You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரணாப் முகர்ஜி காலமானார் - 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
டெல்லி ராணுவ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சகிச்சை பெற்று வந்த இந்திய குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று (31.08.2020) மாலை காலமானார்.
இந்த தகவலை அவரது மகன் அபிஜித் முகர்ஜி உறுதிப்படுத்தி தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது மறைவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரணாப் முகர்ஜியின் மரணத்துக்கு இந்திய அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதன்படி 31.08.20 முதல் 06.09.2020 வரை இந்தியா முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் நாடு முழுவதும் அரசு கட்டடங்களில் தேசிய மூவர்ண கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அரசுப்பூர்வ மரியாதை செலுத்தும் நிகழ்வு எப்போது நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மூளையில் ஏற்பட்ட கட்டியின் அறுவை சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சென்றபோது அவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி அவருக்கு மூளையில் இருந்த கட்டிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு இருந்ததால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது என்றும் ராணுவ மருத்தவமனை கூறியது.
இதைத்தொடர்ந்து வென்டிலேட்டர், எக்மோ கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும்,கோமா நிலைக்கு சென்ற அவரது உடல்நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே வந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்த ராணுவ மருத்துவமனை கூறியது. இந்த நிலையில், அவரது மரணம் தொடர்பான தகவல் இன்று வெளிவந்துள்ளது.
பிரணாப் முகர்ஜியின் மறைவு குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள, இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள செய்தியில், அவரது குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி காலமானதை அறிந்து, இந்தியா துயரத்தில் ஆழ்ந்துள்ளது. அவர் நம் தேசத்தின் வளர்ச்சிப் பாதையில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தினார். ஒரு அறிஞர் சமமானவர், ஒரு உயர்ந்த அரசியல்வாதி, அவர் அரசியல் ஆளுமை மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவுகளாலும் போற்றப்பட்டார் பிரணாப்" என்று பிரதமர் மோதி கூறியுள்ளார்.
இந்திய பிரதமராக பதவியேற்ற பிறகு தனிப்பட்ட முறையில் பிரணாப் முகர்ஜியை சந்தித்து அவரது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்ற புகைப்படத்தையும் இந்திய பிரதமர் மோதி தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் உயரிய தலைவர்களில் ஒருவரான பிரணாப் முகர்ஜி, தனது நேர்மை, கனிவான குணத்தால் எப்போதும் நினைவில் இருப்பார். அவரது மறைவு ஆழமான வலியைத் தந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி டிவிட்டர் வாயிலாக இரங்கலை பகிரந்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், மிகவும் துயரத்துடன் துரதிருஷ்டவசமாக பிரணாப் முகர்ஜி காலமான தகவல் தேசத்துக்கு வந்துள்ளது. அவரது மறைவுக்கு நாட்டு மக்களுடன் சேர்த்து நானும் எனது மரியாதையை செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஸ்மிரிதி இரானி உள்ளிட்டோரும் பிரணாபின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
வெளிநாட்டுதலைவர்கள் இரங்கல்
பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சிறந்த அரசியல்வாதிகள், எழுத்தாளர் மற்றும் அனைவராலும் விரும்பப்பட்ட மனிதர். தனது தேசத்திற்கு அவர் ஆர்வத்துடன் ஆற்றிய பணி, ஈடு இணையற்றது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று கூறியுள்ளார்.
நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது இரங்கல் செய்தியில், நேபாளம் சிறந்த நண்பரை இழந்து விட்டது. பொதுவாழ்வில் பல்வேறு நிலைகளில் இருந்த அவர் இந்தியா - நேபாளம் இடையிலான உறவு வலுப்பெற வழங்கிய பங்களிப்பை நேபாளம் நினைவுகூர்கிறது என்று கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- பிரணாப் முகர்ஜி: அரசியல் உச்சங்களை தொட்டவர், "பிரதமர்" பதவியைத் தவிர
- கொரோனாவில் இருந்து மீண்ட 906 இலங்கை கடற்படையினர்
- இலங்கை போரில் மக்களை கொன்றதா ராணுவம்? எரிக் சொல்ஹெய்ம் கருத்தை நிராகரித்தது இலங்கை அரசு
- பிரசாந்த் பூஷண்: "ஒரு ரூபாய் அபராதம்" - இந்திய உச்ச நீதிமன்றம்
- இந்தியா - சீனா எல்லை பதற்றம்: ’லடாக் எல்லையில் மீண்டும் அத்துமீறிய சீன ராணுவம்’
- இந்திய பொருளாதாரத்தின் எதிர்மறை வளர்ச்சி உங்களை எப்படி பாதிக்கும்?
- யுவன் சங்கர் ராஜா: அம்மா பாசம், நா.முத்துக்குமார் நட்பு - 10 தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: