன்னைத்தானே சுட்டுக் கொண்ட மங்கள் பாண்டே

இதற்கிடையில், 34 நேட்டிவ் காலாட்படையின் கமாண்டிங் அதிகாரி கர்னல் எஸ்.ஜி.வெல்லரும் சம்பவ இடத்திற்கு வந்தார். மங்கள் பாண்டேவை கைது செய்யும்படி அங்கு இருந்த ராணுவ வீரர்களுக்கு அவர் உத்தரவிட்டார்..ஆனால் அதை செய்ய அவர்கள் மறுத்துவிட்டனர்.

இதை ருத்ராங்ஷு முகர்ஜி இப்படி எழுதுகிறார்:

'பின்னர் சாட்சியம் அளித்த வெல்லர், ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது போல உணர்ந்ததாக குறிப்பிட்டார். அதே நேரத்தில், பிரிவின் கமாண்டிங் அதிகாரியான மேஜர் ஜெனரல் ஹியர்ஸே தனது இரண்டு மகன்களுடன் அங்கு வந்தார். மங்கள் பாண்டேவை நோக்கி ஹியர்ஸே நகர்ந்த போது யாரோ ஒருவர் சத்தம் போட்டு, மங்கள் பாண்டேயிடம் தோட்டாக்கள் நிறைந்த துப்பாக்கி இருப்பதாகக் கூறினார். பாண்டே உங்களை குறிவைக்கிறார் என்று ஹியர்ஸேயின் மூத்த மகன் எச்சரித்தபோது, 'ஜான், நான் இறந்துவிட்டால், நீ முன்னேறிச் சென்று அந்த நபரைக் கொன்றுவிடு' என்று ஹியர்ஸே கூறினார்.

இதற்கிடையில், ஹியர்ஸே தனது கைத்துப்பாக்கியை அசைத்தபடி அங்கிருந்த ஒரு சிறிய படைப்பிரிவிடம் சென்றார். 'நான் சொல்வதைக் கேளுங்கள். எனது உத்தரவின் பேரில் எந்த சிப்பாயாவது அணிவகுத்துச் செல்லவில்லை என்றால், நான் அவரை அதே இடத்தில் சுட்டு வீழ்த்துவேன்' என்று சொன்னார். இம்முறை அவரது கட்டளை மீறப்படவில்லை.எல்லா வீரர்களும் மங்கள் பாண்டேவை நோக்கி நகரத்தொடங்கியதும், அவர் தனது துப்பாக்கி குழாயின் நுனியை தனது மார்பில் வைத்து துப்பாக்கியின் விசையை தனது கால்விரலால் அழுத்தினார்.

அவரது மார்பு, தோள் மற்றும் கழுத்தில் காயத்தை ஏற்படுத்தி தோட்டா வெளியேறியது. கூடவே அவரது கோட் தீப்பிடித்தது. மங்கள் பாண்டே குப்புற விழுந்தார். ஒரு சீக்கிய சிப்பாய் அவரது உடம்புக்கு அடியில் இருந்து ரத்தம் தோய்ந்த வாளை எடுத்தார். மங்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மங்கள் பாண்டே தன்னைத்தானே சுட்டுக்கொள்ள முயல்கிறார் (விளக்கப்படம்)

பட மூலாதாரம், NIYOGI BOOKS

படக்குறிப்பு, மங்கள் பாண்டே தன்னைத்தானே சுட்டுக்கொவ்வ முயல்கிறார் (சித்திரிப்புப்படம்)

ஷேக் பால்டுவின் பதவி உயர்வு

ஷேக் பால்டு மங்களை பின்னால் இருந்து பிடித்தார். ஆனால் அவர் கையைப் பிடிக்கத் தவறிவிட்டார். ஒருமுறை அவர் அவ்வாறு செய்ய முயன்றபோது, மங்கள் அவரை முழங்கையால் காயப்படுத்தினார்.

மங்கள் பாண்டேயின் ராணுவ நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு முன்பே பால்டு பதவி உயர்வு பெற்றார்.

இந்த முழு விவகாரத்திலும் தனக்கு கூட்டாளி யாரும் இல்லை என்று மங்கள் பாண்டே விசாரணையின் போது கூறினார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய போது போதையில் இருந்தீர்களா என்ற கேள்விக்கு மங்கள் பாண்டே, சில காலமாக கஞ்சா மற்றும் அபின் உட்கொண்டதாக பதில் கூறினார்.

நான் யாரைக் கொன்றேன், யாரைக் கொல்லவில்லை என்று எனக்குத் தெரியவில்லை' என்றார் அவர்.

மங்கள் பாண்டேவை பின்னால் இருந்து பிடித்த ஷேக் பால்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மங்கள் பாண்டேவை பின்னால் இருந்து பிடித்த ஷேக் பால்டு

தூக்கிலிடப்பட்ட மங்கள் பாண்டே

அந்த நாட்களில், ஒரு ஆங்கிலேய அதிகாரியைத் தாக்குவது என்பது தன் மரண உத்தரவில் கையெழுத்திடுவதற்கு சமமானதாகும்.

சிப்பாய் எண் 1446 மங்கள் பாண்டேவுக்கு இந்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1857 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு வீரர்கள் முன்னிலையில் அவர் தூக்கிலிடப்பட்டார். பிரிட்டிஷ் அதிகாரிகள் யாரிடமும் அவருடைய நடத்தை குறித்து எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை.

முன்னதாக மங்கள் பாண்டேயை தூக்கிலிடும் தேதி ஏப்ரல் 18 என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த கிளர்ச்சி மற்ற பகுதிகளுக்கும் பரவிவிடுமோ என்ற அச்சத்தில் ஆங்கிலேயர்கள் பத்து நாட்களுக்கு முன்பே மங்களை தூக்கிலிட்டனர். 1857ல் நடந்த சிப்பாய் கலகத்தில் இறந்த முதல் இந்தியர் மங்கள் பாண்டே.

மங்கள் பாண்டே தூக்கிலிடப்படுவதை சித்தரிக்கும் ஒரு கலைஞரின் ஓவியம்.

பட மூலாதாரம், NIYOGI BOOKS

படக்குறிப்பு, மங்கள் பாண்டே தூக்கிலிடப்படுவதை சித்தரிக்கும் ஒரு கலைஞரின் ஓவியம்.

ஜமாதார் ஈஸ்வரி பிரசாத்தும் தூக்கிலிடப்பட்டார்

'இதற்குப் பின்னால் சதி இல்லையென்றாலும், ஷேக் பால்டுவைத் தவிர, எந்த ஒரு இந்திய வீரரும் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு உதவவும், மங்கள் பாண்டேவைத் தடுக்கவும் முன்வரவில்லை என்பதை மறுக்க முடியாது. அப்போது இந்த சம்பவத்தின் நேரடி சாட்சியாக சுமார் 400 வீரர்கள் இருந்தனர்.

அப்போது அங்கிருந்த ஜமாதார் ஈஸ்வரி பிரசாதிடம் மங்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று சார்ஜென்ட் மேஜர் கேட்டதற்கு, நான் என்ன செய்வது, நான் செய்வதறியாது தவித்தேன் என்று பதில் அளித்தார். அவருடைய இந்தக் கூற்றுக்கு பல அர்த்தங்களைச் சொல்லலாம். அவரும் இந்த திட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்பது முதலாவது. இரண்டாவதாக, எல்லாஆங்கிலேய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று அவர் விரும்பியிருக்கலாம். மூன்றாவதாக மங்கள் பாண்டேவை மற்ற வீரர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதையும், அவர்களைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல என்பதையும் அவர் அறிந்திருந்தார். இந்த விளக்கத்தை ஆங்கிலேயர்கள் ஏற்கவில்லை. அவரும் 1857 ஏப்ரல் 21 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்," என்று ருத்ராங்ஷு முகர்ஜி எழுதியுள்ளார்.

அன்றைய வீரர்களின் புகைப்படம்

பட மூலாதாரம், RUPA & COMPANY

படக்குறிப்பு, அன்றைய வீரர்களின் புகைப்படம்

மங்கள் பாண்டேவுக்கு சக வீரர்களின் ஆதரவு

மங்கள் பாண்டேவுக்கு அங்கிருந்த இந்திய வீரர்களின் ஆதரவு இருந்ததற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது. அங்கு ஏராளமான வீரர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் ஒழுக்கத்தை பேணுகிறோம் என்ற பெயரில் ஆங்கிலேயர்களுக்கு உதவ முன்வரவில்லை.

அம்ரேஷ் மிஸ்ரா தனது 'Mangal pandey The true story of an Indian revolutanary' என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதியுள்ளார். 'இந்திய வீரர்கள் வெளிப்படையாக கிளர்ச்சி செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர்களின் கூட்டு செயலற்ற தன்மை, அவர்கள் எதிர்ப்பு மற்றும் கீழ்படியாமை மனநிலையை உருவாக்கிக்கொண்டிருப்பதை காட்டுகிறது.

மங்கள் பாண்டே என்ன செய்தாலும் அவருக்கு முழு ஆதரவு இருந்தது என்பதை அவர்களது செயல் காட்டியது. நீங்கள் தோட்டாக்கள் நிறைந்த துப்பாக்கிக்கு பயப்படுகிறீர்களா என்று ஹியர்ஸே அவர்களிடம் கேட்டபோது, அவர்கள் அனைவரும் அமைதியாக இருந்தனர். அடையாளம் தெரியாத ராணுவ வீரர் ஒருவர் தனது துப்பாக்கியின் தண்டால் ஹெவ்சனை தாக்கியதையும் மறந்துவிடக் கூடாது.

தண்டனையாக 34 வது படைப்பிரிவு கலைக்கப்பட்டது.

ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்த கருத்து வேறுபாடு மற்றும் எதிர்ப்பு , இந்தியாவின் பல ராணுவ மண்டலங்களில் கிளர்ச்சியின் வடிவத்தில் பிரதிபலித்தது . பிரிட்டிஷ் வீரர்கள் கிளர்ச்சி வீரர்களை மங்கள் பாண்டேயின் சாதிப் பெயரால் 'பாண்டேக்கள்' என்று அழைக்கத் தொடங்கினர்.

மங்கள் பாண்டேயின் மறைவுக்கு, கல்கத்தா முதல் பாட்னா வரையிலும், கங்கைக் ஆற்றுப்பகுதி நெடுகிலும் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

மங்கள் பாண்டேயின் படைப்பிரிவு கலைக்கப்பட்டதை சித்தரிக்கும் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மங்கள் பாண்டேயின் படைப்பிரிவு கலைக்கப்பட்டதை சித்தரிக்கும் படம்

மே 10 அன்று மீரட்டில் நடந்த கிளர்ச்சிக்குப் பிறகு, மங்கள் பாண்டேயின் நண்பர் நகி அலி அவரது அஸ்தியை கிராமத்தில் உள்ள மங்கள் பாண்டேயின் தாயிடம் ஒப்படைத்தார்.

பின்னர் கூட்டு தண்டனையாக, 1857 இல் மங்கள் பாண்டேவின் 34 வது படைப்பிரிவு கலைக்கப்பட்டபோது, அணிவகுப்பு மைதானத்தை விட்டு வெளியேறும் முன் வீரர்கள் அனைவரும் தங்கள் தொப்பிகளை தரையில் எறிந்து அவற்றை காலால் மிதித்து எதிர்ப்புத்தெரிவித்தனர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :