You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புரெவி புயல்: வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது
மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் வியாழக்கிழமை மாலை ஐந்தரை மணியளவில் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த் தாழ்வு மண்டலமாக மாறியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன், "மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த புரெவி புயல், வியாழக்கிழமை மாலை ஐந்தரை மணியளவில் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக பாம்பனுக்கு தென்மேற்கு திசையில் 20 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து ராமநாதபுரத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடைப்பட்ட பகுதியில் வியாழக்கிழமை இரவு - வெள்ளிக்கிழமை அதிகாலையில் கரையைக் கடக்கக்கூடும்" என்று கூறினார்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும். இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக பகுதியில் 50 -60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டின் மத்தியப் பகுதிகளிலும் தென் பகுதிகளிலும் கன மழைக்கான வாய்ப்பு உண்டு எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தாழ்வான பகுதிகளில் மக்கள் வெளியேற்றம்
முன்னதாக, புதன்கிழமை மாலை முதல் ராமேஸ்வரம் பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசித்து வந்த பொதுமக்கள் வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டார்கள். புரெவி புயல் காரணமாக தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தனுஷ்கோடி பகுதியில் கடல் அலையில் சிக்கி புதிதாக போடப்பட்ட சாலை பாதிக்கப்பட்டுள்ளது.புதன்கிழமை நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக தனுஷ்கோடி பகுதி மீனவர்களை மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்சென்றது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாதுகாப்பாக நிறுத்தவேண்டும் என்பதற்காக வடக்கு கடற்கரையிலிருந்து பாம்பன் பாலம் வழியாக தெற்கு குந்துகால் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கே நிறுத்தி வைக்கப்பட்ட விசைப்படகுகளில் மூன்று, நேற்றிரவு வீசிய சூறைக்காற்று காரணமாக நங்கூரம் அறுந்து கரை ஒதுங்கி உள்ளன. இதனால் மீனவர்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது .மதுரை விமான நிலையம் மூடல்
புரெவி புயல் காரணமாக மதுரை விமான நிலையம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 4) காலை முதல் பகல் 12 மணி வரை மூடப்படுவதாகவும் அனைத்து விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எனவே பயணிகள் விமான நிலையம் வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இதே போல் புரெவி புயல் காரணமாக தூத்துக்குடி விமான நிலையம் வெள்ளிக்கிழமை முழுவதும் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள் :
- "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
- விவசாயிகள் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் எங்கே? அய்யாக்கண்ணு என்ன செய்கிறார்?
- முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் சென்னையில் கைது - தொடரும் சர்ச்சை வரலாறு
- சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்திய நடராஜன் - அசத்தும் தமிழக வீரர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்