You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நரேந்திர மோதியின் தாராபுரம் பரப்புரை: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே மேடையில் பிரசாரம் - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளின் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்காக இன்று தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் ஒரே மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
இதையொட்டி இன்று காலை விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த நரேந்திர மோதி அங்கிருந்து காலை 11 மணிக்கு கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு சென்று கேரள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
அடுத்ததாக, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல். முருகனுக்கு ஆதரவாக அவர் பரப்புரை செய்தார்.
'வெற்றி வேல், வீர வேல்'
இதையொட்டி அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய பொதுக்கூட்ட மேடைக்கு வந்த நரேந்திர மோதி, தமது உரையை தொடங்கும் முன் அவருக்கு எல். முருகன் வேல் ஒன்றை பரிசாக வழங்கினார். இதைத்தொடர்ந்து, 'வெற்றி வேல், வீர வேல்' என்று கூறி தமது பரப்புரையைத் தொடங்கினார் நரேந்திர மோதி.
தமிழகத்தின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றான தாராபுரம் வந்தது மகிழ்ச்சி என்று மோதி குறிப்பிட்டார்.
உலகிலேயே மிகவும் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில், ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பேச தமக்கு வாய்ப்பு கிடைத்தது என் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று. தமிழ் மொழியையும், பண்பாட்டையும் மேம்படுத்த நாங்கள் விரும்புகிறோம், என நரேந்திர மோதி குறிப்பிட்டார்.
சமீபத்தில் சர்ச்சைக்கு உள்ளான திமுகவின் திண்டுக்கல் ஐ. லியோனி, ஆ. ராசா ஆகியோரின் பேச்சுகளையும் மோதி தமது உரையில் விமர்சித்தார்.
ஆண்டாள், ஒளவையார் ஆகியோரது கருத்துகளால் ஊக்கம் பெற்ற தாங்கள் மகளிர் மேம்பாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்றும் மோதி கூறினார்.
'தேசிய ஜனநாய கூட்டணி, வளர்ச்சிக்கான திட்டங்களை முன்வைக்கிறது. மற்றொருபுறம் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி குடும்ப அரசியலை முன்வைக்கின்றன. அவர்களிடம் ஆக்கபூர்வமான செயல்திட்டங்கள் என எதுவுமில்லை. அடுத்தவர்களை அவமானப்படுத்துவது, பொய்யான தகவல்களை பரப்புவதை மட்டுமே அவர்கள் செய்து வருகின்றனர்.
சமீபகாலங்களில் தமிழக பெண்களை அவர்கள் இழிவுபடுத்தி வருகின்றனர். இதை தேசிய ஜனநாயக கூட்டணி பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்காது. தமிழக மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினர் அவர்களது தலைவர்களை இதற்காக கண்டிக்க வேண்டும். சமீபத்தில் திமுகவைச் சேர்ந்த திண்டுக்கல் லியோனி, அக்கட்சியின் இளவரசனாக வலம் வருபவர் ஆகியோர் தமிழக பெண்களை இழிவுபடுத்திப் பேசினார்கள். அவர்களை அக்கட்சியினர் நிறுத்துவதாக தெரியவில்லை.
"பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு"
1989ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை திமுகவினர் எப்படி நடத்தினார்கள் என்பதை யாரும் மறக்க முடியாது. அவர்களிடம் பெண்கள் வளர்ச்சிக்காக உறுதியான திட்டங்கள் என எதுவும் இல்லை. அவர்களின் ஆட்சி காலத்தில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உச்சத்தில் இருந்தன.
காங்கிரஸோடு நட்புறவில் இருக்கும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரும் பெண்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி ஆண்டாள் மற்றும் அவ்வையாரின் கருத்துக்களை முன்னிறுத்தி, பெண்களின் முன்னேற்றத்தில் தான் சமூகத்தின் வளர்ச்சி இருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறது. அந்த வகையில் மகளிர், விவசாயிகள் மற்றும் சிறு குறு தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.' என மோதி தெரிவித்தார்.
மேலும், 'தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையால் வேலைவாய்ப்புகள் உருவாகும். அதேபோல் இங்கு பொம்மை உற்பத்திக்கான மையம் உருவாக்கப்பட்டு, உலக அளவில் தரமான பொம்மைகள் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும்.
குறிப்பாக, தேசத்தின் முதுகெலும்பாக விளங்கும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக தேசிய ஜனநாயக கூட்டணி திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. ஊழல் பார்வையைக் கொண்ட காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளால் தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்க முடியாது. உள்ளூரில் அதிகாரமிக்க ஆட்களை உருவாக்கி பணம் பறிப்பதும், மின் வெட்டை அமல்படுத்துவதும் தான் அவர்களால் முடியும்.
திருக்குறள் வலியுறுத்துவதை போல், விவசாயிகளின் பாதுகாப்பை முக்கிய பொறுப்பாக எங்கள் கூட்டணி கருதுகிறது. ஆண்டுதோறும் மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ரூ.6000 நிதியுதவி வழங்கியுள்ளோம். விவசாயிகளின் நலனுக்காக நீர்நிலைகளை புனரமைத்து வருகிறோம். இது போன்று மக்களின் வளர்ச்சிக்காக உழைக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்' என அவர் கேட்டுக்கொண்டார்.
கொங்கு பகுதியில் உள்ள மக்கள் தொழில் செய்வதற்கு பெயர் பெற்றவர்கள்; அதேபோல இரக்க குணத்துக்கும் பெயர் பெற்றவர்கள். கடந்த ஆண்டு கொங்கு மண்டலத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவங்கள் தங்கள் சக்திக்கு மீறி நாட்டுக்கு பங்காற்றின. அவற்றின் வளர்ச்சிக்கு உதவுவோம் என்று நரேந்திர மோதி தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து வசதிகள் தொடர்பான திட்டங்களும் பாஜக தேர்தல் அறிக்கையில் உள்ளது என்றும் அதை ஒவ்வொருவரும் படித்துப் பார்க்க வேண்டும் என்றும் நரேந்திர மோதி கேட்டுக் கொண்டார்.
நரேந்திர மோதியின் ஆங்கில உரையை கோயம்புத்தூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளரும், அந்தக் கட்சியின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தமிழில் மொழிபெயர்த்தார்.
ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
நரேந்திர மோதி பேசுவதற்கு முன்பு இந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாட்டின் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு நிதிகளை வாரி வழங்குவதாகத் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட பிரதமர் மோதிதான் காரணம் என்றும் அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி, நரேந்திர மோதி தலைமையிலான அரசு தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டங்களையெல்லாம் கொடுப்பதாகக் கூறினார்.
திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள உள்கட்டமைப்பு, உயர்கல்வி மற்றும் பிற திட்டங்களை எடப்பாடி பழனிசாமி தமது உரையில் பட்டியலிட்டார்.
பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டியவர்கள் கைது
முன்னதாக, பிரதமர் மோடியின் வருகையை கண்டித்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகள் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.
இலங்கைக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்ததற்காக பிரதமர் மோடியை கண்டித்து கோவை பீளமேடு சந்திப்பில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல், வேளாண் சட்டங்களை எதிர்த்து தாராபுரத்தில் உள்ள அண்ணாசிலை அருகே விவசாயிகள் சங்கத்தினர் கருப்புக்கொடி காட்டியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் போராட்டம் நடத்தினர்.
கேரளாவில் நரேந்திர மோதி பரப்புரை
முன்னதாக கேரள மாநிலம் பாலக்காட்டில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோதி அந்தத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எம். ஸ்ரீதரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
கேரளாவில் பாரதிய ஜனதா கட்சி வலுவாக உள்ள இடங்களில் ஒன்றாக பாலக்காடு கருதப்படுகிறது. சமீபத்தில் நடந்த கேரளா உள்ளாட்சித் தேர்தலில் பாலக்காடு நகராட்சியை பாஜக கைப்பற்றியது.
'மெட்ரோ மேன்' என்று பரவலாக அறியப்பட்ட 88 வயதாகும் ஸ்ரீதரன் சமீபத்தில்தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
கேரளாவில் பாஜகவுக்கு என்று மாநிலம் முழுவதும் பரவலாக அறியபட்ட முகமாக யாரும் இல்லாத நிலையில், ஓய்வு பெற்ற அரசு ஊழியரும், இந்தியாவின் பல மெட்ரோ ரயில் திட்டங்களுக்குத் தலைமையேற்று கண்காணித்தவருமான பொறியாளர் ஸ்ரீதரனை முன்னிறுத்தி பாஜக இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது.
கேரள மாநிலத்திலும் தமிழ்நாட்டுடன் சேர்ந்து ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆகிய இரண்டு கூட்டணிகளின் பெயர் மட்டுமே வேறு, ஆனால் இரண்டும் ஒன்றுதான் என்று மோதி அப்போது தெரிவித்தார்.
மாலை 4 மணியளவில் புதுச்சேரி சென்று பாஜக - அதிமுக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார் நரேந்திர மோதி.
வழக்கம்போலவே இன்றும் #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் சமூக ஊடகத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதற்கு எதிராக நரேந்திர மோதியின் ஆதரவாளர்கள் #TNWithPMModi என்ற ஹேஷ்டேகைப் பயன்படுத்தி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
நரேந்திர மோதி பங்கேற்கும் கூட்டங்களுக்கு அந்தந்த மாநில காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கின்றனர். இவர்கள் மட்டுமல்லாது டெல்லியில் இருந்து வந்த சிறப்பு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: