சிருஷ்டி கோஸ்வாமி: நிஜமான திரைப்பட கதை; ஒருநாள் முதல்வராக பதவியேற்ற 19 வயது மாணவி

சிருஷ்டி கோஸ்வாமி

பட மூலாதாரம், SRISHTI GOSWAMI

படக்குறிப்பு, சிருஷ்டி கோஸ்வாமி

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார் நகருக்கு அருகிலுள்ள தெளலத்பூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி, ஒரு நாளுக்கு (ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை) அந்த மாநிலத்தின் முதல்வராக செயல்பட்டார்.

உத்தரகாண்ட் மாநில வரலாற்றிலேயே முதல் பெண் முதல்வரும் இவர் தான். இவரது தந்தை ஒரு வியாபாரி. தாய் அங்கன்வாடியில் பணியாற்றுகிறார்.

இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இவருக்கு ஒரு நாள் முதல்வராக பணியாற்ற வாய்ப்பளித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சிருஷ்டி முதல்வராக செயல்படும்போது, அம்மாநிலத்தின் முதல்வராக இருக்கும் திரிவேந்திர சிங் ராவத்தும் உடனிருப்பார். இந்த நிகழ்ச்சி ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது.

பெண்களின் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஏற்பாடு என உத்தராகண்ட் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் உஷா நேகி கூறியுள்ளார்.

சிருஷ்டி கோஸ்வாமி

பட மூலாதாரம், SRISHTI GOSWAMI

உத்தராகண்ட் மாநிலத்தின் கெர்சாய்ன் என்கிற கோடை கால மாநில தலைநகரிலிருந்து, உத்தராகண்ட் மாநில முதல்வராக செயல்பட்ட சிருஷ்டி, பல்வேறு மாநில அரசின் திட்டங்களை பரிசீலித்தார் என்றும் தெரிகிறது.

ரூர்கியில் உள்ள பி.எஸ்.எம். பிஜி கல்லூரியில் விவசாய பாடப்பிரிவில் மூன்றாமாண்டு இளங்களை அறிவியல் படித்துக் கொண்டிருக்கும் இவர், அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், உத்தராகண்ட் மாநில சுற்றுலா துறையின் ஹோம் ஸ்டே திட்டம் போன்ற திட்டங்களை ஆய்வு செய்தார்.

சிருஷ்டி உத்தரகன்ட் மாநிலத்தின் குழந்தைகள் சட்டசபையில் கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து முதல்வராக செயல்பட்டு வருகிறார். இந்த குழந்தைகள் சட்ட சபையை மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடத்தி வருகிறது.

முன்னதாக, சிருஷ்டியை ஒரு நாள் முதல்வராக பதவியேற்கச் செய்வது குறித்து உத்தராகண்ட் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், அம்மாநிலத்தின் தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதினர்.

"சிருஷ்டி முதல்வராக செயல்படுவதற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளும் கெர்சாய்ன் மாநில சட்டசபைக் கட்டடத்தில் செய்யப்பட்டு வருகிறது. சிருஷ்டியும் இது தொடர்பாக எங்களோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவரின் திறனைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும்" என அந்த ஆணையத்தின் தலைவர் உஷா நேகி கூறினார்.

சிருஷ்டி கோஸ்வாமி

பட மூலாதாரம், SRISHTI GOSWAMI

கடந்த 1999ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'முதல்வன்' திரைப்படத்தில் வரும் 'ஒருநாள் முதல்வர்' என்ற காட்சி சிருஷ்டி கோஸ்வாமி மூலம் இன்று நிஜமாக உள்ளது. "இது உண்மை தானா என்பதை என்னால் நம்ப முடியவில்லை, நான் மிகவும் மகிழ்கிறேன். அதே நேரத்தில், இளைஞர்கள் மக்களின் நலன் சார்ந்து வேலை பார்க்கும் போது, நிர்வாகத்திலும் சிறந்து விளங்க முடியும் என்பதை நிரூபிக்க என்னால் முடிந்த வரை சிறப்பாகச் செயல்படுவேன்" என்று இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ளார் சிருஷ்டி கோஸ்வாமி.

இவர் மாநில முதல்வராக செயல்படுவதற்கு முன், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் அரசு நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து விளக்கமளிப்பார்கள் என மாநில அரசு அதிகாரிகள் தரப்பிலிருந்து கூறப்பட்டிருந்தது.

உத்தரகாண்ட் மாநில அரசின் இந்த புதுமையான நடவடிக்கையை பலரும் வரவேற்று கருத்துத் தெரிவித்து வந்தாலும், மறுபுறம் இதனால் உண்மையில் ஏற்படும் தாக்கம் என்னவென்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: