கொரோனா வைரஸுக்கு கர்நாடகா எம்.பி பலி

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாரதிய ஜனதா கட்சி எம்.பி அசோக் கஸ்தி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 55. கடந்த ஜூலை மாதம்தான் அவர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார்.

கொரோனா வைரஸ் பரிசோதனையில் அவருக்கு கடந்த 2ஆம் தேதி வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடந்த சில நாட்களாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, சுவாசக்கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு வேறு சில உடல் பிரச்னைகளும் இருந்ததாக அவரை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்தனர்.

அசோக் கஸ்தியின் மறைவுக்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மிகவும் தாழ்மையான பின்னணியைக் கொண்ட அசோக் கஸ்தி, சமூகத்துக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர் என்று கூறியுள்ளார்.

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசோக் கஸ்தின் அகால மரணம் தனக்கு அதிர்ச்சியும் வலியையும் தருவதாகத் தெரிவித்து தமது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொழில்முறை வழக்கறிஞரான அசோக் கஸ்தி, கர்நாடாக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். அடிப்படையில் அகில வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் இருந்த அவர், தனது 18ஆவது வயதில் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினரானார். பிறகு அக்கட்சியின் இளைஞர் அணி தலைவராகவும் இருந்த அவர் ஆர்எஸ்எஸ் மேலிட தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :