You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிம்லாவில் கடும் பனிப்பொழிவு: 30 கி.மீ ஜேசிபியில் பயணித்து திருமணம் செய்த மணமகன்
(இன்று 27.01.2022 வியாழக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)
இமாச்சல பிரதேசத்தில் மணமகன் ஒருவர் தனது திருமணத்துக்கு ஜேசிபி இயந்திரத்தில் அழைத்துச் செல்லப்படும் காணொளி வைரலாகியுள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.
விழாக்களில் கிராண்ட் என்ட்ரி கொடுப்பது வழக்கமான நிகழ்வு. ஆனால் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக மணமகன் ஒருவர் தனது திருமண நிகழ்வுக்கு தனித்துவமான முறையில் வந்துள்ளார்.
சிம்லாவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனிடையே, கிரிபார் பகுதியின் சங்கரா கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் சங்கரா கிராமத்தில் இருந்து 30 கி.மீ தள்ளியிருக்கும் ரத்வா கிராமத்தில் நடக்கவிருந்தது. திருமணத்தன்று காலை மணமகன் ஊர்வலம் மூலமாக ரத்வா கிராமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சில கிலோமீட்டர் சென்ற நிலையில் ஊர்வலம் கடும் பனிபொழிவால் தடைபட்டது. சில இடங்களில் பாதை மூடப்பட்டிருந்ததால் அங்கிருந்து மேலும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை பார்த்த மணமகனின் தந்தை இரண்டு ஜேசிபி இயந்திரங்களை வரவைத்தார். ஒரு ஜேசிபியில் மணமகனும், மற்றொரு ஜேசிபியில் மணமகன் குடும்பத்தினரும் பயணம் செய்தனர். சுமார் 30 கி.மீ ஜேசிபியிலேயே பயணம் செய்தவர்கள் திருமணத்துக்கு குறித்த நேரத்தில் கிராமத்தைச் சென்றடைந்தனர்.
அதன்பின் அங்கு திருமண சடங்குகள் அனைத்தும் செய்துவிட்டு அனைவரும் மணமகளுடன் சங்கரா கிராமத்துக்கு திரும்பினர். இந்த வீடியோக்கள் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வேடிக்கையான காணொளியை இதுவரை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்துள்ளனர். கடந்த ஆண்டு, பாகிஸ்தானைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் தங்கள் திருமணத்துக்கு காரில் ஊர்வலம் செய்வதை தவிர்த்து இதேபோல் ஜேசிபியில் சென்றனர். அந்த வீடியோவையும் சிலர் வேடிக்கையாக பதிவிட்டு வருவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஸ்ரீநகா் லால் சௌக்கில் பறந்த இந்திய தேசியக் கொடி
முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக்கில் குடியரசு தினத்தையொட்டி புதன்கிழமை இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டதாக தினமணியில் செய்தி பிரசுரமாகியுள்ளது.
சமூக ஆர்வலா்களான சஜித் யூசுஃப் ஷா, சாஹில் பஷீர் பட் ஆகிய இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் சோ்ந்து லால் சௌக்கில் உள்ள மணிக்கூண்டில் குடியரசு தினத்தில் தேசியக் கொடி ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி, கிரேன் உதவியுடன் மணிக்கூண்டில் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினர்.
ஸ்ரீநகரில் பயங்கரவாதம் தலைதூக்கிய பிறகு லால் சௌக்கில் உள்ள மணிக்கூண்டில் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை. இதற்கு முன்பு, கடந்த 1992-ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவா் முரளி மனோகா் ஜோஷி அங்கு தேசியக் கொடி ஏற்றினாா்.
அதன்பிறகு குடியரசு தினம் போன்ற முக்கிய தினங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை என்றும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஜார்கண்டில் வறுமைக்கோட்டு குடும்பங்களுக்கு மாதம் 10 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.250 மானியம்
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வீதம், 10 லிட்டருக்கு 250 ரூபாய்வழங்கப்படும் என ஜார்கண்ட் அரசு அறிவித்துள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
குடியரசு தினத்தையொட்டி நேற்று தும்பா போலீஸ் லைனில் தேசியக்கொடியை ஏற்றிவைத்த ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உரையாற்றுகையில், 'இன்று முதல், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள இருசக்கர வாகன உரிமையாளர்கள், முதலமைச்சர் ஆதரவு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 10 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.250 மானியம் பெறலாம். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வீதம் இவ்வாறு வழங்கப்படும். இந்த தொகை, பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இந்த மானிய உதவியைப் பெறுவதற்கு, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் குறிப்பிட்ட 'மொபைல் ஆப்'பில் பதிவு செய்ய வேண்டும். இதுவரை 1.04 லட்சம் விண்ணப்பங்களில் 73 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.' என கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- அகில இந்திய சமூக நீதி சம்மேளனத்தை உருவாக்குவோம்: மு.க. ஸ்டாலின்
- ரயில்வே தேர்வு தொடர்பாக போராடும் வட இந்திய மாணவர்களின் கோபம் ஏன்?
- உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்தால் புதின் மீது தனிப்பட்ட பொருளாதார தடை- அமெரிக்கா
- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி நடக்கும்
- பத்ம விருதுகளை நிராகரித்த புத்ததேவ், சந்தியா - என்ன பின்னணி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: