இந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா? - கொரோனா வைரஸ் பொருளாதார நெருக்கடி

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Pti

படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி

இந்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட காலாண்டு அறிக்கையில், இந்திய அரசின் கடன் படிப்படியாக உயர்ந்து வந்திருப்பதும், அது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா சூழலால் இந்த அளவு கடன் வாங்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக மொத்த கடன் அளவு நூறு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

மார்ச் இறுதியில் 94.6 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன் அளவு ஜூன் இறுதியில் 101.3 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதே காலகட்டத்தில் கடந்தாண்டு, அதாவது ஜூன் 2019ஆம் ஆண்டு ரூபாய் 88.18 லட்சம் கோடியாக இருந்தது.

ஜூன் மாத இறுதி நிலவரப்படி, தேசிய சிறு சேமிப்பு நிதியம், வருங்கால வைப்பு நிதி போன்றவற்றுக்கு இந்திய அரசு வழங்க வேண்டியுள்ள தொகை போக, அரசு வாங்கிய கடனில் திரும்ப செலுத்த வேண்டிய தொகை மட்டும் இந்திய அரசின் கடனில் 91.1% என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Nirmala Sitharaman facebook page

படக்குறிப்பு, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி தற்போதைய கடன் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 43%ஆக உள்ளது. 2021 நிதி ஆண்டின் இறுதியில் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதத்தை தொடும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடன்கள் வாங்கியதற்காக இந்திய அரசு வழங்கியுள்ள பத்திரங்களில், 28.6% பத்திரங்களுக்கான கால வரையறை ஐந்து ஆண்டுகளை விடவும் குறைவு. இந்த பத்திரங்களில் 39% வங்கிகளிடமும், 26.2% காப்பீட்டு நிறுவனங்களிடமும் உள்ளன என்கிறது அரசின் அறிக்கை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :