You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தூங்கிக் கொண்டே மணிக்கு 150 கி.மீ வேகத்தில் கார் ஓட்டிய நபர் மீது வழக்கு மற்றும் பிற செய்திகள்
பகுதியளவு தானாக இயங்கக்கூடிய டெஸ்லா கார் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்க, அதில் இருந்த ஓட்டுநரும் சக பயணியும் தூங்கியதாக கனடாவில் வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது.
அல்பர்டாவில் நடந்த இச்சம்பவத்தில், காரின் முன் இருக்கைகள் இரண்டும், முழுவதுமாக சரிந்திருந்து, அதில் ஓட்டுநரும், சக பயணியும், நல்ல உறக்கத்தில் இருந்ததாக போலீஸசார் தெரிவிக்கின்றனர்.
டெல்ஸா மாடல் எஸ் ரக காரை போலீஸார் கண்டறிந்தபோது, அந்த கார் மணிக்கு 140-150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
காரை ஓட்டிச்சென்ற பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த 20 வயதான நபர் மீது ஆபத்தான வகையில் வாகனத்தை ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கார் எந்த வழியாக சென்று கொண்டிருக்கிறது என்று யாரும் பார்க்கவில்லை. காரில் யாரும் இருந்ததாகவே தெரியவில்லை. முன் எந்த வாகனமும் இல்லை என்பதால், அந்த கார் வேகமாக சென்று கொண்டிருந்தது என சிபிசி செய்தியிடம் போலீஸ் அதிகாரி டாரி டர்ன்புல் தெரிவித்தார்.
"நான் 23 ஆண்டுகளாக காவல்துறையில் இருக்கிறேன். பெரும்பாலும் போக்குவரத்து காவல் அதிகாரியாகவே இருந்திருக்கிறேன். இந்த சம்பவம் போல ஒன்றை இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. இந்த அளவிற்கு தொழில்நுட்பம் இருந்ததில்லை என்பதும் இருக்கிறது" என அவர் கூறினார்.
டெஸ்லா கார்கள், இரண்டு நிலை ஆட்டோ பைலட் செயல்பாடு கொண்டவை. ஆனால், ஓட்டுநர் எப்போதும் விழிப்புடனே இருப்பது அவசியம்.
முழுவதுமே தானாகவே இயங்கக்கூடிய கார், இந்தாண்டு இறுதிக்குள் தயாரித்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
ஆனால், அதனை உலகிற்கு அறிமுகப்படுத்தி பரிசோதிக்கும் முன், ஒரு சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மோதி அமைச்சரவையில் இருந்து ஹர்சிம்ரத் கெளர் பாதல் ராஜிநாமா
இந்திய பிரதமர் நரேந்திர மோதி அமைச்சரவையில் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கெளர் பாதல் தனது பதவியில் இருந்து வியாழக்கிழமை மாலை விலகியிருக்கிறார். இது தொடர்பான கடிதத்தை பிரதமர் நரேந்திர மோதியின் நாடாளுமன்ற அலுவலகத்தில் அவர் அளித்துள்ளார்.
இந்த தகவலை தமது டிவிட்டர் பக்கம் வாயிலாக ஹர்சிம்ரத் பாதல் உறுதிப்படுத்தினார்.
அதில், விவசாயிகளுடன் அவர்களின் மகளாக, சகோதரியாக நிற்பதில் பெருமை கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
விரிவாக படிக்க:ஹர்சிம்ரத் கெளர் பாதல் ராஜிநாமா - மோதி அமைச்சரவையில் இருந்து விலகும் முதல் பெண் அமைச்சர்
இந்தியா Vs சீனா: "தலை வணங்கவும் மாட்டோம் தலை எடுக்கவும் மாட்டோம்"
இந்தியாவின் கிழக்கு லடாக் பிராந்தியத்துக்கு அப்பால் உள்ள அசல் கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) அருகே பதற்றம் நிலவும் விவகாரத்தில் இந்தியா தனது நிலையில் இருந்து பின்வாங்காது என்று அதன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று எல்லை பாதுகாப்பு சூழ்நிலை தொடர்பாக விளக்கம் அளித்த ராஜ்நாத் சிங், எல்லை பதற்ற விவகாரத்தில் இந்தியா தலை வணங்கவும் செய்யாது, பிறரது தலையை எடுக்கவும் செய்யாது என்று தெரிவித்தார்.
எல்லையில் இந்தியாவின் பாதுகாப்பு சமரசம் செய்து கொள்ளப்படும் சூழல் எழுமானால், அந்த நிலையை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது என்று அவர் கூறினார்.
விரிவாக படிக்க:இந்தியா Vs சீனா: "தலை வணங்கவும் மாட்டோம் தலை எடுக்கவும் மாட்டோம்" - ராஜ்நாத் சிங் மீண்டும் திட்டவட்டம்
இலங்கை தாதா அங்கொட லொக்கா மாரடைப்பால் உயிரிழப்பா?
இலங்கையில் கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த அங்கொட லொக்கா, தமிழகத்தில் உள்ள கோவை நகரில் ஜூலை மாதம் உயிரிழந்தார். அவரது பிரேத உடலை ஆய்வு செய்ததில் மாரடைப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை குற்றப்புலனாய்வு சிஐடி (சிபிசிஐடி) ஐ.ஜி சங்கர் தகவல் அளித்துள்ளார்.
அங்கொட லொக்கா உயிரிழந்த வழக்கில் சிவகாமி சுந்தரி, அம்மானி தான்ஜி, தியானேஸ்வரன் ஆகியோர் ஆகஸ்ட் 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்குப் உட்படுத்தப்பட்டனர். மேலும், அங்கொட லொக்கா மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸுக்கு கர்நாடகா எம்.பி பலி
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாரதிய ஜனதா கட்சி எம்.பி அசோக் கஸ்தி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 55. கடந்த ஜூலை மாதம்தான் அவர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார்.
கொரோனா வைரஸ் பரிசோதனையில் அவருக்கு கடந்த 2ஆம் தேதி வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கடந்த சில நாட்களாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, சுவாசக்கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு வேறு சில உடல் பிரச்னைகளும் இருந்ததாக அவரை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்தனர்.
விரிவாக படிக்க: கொரோனா வைரஸுக்கு கர்நாடகா எம்.பி பலி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :