`இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த சுகாதார பணியாளர்கள் குறித்த தகவல்கள் இல்லை`

இந்திய மருத்துவர் கழகம் இரண்டு தினங்களுக்கு முன்பு கடுமையான வார்த்தைகளில் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.

மத்திய இணை அமைச்சர் அஸ்வினி செளபே அண்மையில் கொரோனாவால் எத்தனை சுகாதார பணியாளர்கள் பலியானார்கள் என்பது குறித்த தகவல்கள் மத்திய அரசிடம் இல்லை என்று தெரிவித்து இருந்தார்.

சுகாதாரம் மாநில பட்டியலில் வருவதால் தகவலை திரட்ட முடியவில்லை என்று அவர் கூறி இருந்தார்.

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் காப்பீடு திட்டத்தின் கீழ் 64 மருத்துவர்கள் உட்பட 155 சுகாதார பணியாளர்கள் நிவாரண நிதிக்கு விண்ணப்பித்து உள்ளனர். அப்படியானால் 155 பேர் பலியாகி உள்ளனர் என்று தெரிவித்து இருந்தார்.

ஆனால், மாவட்ட வாரியாக திரட்டிய தகவல்களின் படி கொரோனாவால் குறைந்தது 382 மருத்துவர்கள் பலியாகி உள்ளதாக இந்திய மருத்துவக் கழகம் தெரிவித்துள்ளது.

“இந்த தகவல்கள் தேசத்தின் கவனத்தை கோரவில்லை என்பது வெறுப்பை ஊட்டுகிறது. கொரோனாவால் எத்தனை சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் அல்லது பலியாகி உள்ளனர் என்பது தெரியாமல் இருப்பது, , தொற்றுநோய் சட்டத்தை நிர்வகிப்பதற்கான தார்மீக அதிகாரத்தை மத்திய அரசு இழப்பதை காட்டுகிறது,” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவை போல வேறு எந்த நாட்டிலும் சுகாதார பணியாளர்கள் பலியாகவில்லை. ஒரு பக்கம் கொரோனா போராளிகள் என்கிறீர்கள். ஆனால் மறுபக்கம் அவர்களுக்கான பலன்களை மறுக்கிறீர்கள் என்ற தொனியில் அந்த கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.

இந்திய மருத்துவக் கழகம் பகிர்ந்துள்ள பட்டியலின்படி தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 60 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. இன்று காலை நிலவரப்படி 51 லட்சத்து 18 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 83,198 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :