You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா தடுப்பூசி: 447 பேருக்கு எதிர்மறை விளைவுகள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
இந்தியாவில் முதல் இரண்டு நாள்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டதாகவும், அவர்களில் 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
முதல் நாளில் 1.91 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அரசு அறிவித்தது. ஆனால், 2-வது நாளில் 6 மாநிலங்களில் 17,072 பேர் ஊசி போட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இரண்டாவது நாளில் 165 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் தடுப்பூசித் திட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையை விட இந்தியாவில் அதிகம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது என்று இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.
முதல் இரண்டு நாள்களில் 447 பேருக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டதாகவும், ஆனால், அவற்றில் பெரும்பாலானவை காய்ச்சல், தலைவலி, உமட்டல் போன்ற லேசான அறிகுறிகள்தான் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறது சுகாதாரத் துறை.
டெல்லியில் மட்டுமே 51 பேருக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டதாகவும், அவர்களில் ஒருவருக்கு கொஞ்சம் சீரியசான பாதிப்பு என்றும் டெல்லி யூனியன் பிரதேச சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை மேற்கோள் காட்டி என்.டி.டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாக மத்திய சுகாதாரத் துறை கூறுகிறது.
பாதிக்கப்பட்ட 3 பேரில் ஒருவர் வடக்கு ரயில்வே மருத்துவமனையில் இருந்தும், ஒருவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்று சுகாதாரத் துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வழக்கமான சுகாதாரப் பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக வாரத்துக்கு 4 நாள்கள் மட்டுமே தடுப்பூசி போடும்படி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை கூறியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: