துரைக்கண்ணு மரணம்: கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த தமிழக வேளாண் துறை அமைச்சரின் உடல் நல்லடக்கம்

பட மூலாதாரம், Tndipr
கொரோனா தொற்றால் உயிரிழந்த தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் 63 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க இன்று மாலை (ஞாயிற்றுக்கிழமை) நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, கொரோனா தொற்றால் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 72 வயதான அமைச்சர் துரைக்கண்ணு, சிகிச்சை பலனின்றி அக்டோபர் 31ஆம் தேதி இரவு 11.15 மணியளவில் உயிரிழந்தார் என அவருக்கு சிகிச்சையளித்துவந்த காவிரி மருத்துவமனை தெரிவித்திருந்தது.
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே கட்சிப்பணியில் திறம்பட பணியாற்றியவர் அமைச்சர் துரைகண்ணு என்றும், அவரின் மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் கடந்த 12ஆம் தேதி இரவு சேலத்தில் மரணம் அடைந்த நிலையில் அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக துரைக்கண்ணு காரில் புறப்பட்டார்.
விழுப்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற அவர், சென்னைக்கு கொண்டுவரப்பட்டார்.
சென்னையிலுள்ள காவிரி மருத்துவனையில் சேர்க்கப்பட்டபோது அவருக்கு மூச்சுத் திணறல் இருந்தது. இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனோ தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

- கொரோனா வைரஸ்: உலகெங்கும் கோவிட்-19 பாதிப்பு எவ்வளவு?
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது கிடைக்கும்?
- கொரோனா சானிடைசர் தரமானதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
- கொரோனா வைரஸ்: குணமடைய சிலருக்கு தாமதம் ஆவது ஏன்?
- கோவிட் 19: பிற வைரஸ்களைவிட கொரோனா ஏன் மிகவும் ஆபத்தானது?
- கொரோனா காலத்தில் பாதுகாப்பாக உடலுறவு வைத்துக்கொள்வது எப்படி?

இதையடுத்து அவருக்கு கொரோனாவுக்கான சிகிச்சையும் அதன் பாதிப்புகளுக்கான சிகிச்சையும் தொடர்ந்து வழங்கப்பட்டன. இருந்தபோதும் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்துவந்தது.
அவருக்கு எடுக்கப்பட்ட சி.டி. ஸ்கேனில் அவரது நுரையீரல் 90 சதவீதம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவருக்கு பல இணை நோய்களும் இருந்துவந்தன. அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு எக்மோ கருவி பொறுத்தப்பட்டது.
அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால், 24 மணி நேரத்திற்குப் பிறகே அவரது உடல்நலம் குறித்துத் தெரியவரும் என வெள்ளிக்கிழமையன்று மருத்துவமனை அறிவித்தது. இந்த நிலையில், சனிக்கிழமையன்று இரவு 11.15 மணியளவில் அவர் மரணமடைந்தார்.
1948ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் பிறந்தவர் துரைக்கண்ணு. இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர். 2016ஆம் ஆண்டு பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று வேளாண்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
அதே தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் 2006, 2011 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றாலும் இந்த முறைதான் அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.
அ.இ.அ.தி.மு.க. துவங்கப்பட்டபோது அக்கட்சியில் சேர்ந்த இவர், மாணவரணி, இளைஞரணி உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். பாபநாசம் ஒன்றியத்தின் அ.இ.அ.தி.மு.க செயலராகவும் துரைக்கண்ணு இருந்துள்ளார்.
பிற செய்திகள்:
- விண்வெளியில் 'பாங்கு' சொல்லும் ஒலி: நீல் ஆம்ஸ்ட்ராங் இஸ்லாம் மதத்துக்கு மாறினாரா?
- "மேற்குலக நாடுகளுக்கு இஸ்லாம், முஸ்லிம், நபிகள் பற்றிய புரிதல் இல்லை" - இம்ரான் கான்
- “பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்” - பிரதமர் மோதி
- துருக்கி, கிரீஸில் நிலநடுக்கம் - கடலோர நகரங்களில் வெள்ளம் - பலர் உயிரிழப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












