கோவேக்சின் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பின் ஹரியானா அமைச்சர் அனில் விஜ்ஜுக்கு கோவிட்-19 உறுதி, பாரத் பயோடெக் விளக்கம்

ஹரியானா மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் தமக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தின் சுகாதார அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும், 67 வயதாகும் அனில் விஜ், இந்திய மருந்து உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடெக் தயாரிக்கும் கோவேக்சின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனைகளில் பங்கெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற நவம்பர் 20ஆம் தேதி அவருக்கு கோவேக்சின் தடுப்பு மருந்து பரிசோதனைக்காக உடலில் செலுத்தப்பட்டது.

அதற்கு முன்னதாக மாநிலத்திலேயே கோவேக்சின் தடுப்பு மருந்துதை உடலில் செலுத்தி மேற்கொள்ளப்படும் சோதனையில் பங்கேற்க முன்வரும் ஹரியானாவின் முதல் தன்னார்வலர் தாம்தான் என்று அவர் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இன்று காலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "எனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அம்பாலா கண்டோன்மென்ட்டில் உள்ள சிவில் மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்று அவர்.

பாரத் பயோடெக் விளக்கம்

இது குறித்து கோவேக்சின் தடுப்பூசி தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கோவேக்சின் தடுப்பூசி இரண்டு டோஸ் எடுத்துக்கொள்ளும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே மனிதர்களிடம் பரிசோதிக்கப்படுகின்றன என்று பாரத் பயோடெக் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

"முதல் டோஸ் போட்டு 28 நாள் இடைவெளிவிட்டு இரண்டாவது போடவேண்டும். இரண்டாவது டோஸ் போட்டபிறகு 14 நாள் கழித்த பிறகே இந்த தடுப்பூசி பலன் தரும்.

இரண்டு டோஸையும் போட்டுக்கொண்ட பிறகே பலன் தரும் வகையிலேயே கோவேக்சின் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றும் பாரத் பயோடெக் நிறுவனம் கூறியிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது ஏ.என்.ஐ.

கொரோனா தொற்று: நீதிபதி மரணம்

இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவாக்சின் தடுப்பு மருந்து

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட பரிசோதனை நிலையில் உள்ளது.

மூன்றாம் கட்ட பரிசோதனையின்போது தடுப்பு மருந்துகள் மனிதர்களின் உடலுக்குள் செலுத்தப்பட்டு அவற்றின் செயல்திறன் மற்றும் தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் தன்மை ஆகியவை பரிசோதிக்கப்படும்.

'கோவேக்சின்' தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதைனையில் 26,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

ஐ.சி.எம்.ஆர் உடன் இணைந்து தாங்கள் கோவேக்சின் தடுப்பு மருந்தை பரிசோதித்து வருவதாகவும், அது தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் நுழைந்துள்ளது என்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா நவம்பர் 16, 2020 அன்று தெரிவித்துள்ளார்.

மூக்கு துவாரங்கள் வழியாக உடலுக்குள் செலுத்தப்படும் சொட்டு மருந்து வடிவிலான கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மருந்து ஒன்றும் அடுத்த ஆண்டு தயாராகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விலங்குகள் மீது நடத்தப்பட்ட கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது என பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த செப்டம்பரில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதி, கொரோனா தடுப்பு மருந்து மேம்பாடு மற்றும் உற்பத்திகுறித்து நேரடியாக மேற்பார்வை செய்ய மூன்று நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டார்.

அதன் ஒரு பகுதியாக ஹைதராபாத் நகரத்தில் அமைந்து இருக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்குச் சென்றார் நரேந்திர மோதி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: