சஞ்சீப் பானர்ஜி: "ஆதிக்க கலாசாரத்தை ஒழிக்க முடியாமல் செல்கிறேன்" - ஊழியர்களுக்கு உருக்கமான கடிதம்

மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் பிரியாவிடையயைும் தவிர்த்து விட்டு சென்னையை விட்டுப் புறப்பட்டுள்ளார்.

கார் மூலமாக தமது குடும்பத்தினருடன் சென்ற அவர் அவரது பூர்விகமான மேற்கு வங்கத்துக்கு செல்கிறாரா அல்லது தனக்கு இடமாற்றல் வழங்கப்பட்ட மேகாலயா மாநிலத்துக்கு செல்கிறார் என்ற விவரம் தெரியவில்லை.

அதே சமயம், அவர் கையெழுத்திட்டு சக நீதிபதிகள், நீதிமன்ற பதிவாளர், உயர் நீதிமன்ற ஊழியர்களுக்கு எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில் நீதிபதிகள் சமூகம், உயர் நீதிமன்ற பதிவாளர், ஊழியர்கள் என பலரையும் குறிப்பிட்டு அவர் உருக்கமாக சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

கடிதத்தின் தொடக்கத்திலேயே, என்னுடன் பணியாற்றிய சக நீதிபதிகளே, உங்களுடன் நேருக்கு நேர் இருந்து பிரியாவிடை சொல்ல முடியவில்லை என்பதற்காக வருந்துகிறேன். இறுதியாக, எனது சில நடவடிக்கைகளால் உங்களில் சிலருக்கு காயம் ஏற்பட்டிருக்குமானால் அவை எப்போதும் தனிப்பட்ட முறையிலானவை அல்ல என்பதை தயவு செய்து அறிந்து கொள்ளுங்கள். அந்த நடவடிக்கைகள் நீதித்துறை கட்டமைப்புக்கு அவசியம் என்று நான் கருதினேன் என்று சஞ்சூப் பானர்ஜி கூறியுள்ளார்.

நானும் ராணியும் (சஞ்சீப் பானர்ஜியின் மனைவி) எப்போதும் நீங்கள் எங்கள் மீது செலுத்திய மரியாதை மற்றும் அன்பால் நெகிழ்கிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கறிஞர்கள் சமூகத்தை குறிப்பிட்ட அவர், நாட்டின் சிறந்த சமூகங்களில் ஒன்று நீங்கள்தான். அதிகம் பேசக்கூடிய சில நேரம் வயோதிகனான என்னை அமைதியாக சகித்துக் கொண்டீர்கள். நான் உகந்ததை விட அதிகமாகவே மரியாதை செலுத்தினீர்கள், புரிந்து கொண்டீர்கள். உங்களுடைய கனிவான வார்த்தைகளுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று சஞ்சீப் பானர்ஜி கூறியுள்ளார்.

நீதிமன்ற பதிவுத்துறை பற்றி குறிப்பிடும்போது, உங்களுடைய திறமைகள் நிர்வாகத்தை எளிமையாக்கின. நீதித்துறை மற்றும் அதன் நடைமுறைகளை மேம்படுத்துவதில் நீங்கள் காட்டிய நேர்மையை நான் அங்கீகரிக்கிறேன். நீதித்துறை வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை பேண இதேபோல செயல்படுங்கள் என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற ஊழியர்கள் பற்றி குறிப்பிடும்போது, எனக்காக நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்த உங்கள் அனைவருக்கும் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் பணியாற்றி வரும் ஆதிக்க கலாசாரத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை என்ற வருத்தம்தான் எனக்கு என்று சஞ்சீப் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கடிதத்தின் கடைசி பத்தியில், நானும் ராணியும் எங்களுடைய மாநிலம் போல உரிமையுடன் இந்த அழகான மற்றும் சிறந்த மாநிலத்தில் வாழ்ந்த கடந்த பதினோரு மாதங்களாக எனது பதவிக்காலத்தில் கிடைத்த உங்களுடைய அன்புக்கும் மரியாதைக்கும் எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அந் நினைவுகளுடன் நாங்கள் புறப்படுகிறோம், என்று சஞ்சீப் பானர்ஜி கூறியுள்ளார்.

என்ன பிரச்னை?

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்துள்ளார் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

அவரை இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் தேர்வுக்குழு (கொலேஜ்ஜியம்) பரிந்துரை செய்த நடவடிக்கைக்கு தமிழ்நாட்டில் தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வந்தது.

இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்பட பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்கள் சஞ்சீப் பானர்ஜியின் இடமாற்றல் நடவடிக்கை குறித்து சந்தேகம் எழுப்பின.

சில வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மாநில உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி, நீதிபதிகள் ஆகியோரின் இடமாற்றல் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக்குழு வழக்கமாக மேற்கொள்ளும் ஆனால், சஞ்சீப் பானர்ஜி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற பத்து மாதங்களில் அவரை வேறு நீதிமன்றத்துக்கு இடமாற்றல் செய்ய பரிந்துரைத்தது ஏன், அதில் வெளிப்படைத்தன்மை நிலவவில்லை என்று வழக்கறிஞர்கள் மற்றும் அவர்கள் அங்கம் வகிக்கும் சங்கங்கள் கூறுன.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை நிறைவு செய்து விட்டு தமது குடும்பத்துடன் சென்னையை விட்டுப் புறப்பட்டிருக்கிறார் சஞ்சீப் பானர்ஜி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :