தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2022-23: புதிய திட்டங்கள், சலுகைகள் அறிவிப்பு - சிறப்பம்சங்கள் என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 202-23 நிதியாண்டுக்கான வேளாண் தனி பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மார்ச் 19ஆம் தேதி தாக்கல் செய்தார். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக தாக்கல் செய்யும் வேளாண் துறைக்கான பிரத்யேக பட்ஜெட் இது. இதன் சிறப்பம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

  • தமிழ்நாட்டில் மண் வளம் குறித்து அறிந்து கொள்வதற்காக 'தமிழ் மண் வளம்' என்ற தனி இணைய முகப்பு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்படும்.
  • கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ஒரு டன்னுக்கு 195 ரூபாய் உயர்த்தித் தரப்படும்.
  • ரூ. 300 கோடி மதிப்பில் கிராமங்களில் வீடுகளுக்கு இலவச தென்னங்கன்று வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • முதல்வர் தலைமையில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் சிறு தானியத் திருவிழா நடத்தப்படும்.
  • தமிழ்நாட்டில் மரம் வளர்க்கும் திட்டத்திற்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக 71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

4 மாவட்டங்களில் துவரை உற்பத்தி மண்டலங்கள்

  • சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் துவரை உற்பத்தி மண்டலங்கள் அமைக்கப்படும்.
  • கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது.
  • வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், உற்பத்தியாளர் குழுக்கள், சமுதாய பண்ணை பள்ளிகளை உருவாக்க 30.56 கோடி ஒதுக்கீடு.
  • தமிழகத்தில் இரண்டு சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டங்களுக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • 381 கோடி ரூபாய் செலவில், திண்டிவனம், தேனி, மணப்பாறையில் உணவு பூங்காக்கள் அமைக்கப்படும்.

10 உழவர் சந்தைகள் சீரமைப்புக்கு ரூ. 10 கோடி

  • 10 புதிய உழவர் சந்தைகள் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். 50 உழவர் சந்தைகளைச் சீரமைக்க 15 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • மாலை நேரத்திலும் உழவர் சந்தைகள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். சிறுதானியங்களும் விற்க அனுமதிக்கப்படும்.
  • மதிப்புக்கூட்டும் பொருட்களை தயாரிக்கும் 292 இயந்திரங்களை 40% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க 5 கோடி ஒதுக்கீடு.
  • பட்டியலினத்தைச் சேர்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு 20% கூடுதல் மானியம் வழங்க 5 கோடி ஒதுக்கீடு.
  • தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • திருவாரூர் மாவட்டத்தில் விளைபொருட்களுக்கு உரிய விலையைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் விவசாயப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

நீலகிரியில் காபி கொட்டை, மிளகு தரம் பிரிக்கும் மையம்

  • அயிரை, செல் கெண்டை, கல்பாசு போன்ற உள்நட்டு மீன் வகை வளர்ப்புக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும்.
  • பம்பு செட்டுகளை தொலைவில் இருந்தே கைபேசி மூலம் இயக்க உதவிடும் தானியங்கி கருவிகளுக்கு 5,000 ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.
  • இரவு நேரத்தில் பம்பு செட்டுகளை இயக்கச் செல்லும் விவசாயிகள் பாம்புக் கடிக்கு ஆளாவதைத் தடுக்க இது உதவும்.
  • மிளகு, காப்பிக் கொட்டைகளை தரம்பிரிக்கும் மையம் நீலகிரியில் அமைக்கப்படும்.
  • 38 கிராமங்களில் மதிப்புக் கூட்டல், சந்தைப்படுத்துதல் மையம் அமைக்க 95 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • தேனி, கோவை, குமரியில் பொது, தனியார் பங்களிப்புடன் மொத்த காய்கறி விற்பனை வளாகம் அமைக்கப்படும்.
  • 3 கோடியில் 5 தொழில் கற்கும் சிறு மையங்கள் அமைக்கப்படும்.

ட்ரோன்கள் மூலம் இடுபொருள்கள் வழங்கும் திட்டம்

  • ட்ரோன்கள் மூலம் விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கும் திட்டம். 60 ட்ரோன்களை வாங்கவும் பயிற்சி மற்றும் செயல்விளக்கத்திற்காகவும் 10.32 கோடி நிதி ஒதுக்கீடு.
  • 7 மாவட்டங்களில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு பணிகளுக்கு 125.44 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • டெல்டா மாவட்டங்களில் 1,580 கி.மீ நீள வாய்க்காய்க்களை தூர்வார 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
  • காவிரி டெல்டாவில் 4,964கி.மீ கால்வாய் மற்றும் வாய்க்கால்களை தூர்வார ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு.
  • தேனி, கோவை, கன்னியாகுமரியில் அருகிலுள்ள பிற மாநிலங்களின் வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்வதற்கான மையங்கள் அமைக்கப்படும்.
  • பண்ணை இயந்திர மயமாக்கலை ஊக்குவிக்க 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

86 வகை அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை

  • கடந்த ஆண்டின் 86 வகையான அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • முதல்கட்டமாக வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த 200 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
  • சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த சூரியகாந்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.
  • இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • வேளாண் பொருட்களின் விதை முதல் விற்பனை வரை அறிந்துகொள்ள 'செயலி' உருவாக்கப்படும்.
  • இடுபொருள் விளைபொருளை சந்தைக்கு எடுத்துச் செல்ல, 2,750 கி.மீ நீளத்திற்கு, 604.73 கோடி ரூபாய் செலவில் சாலைகள் அமைக்கப்படும்.
  • முதலமைச்சரின் சூரிய சக்தி பம்ப் செட் அமைக்கும் திட்டத்தின் கீழ் 70 சதவீத மானியத்துடன் 3,000 பம்ப் செட்களை அமைக்க 65.34 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • மொத்தமாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு 7,474.94 கோடி ரூபாய் நிதி தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: