தமிழ்நாட்டில் கொரோனா பொது முடக்கம்: ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை நீட்டிப்பு

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் ஆக்ஸட் 31ஆம் தேதிவரை கூடுதல் தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். மாவட்டங்களுக்கிடையே செல்வதற்கு இ - பாஸ் முறை தொடர்ந்து நீடிக்கிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்தப் பொது முடக்கம் ஜூலை 31ஆம் தேதியுடன் நிறைவுக்கு வரும் நிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரு நாட்களாக முதலமைச்சர் கலந்தாலோசனைக் கூட்டங்களை நடத்தினார். அதன் அடிப்படையில் இந்தப் பொதுமுடக்கம் ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதுதவிர, ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரக் காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தற்போது ஐம்பது சதவீதப் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கும் நிறுவனங்கள் அனைத்தும் 75 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.
உணவகங்களிலும் தேநீர்க் கடைகளிலும் மொத்த இருக்கைகளில் 50 சதவீதம் அளவுக்கு காலை ஆறு மணி முதல் மாலை 7 மணிவரை உள்ளே அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுகிறது. ஏசியை இயக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. பார்சல் உணவுகளைப் பொறுத்தவரை இரவு 9 மணிவரை வழங்கலாம்.
ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்களில் மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதியுடன் தரிசனங்கள் அனுமதிக்கப்படும். ஆனால், மாநகராட்சிப் பகுதிகளிலும் பெரிய வழிபாட்டுத் தலங்களிலும் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.
காய்கறிக் கடைகள், மளிகைக்கடைகள் ஆகியவை இரவு ஏழு மணி வரை இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகளும் இரவு ஏழு மணிவரை இயங்க அனுமதிக்கப்படும். அத்தியாவசியமற்ற பொருட்களையும் இ - காமர்ஸ் நிறுவனங்கள் விநியோகம் செய்யலாம்.
ரயில், விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே உள்ள நிலை தொடரும். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போது, பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும்போது அந்தந்த மாவட்டத் தலைவரிடம் இ - பாஸ் பெற வேண்டும்.
சுதந்திர தினத்தைப் பொறுத்தவரை முகக் கவசம் அணிந்து, சமூக விலகலுடன் கொண்டாடப்படும்.
மதம் சார்ந்த கூட்டங்களுக்கு, சுற்றுலாத் தளங்களுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. வணிக வளாகங்களைத் திறக்கவும் கல்வி நிலையங்களைத் திறக்கவும் தடை நீடிக்கிறது.
மெட்ரோ ரயில், மின்சார ரயில், பேருந்துப் போக்குவரத்து, திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடருமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்த் தொற்றின் நிலையை மனதில் கொண்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படுமென்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












