உத்தரப்பிரதேசத்தில் பிராமண பெண்ணை மணந்த தலித் இளைஞர் பட்டப் பகலில் கொலை - சாதி மறுப்பு திருமணம்

பட மூலாதாரம், ANEESH FAMILY
- எழுதியவர், ராஜேஷ் குமார் ஆர்யா
- பதவி, கோரக்பூரிலிருந்து பிபிசி இந்திக்காக
பிராமணப் பெண்ணைக் காதலித்து மணந்த தலித் இளைஞரான அனிஷ்குமார் சவுத்ரி ஜூலை 24 அன்று கொலை செய்யப்பட்டார். இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லாத மணப்பெண்ணின் குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால் மணப்பெண் தீப்தியின் தாயார் இதை மறுத்திருக்கிறார்.
அனிஷ் கொலை வழக்கில், 17 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர், அவர்களில் நான்கு பேர் உள்ளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனிஷும், தீப்தியும் கோரக்பூரில் உள்ள பண்டிட் தீன் தயால் உபாத்யாய் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றனர். அனிஷ் பண்டைய வரலாற்றில் எம்.ஏ பட்டமும் தீப்தி சமூகவியலில் எம்.ஏ பட்டமும் பெற்றனர். கல்லூரி வளாகத்தில் அவ்வப்போது சந்தித்துக் கொண்ட இவர்கள் இருவரும் கிராமப் பஞ்சாயத்து அதிகாரிகளாகத் தேர்வானார்கள்.
வேலை கிடைத்ததும், அனிஷுடனான தனது முதல் சந்திப்பு 9 பிப்ரவரி 2017 அன்று கோரக்பூரில் உள்ள விகாஸ் பவனில் நடந்ததாக தீப்தி கூறுகிறார். கல்லூரிக் காதல் இங்கே வளர்ந்தது. பயிற்சிக் காலத்தில் நெருக்கம் இன்னும் அதிகமானது.
"இந்தக் காதலைப் பற்றித் தெரிந்தவுடன், என் குடும்ப உறுப்பினர்கள் அவரைத் துன்புறுத்தத் தொடங்கினர். அதன் பிறகு நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். நான் ஒருமுறை திருமணம் செய்து கொண்டால், பிறகு சொந்தத்தில் வேறு திருமணம் செய்து வைக்க முடியாது என்பதால் நான் திருமணம் செய்துகொண்டேன். எனக்கு எல்லா சமூகத்தைச் சேர்ந்தவர்களும் நண்பர்களாக உள்ளனர். எனக்கு சாதி மதத்தில் நம்பிக்கை இல்லை" என்று தீப்தி கூறுகிறார்.
பெற்றோர் மறுப்பு

பட மூலாதாரம், Aneesh Family
அனிஷ் - தீப்தி திருமணம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. திருமண ஆவணங்களின்படி, இருவரும் மே 12, 2019 அன்று கோரக்பூரில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தை நீதிமன்றம் 2019 டிசம்பர் 9 அன்று அங்கீகரித்தது.
"நாங்கள் இருவரும் சட்டப்பூர்வ வயது வந்தவர்கள், பணியில் இருப்பவர்கள். எனவே பெற்றோர் எதிர்க்க மாட்டார்கள் என்று நம்பினேன். அப்படியே எதிர்த்தாலும் அவர்களைச் சம்மதிக்க வைக்கலாம் என்று நம்பினேன். நான் என் குடும்ப உறுப்பினர்களைச் சமாதானப்படுத்த முயற்சித்தேன். ஆனால் அவர்கள் அதற்கு உடன்படவில்லை. " என்று கூறுகிறார் தீப்தி.
"அனிஷுடனான திருமணம் பற்றி அறிந்த பிறகு, என் குடும்பத்தினர் என்னை மன ரீதியாக துன்புறுத்தத் தொடங்கினர். தந்தை அவ்வப்போது நோய்வாய்ப்பட்டு விடுவார். சில சமயங்களில் தாயார் நோய்வாய்ப்பட்டு விடுவார்.
தந்தை அடிக்கடி, 'எனக்கு மாரடைப்பு வந்து நான் இறந்து விடுவேன் என்று கூறுவார். என் குடும்ப உறுப்பினர்கள் அனிஷைக் கொலை செய்வதாகவும் மிரட்டினார். அனிஷின் பாதுகாப்பிற்காக, நான் எனது குடும்ப உறுப்பினர்களுக்குக் கீழ்ப்படிந்து அவர்களின் அறிவுறுத்தல்களின்படி பல முறை நடக்க வேண்டியிருந்தது. எப்படியாவது அனிஷைக் காப்பாற்ற விரும்பினேன்," என தீப்தி கூறினார்.
கோரக்பூர் மாவட்டத்தின் ககஹான் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த தேவ்கலி தர்மசசேன் கிராமத்தில் வசிக்கும் நலின் குமார் மிஸ்ராவின் மகள் தீப்தி.
தீப்தி நான்கு உடன்பிறப்புகளில் இளையவர். அவரது இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவரது சகோதரர் உத்தரப்பிரதேச காவல்துறையில் உள்ளார். தற்போது அவர் சரவஸ்தி மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வளவு பெரிய குடும்பத்தில் யாரும் அவரை ஆதரிக்கவில்லையா என்ற கேள்விக்கு பதிலளித்த தீப்தி, 'இல்லை, குடும்ப உறுப்பினர்கள் யாரும் ஆதரிக்கவில்லை' என்று கூறுகிறார்.
அனிஷுக்கு எதிராக வழக்கு

பட மூலாதாரம், Aneesh Family
தீப்தியின் தந்தை நலின் பல ஆண்டுகளாக துபாயில் பணிபுரிந்தவர். அவர் ஆகஸ்ட் 2016 முதல் தனது கிராமத்தில் ஒரு ஆயத்த ஆடைக் கடையை நடத்தி வருகிறார். அவர், அனிஷ் மீது வழக்குப் பதிவு செய்திருந்தார். இதில், பாலியல் வன் கொடுமை போன்ற பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.
அனீஷைக் கொலை செய்வதாக அச்சுறுத்தியதால் குடும்ப உறுப்பினர்களின் அழுத்தத்தின் கீழ் அனிஷுக்கு எதிராக வாக்கு மூலம் கொடுத்ததாக தீப்தி கூறினார்.
அப்பா, சித்தப்பா, அவரது மகன் என எல்லாரும் தன்னைக் கண்காணித்து வந்ததாகவும் அலுவலகம் செல்லும் போதும் தன்னுடன் வந்ததாகவும் தீப்தி கூறுகிறார். பல சமயம் தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் சித்தப்பா தன்னுடன் வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அனிஷ் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை வந்த போது,பிப்ரவரி 20 அன்று அவருடன் வாழச் சென்றதாக தீப்தி கூறுகிறார். இதன் பின்னர், அவரது தந்தை ககஹான் காவல் நிலையத்தில் அனீஷுக்கு எதிராக தீப்தியை கடத்தியதாக வழக்குப் பதிவு செய்தார்.
இது குறித்து தீப்தி சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வெளியிட்டார். தான் கடத்தப்படவில்லை என்றும் தனது சொந்த விருப்பத்தின்படியே அனிஷுடன் வாழ்ந்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியிருந்தார்.
அனிஷின் குடும்பத்தினர் இருவருக்கும் மே 28 அன்று கோரக்பூரில் உள்ள மகாதேவ் ஜார்கண்டி கோவிலில் திருமணம் செய்து வைத்தனர். அதே நாளில், கோரக்பூரில் உள்ள அவந்திகா ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரண்டு நிகழ்ச்சிகளிலும் அனிஷின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதற்குப் பிறகு அனிஷ், தனது பகுதியில் தனக்கு இனி எந்த ஆபத்தும் இல்லை என சற்று அலட்சியமாக இருந்ததாகவும் அதனால் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் தீப்தி கூறுகிறார்.
அனிஷின் குடும்பம்

பட மூலாதாரம், Rajesh Kumar Arya
கோரக்பூரின் கோலா காவல் நிலையப் பகுதியின் உனாலி துபாலி கிராமத்தில் அனிஷின் குடும்பம் வசித்து வருகிறது. இது தலித்துகள் மற்றும் பின்தங்கிய மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் கிராமம்.
அனிஷின் மூத்த சகோதரர் அனில் சவுத்ரி இந்த கிராமத்தின் கிராமத் தலைவராக 10 ஆண்டுகள் இருந்தார், அதுவும் கிராமத் தலைவர் பதவி தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் வராத காலத்திலேயே. 2015 ஆம் ஆண்டில், தலைவர் பதவி பட்டியல் சாதியைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது, அனில் தனது மனைவி கீதா தேவியை தேர்தலில் போட்டியிடச் செய்தார். அவரும் வென்றார்.
அனிஷின் குடும்பம் செழிப்பானது. இவரது தந்தையும் சித்தப்பாவும் பாங்காக், சிங்கப்பூர் போன்ற நகரங்களில் வசித்து வந்தனர். ஆனால் அனிஷ் இந்தக் குடும்பத்தில் அரசுப் பணியில் இணைந்த முதல் உறுப்பினராவார்.
இந்த உறவைப் பற்றி அறிந்ததும் அனிலின் எதிர்வினை என்ன என்று கேட்டபோது. இது குறித்துப் பேச தீப்தி அவரை ஒரு நாள் அழைத்ததாகவும் தனது குடும்பத்தினரைச் சமாதானப்படுத்திவிட முடியும் என்று கூறியதாகவும் அவர் கூறினார்.
"இந்தத் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்குமாறு நான் தீப்தியின் குடும்ப உறுப்பினர்களுடன் பலமுறை பேசினேன், ஆனால் அவர்கள் இதற்கு உடன்படவில்லை, மாறாக, அவர்கள் என் வீட்டிற்கு வந்து என்னை அச்சுறுத்தத் தொடங்கினர். அவரது குடும்ப உறுப்பினர்கள் ஜூலை 24 அன்று எனது சகோதரரை வெட்டிக் கொலை செய்தனர்." என்று கூறினார்.
அனில், தனது குடும்பத்துக்கும் தீப்திக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குடும்ப உறுப்பினருக்கு நிதி உதவி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
அவரது வீட்டில் கடும் போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மற்ற கோரிக்கைகள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.
சம்பவத்தன்று நடந்தது என்ன?

பட மூலாதாரம், RAJESH KUMAR ARYA
சம்பவ தினத்தன்று, அனிஷ் தனது சித்தப்பா மற்றும் தேவி தயால் ஆகியோருடன் பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தார். கோபால்பூர் சந்தையில் அமைந்துள்ள பங்கஜ் டிரேடர்ஸ் என்ற ஹார்டுவேர் கடையில் இருவரும் வேலை தொடர்பாகச் சென்றிருந்தனர்.
அங்கிருந்து கிளம்பிய பின்னரே இந்த சம்பவம் நடந்தது. இதில் தேவி தயாலும் காயமடைந்தார். கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கூர்மையான ஆயுதத்தின் தாக்குதலால் அவர் மார்பில் காயம் ஏற்பட்டது.
"அனிஷ் கடையை விட்டு வெளியேறிய பிறகு தொலைபேசியில் பேசிக்கொண்டே, முன்னோக்கி நகர்ந்தார். அப்போது, முகமூடி அணிந்த நான்கு பேர் அவரைக் கூர்மையான ஆயுதங்களால் தாக்கினர். இதனால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. சில நொடிகளுக்குப் பிறகு, அவர் சுயநினைவு அடைந்ததும், அவர் எழுந்து நின்றார். இதைப் பார்த்த தாக்குதல் நடத்தியவர்கள் மீண்டும் அவரைத் தாக்கினர். அதற்குள் அங்கு கூட்டம் கூடிவிட்டது. இதைக் கண்ட தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் தங்களது ஓர் ஆயுதத்தையும் அங்கு விட்டுச் சென்றனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் எந்த திசையிலிருந்து வந்தார்கள், எந்த திசையில் அவர்கள் தப்பி ஓடினார்கள் என்பதை அவரால் பார்க்க முடியவில்லை என்று அவர் தெரிவித்தார். இந்த விஷயத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மருத்துவக் கல்லூரியில் தேவி தயாலுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆயுதமேந்திய காவல்துறையினர் காவலுக்கு இல்லாததால் அவரது உறவினர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தேவி தயால் மற்ற நோயாளிகளுடன் வார்டில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தேவி தயால் மட்டுமே நேரில் பார்த்த ஒரே சாட்சி என்றும், இந்த அணுகுமுறை அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
தனது சகோதரரின் மகனின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லையே என்று தனது வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவதாக தேவிதாயல் கூறுகிறார்.
கோபால்பூர் சந்தையில் அனிஷ் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்தவர்களிடம் இந்தச் சம்பவம் பற்றி நாங்கள் அறிய முயன்றபோது, நேரில் பார்த்தவர்கள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.
யாரும் இது குறித்துப் பேசவும் தயாராக இல்லை, ஆனால் அனிஷின் ரத்தம் சிந்திய இடத்தில், சம்பவம் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஐந்து நாட்களுக்குப் பிறகும், ஈக்கள் அங்கு மொய்த்துக்கொண்டிருந்தன.
காவல்துறை தரப்பு என்ன கூறுகிறது?

பட மூலாதாரம், Rajesh Kumar Arya
இந்த வழக்கில், கோலா காவல் நிலையம் அனில் சௌத்ரியின் புகாரின் பேரில் பெயர் குறிப்பிடப்பட்ட 17 பேர் மற்றும் பெயர் குறிப்பிடாத 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
ஐபிசியின் பிரிவு 302, 307, 506 மற்றும் 120-பி மற்றும் எஸ்சி-எஸ்டி சட்டத்தின் பிரிவு 3 (2) (V) ஆகியவையும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இது குறித்து கோலா போலீஸ் அதிகாரி (சிஓ) அஞ்சனி குமார் பாண்டே விசாரணை நடத்தி வருகிறார்.
"நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர், மற்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தெரிந்தவர்களால் தான் செய்யப்பட்டதாக தெரிகிறது.
கொலைக்கான காரணங்களில் வேறு ஏதேனும் அம்சங்கள் வெளிப்பட்டுள்ளனவா என்று கேட்டதற்கு, "இதுவரை வேறு எந்தக் காரணமும் அறியப்படவில்லை" என்று அஞ்சனி குமார் பாண்டே கூறினார்.
இந்த வழக்கில் மணிகாந்த் மிஸ்ரா (தீப்தியின் பெரியப்பா), விவேக் திவாரி, அபிஷேக் திவாரி, சன்னி சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றச்சாட்டை மறுக்கும் தீப்தியின் தாயார்

பட மூலாதாரம், Rajesh Kumar Arya
இந்த வழக்கில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, தீப்தியின் தாய் ஜானகி மிஸ்ரா, இந்த விஷயத்தில் தனது குடும்பத்தினருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறுகிறார். அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிக்க வைக்கப்படுகின்றனர் என்று அவர் கூறுகிறார்.
சனிக்கிழமையன்று மதிய உணவை எடுத்துக்கொண்டு தனது கணவர் கடைக்குச் சென்றுவிட்டதாக அவர் கூறுகிறார். ஆனால் மதியம் 12-1 மணிக்குப் பிறகு அனிஷ் கொலை செய்யப்பட்ட செய்தி கிடைத்ததும், அவரது கணவரும் பிற உறவினர்களும் தலைமறைவாகிவிட்டனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மணிகாந்த் மிஸ்ரா காவல்துறைக்கு முன் ஆஜரானதாக ஜானகி மிஸ்ரா கூறுகிறார். அவரது கணவரும் காவல்துறை முன் ஆஜராகத் தான் கோரக்பூர் சென்றுள்ளதாகவும் விரைவில் காவல்துறை முன் ஆஜராவார் என்றும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Rajesh Kumar arya
உறவினர்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க காவல்துறை முன் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும் என்று தீப்தியின் தாய் கூறுகிறார்.
தீப்தியின் திருமணம் குறித்த கேள்விக்கு, "இத்தகைய பெண்களுக்குக் கல்வி கற்பித்தல் என்ன, பெற்றெடுப்பது கூட பாவம் தான். அவள் பெற்ற என் வயிற்றில் நெருப்பை ஏற்றி விட்டாள். குடும்பத்தினரையும் உறவினர்களையும் அவமானப்படுத்திவிட்டால்." என்று கூறுகிறார். தீப்தியின் தாயார்.
இந்த விஷயத்தில் சாதிதான் மிகப்பெரிய காரணியாகத் தோன்றுகிறது. , "இந்தப் பகுதி சில்லுபார் சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது, பகுஜன் சமாஜ் கட்சியின் வினய் சங்கர் திவாரி தான் அங்கு சட்டமன்ற உறுப்பினர். சமாஜ்வாதி மற்றும் பாஜக தலைவர்கள் வந்து அனிஷ் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர், ஆனால் தலித்துகளின் கட்சி என்று கூறிக்கொள்ளும் பகுஜன் சமாஜ் கட்சி இன்னும் வரவில்லை." என அனிஷின் உறவினர் ராம்சங்கர் சௌத்ரி கூறுகிறார்.

பட மூலாதாரம், Rajesh Kumar Mishra
இந்த விஷயத்தில் முடிவுக்கு வருவதற்கு முன், ஒரு நீண்ட சட்ட செயல்முறையைக் கடக்க வேண்டியிருக்கும். ஆனால் தீப்தி மிஸ்ரா குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் மற்றும் அவரது முழு குடும்பத்திற்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்கிறார். "அவருடைய முழு குடும்பமும் இந்த விஷயத்தில் ஏதோ ஒரு வகையில் ஈடுபட்டுள்ளது, எனவே அனைவரையும் தூக்கிலிட வேண்டும். இதற்காக, நான் கடைசி வரை போராடுவேன்" என்று கூறுகிறார்.
கணவர் கொலை செய்யப்பட்ட பிறகு, தீப்தி அனிஷின் படம் ஒன்றைத் தன்னுடன் வைத்துக் கொண்டு அதைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார். அனிஷ் விட்டுச் சென்ற குடும்பம் இப்போது தனது பொறுப்பாகும் என்றும் அவர்களைத் தான் கவனித்துக் கொள்ளப்போவதாகவும் தீப்தி கூறுகிறார். தற்சமயம் தீப்தி கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிஷின் கொலையாளிகளைச் சட்டம் தண்டிக்கவில்லை என்றாலோ அல்லது இதில் தான் தோல்வியுற்றாலோ, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் தானே தண்டிக்கப்போவதாக தீப்தி கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












