You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லதா மங்கேஷ்கர் மரணம்: பாரத ரத்னா பெற்ற பின்னணி பாடகி 92 வயதில் காலமானார்
பிரபல பின்னணி பாடகி மும்பையில் லதா மங்கேஷ்கர் காலமானார். அவருக்கு வயது 92. கோவிட் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஜனவரி 8ஆம் தேதி முதல் மும்பையில் உள்ள பிரிட்ஜ் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் லதா மங்கேஷ்கர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பிரதித் சம்தானி, " லதா அவர்கள் கோவிட் தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 28 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல் உறுப்புகள் பலவும் செயலிழந்ததால் இன்று காலை 8.12 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது", என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக , பிப்ரவரி 6 மற்றும் 7 ஆகிய 2 நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இந்த 2 நாட்களுக்கு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
முன்னதாக உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவரது உடல்நிலை தேறி வருவதாக ஜனவரி 27ஆம் தேதி கூறிய மருத்துவர்கள் வென்டிலேட்டர் மூலம் வழங்கிய சிகிச்சையை நிறுத்தினர்.
1929 ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர் லதா மங்கேஷ்கர்.
இவரது இயற்பெயர் ஹேமா. ஆனால் அவரது தந்தையின் நாடகங்களில் லத்திகா எனும் பாத்திரத்தில் இவர் நடித்து வந்தார். அதனால் அனைவரும் அவரை 'லதா' என்று அழைக்கத் தொடங்கினர். அதுவே அவரது பெயராகவும் ஆகிப்போனது.
இவரது தந்தை தீனாநாத் மங்கேஷ்கர் மராத்தி மொழியில் நன்கு அறியப்பட்ட பாடகராகவும், நாடக ஆசிரியராகவும் இருந்தார். அவரது ஐந்து குழந்தைகளில் முதல் குழந்தை லதா மங்கேஷ்கர்.
சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்ற லதா மங்கேஷ்கர், இந்திய சினிமாவில் மிகவும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1989ஆம் ஆண்டு பெற்றார்.
1949ஆம் ஆண்டு மகள் எனும் இந்தி படத்தில் தனது முதல் திரை இசை பாடலை பாடி இசை பயணத்தை தொடங்கினார்.
அதன்பின்பு பல்வேறு இந்திய மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடி திரை இசையில் உச்சத்தை தொட்டார் லதா மங்கேஷ்கர்.
இந்தியாவின் மிகவும் உயரிய விருதான பாரத ரத்னா விருது 2001ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
எம்.எஸ். சுப்புலட்சுமி பிறகு பாரத ரத்னா விருது பெற்ற பாடகர் லதா மங்கேஷ்கர்.
முன்னதாக அவர் பத்மவிபூஷன் மற்றும் பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
லதா மங்கேஷ்கர் எட்டு இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
1999 - 2005 ஆண்டுகளில் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் நியமன உறுப்பினராகவும் இருந்துள்ளார் லதா மங்கேஷ்கர்.
தலைவர்கள் இரங்கல்
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், எட்டு தசாப்தங்களாக, அவர் பல்வேறு மொழிகளில் தனது மெல்லிய குரலில் பாடி ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் தொட்டுள்ளார் என்று குறிப்பிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோதி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். "நான் வார்த்தைகளில் விவரிக்க முடியாத வேதனையில் இருக்கிறேன். அன்பும், அக்கறையுள்ள லதா அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்துள்ளார். அவர் நம் நாட்டில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறார். இனிவரும் தலைமுறையினர் அவரை இந்திய கலாச்சாரத்தில் தலைசிறந்து விளங்கியவராக நினைவுகூர்வார்கள். அவரது மெல்லிசை குரல் மக்களை ஈர்க்கும் இணையற்ற திறனைக் கொண்டிருந்தது.", என்று அவர் டீவிட் செய்துள்ளார்.
மேலும், லதா அவர்களின் மறைவு, தனது இதயத்தை நொறுக்குவதாகவும், அவரது சாதனைகள் ஒப்பிட முடியாதவை என்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "லதா மங்கேஷ்கரின் மறைவு குறித்த சோகமான செய்தி கிடைத்தது. பல தசாப்தங்களாக இந்தியாவின் மிகவும் பிரியமான குரலாக இருந்தார். அவரது தங்கமான குரல் அழியாதது; அது அவரது ரசிகர்களின் இதயங்களில் தொடர்ந்து எதிரொலிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது அனுதாபங்கள்.", என்று தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- அண்டர்-19 உலகக்கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி 5ஆவது முறை சாம்பியன் ஆன இந்தியா
- எவரெஸ்ட் சிகரம்: 'அதிவேகத்தில் உருகும் பனிப்பாறைகள்; 100 கோடி பேருக்கு பாதிப்பு'
- அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் சொகுசு படகு பயணத்தால் நெதர்லாந்தில் கிளம்பும் சர்ச்சை
- கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை: சீருடை கட்டாயம் என அரசு ஆணை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: