ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டது நிலநடுக்கமா? வெடிகுண்டு சம்பவமா? - குழம்பிய நெட்டிசன்கள்

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென நிலப்பகுதிகள் அதிர்ந்து கட்டடங்கள் குலுங்கியதால், அங்கு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஒரு சிலரும் மிகப்பெரிய வெடிச்சம்பவம் நடந்ததாகவும் சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பதிவிட்ட தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தின.

இது தொடர்பான தகவலை இஎம்எஸ்சி என்ற டிவிட்டர் நிறுவனத்தின் ப்ளூ பேட்ஜ் கொண்ட பூகம்ப தகவல்களை வெளியிடும் பக்கம் இரவு 9.43 மணிக்கு பதிவிட்டது. அதில் ஜம்மு காஷ்மீரில் பூகம்பம் போன்ற ஒன்று தாக்கியது. நீங்கள் அதை உணர்ந்தீர்களா என்று கேட்கப்பட்டிருந்தது.

பிறகு அரை மணி நேரம் கழித்து அதே பக்கத்தில் ஸ்ரீநகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறி ஒரு வரைடபடமும் அந்த பக்கத்தில் பதிவிடப்பட்டது.

முன்னதாக, ஏஎன்ஐ செய்தி முகமை அதன் டிவிட்டர் பக்கத்தில் ஸ்ரீநகரில் நிலநடுக்கம் உணரப்பட்டது என்று இஎம்எஸ்சி என்ற ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு அளவீட்டு மைய தகவலை மேற்கோள்காட்டி செய்தியை பகிர்ந்தது.

காஷ்மீரில் உள்ள சுயாதீன பத்திரிகையாளர் ஆதித்ய ராஜ் கவுல், காஷ்மீர் பள்ளத்தாக்கில் நில அதிர்வு உணரப்பட்டது. சிலர் அதை பூமி அதிர்ச்சி என்கிறார்கள். சிலர் ஏதோ மிகப்பெரிய வெடிச்சம்வம் என்கிறார்கள். சிலர் இது ஏதோ சூப்பர்சோனிக் விமானமாக இருக்கலாம் என கூறி அலுவல்பூர்வ தகவலுக்காக காத்திருக்கிறோம் என்று கூறியிருந்தார்.

உண்மை என்ன?

இந்த நிலையில், இந்தியாவின் தேசிய நிலஅதிர்வு அளவீட்டு மையம் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து வடமேற்கே 11 கி.மீ தூரத்தில் 3.6 ஆக நில அதிர்வு பதிவானதாக தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வின் ஆழம் ஐந்து கிலோ மீட்டராக இருக்கும் என்றும் அந்த அலுவலகம் கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: