You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஏ.ஆர்.ரஹ்மான் புறக்கணிக்கப்படுவதற்கு ஆஸ்கர் விருது காரணமா? என்ன சொல்கிறார் அவர்?
பாலிவுட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் புறக்கணிக்கப்படுவதற்கு அவர் வாங்கிய ஆஸ்கர் விருதுதான் காரணம். பாலிவுட் கையாளமுடியாத அளவுக்கு அவர் அதிக திறமைசாலி என்று பொருள்படும்படி இந்தி திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் ட்வீட் செய்திருந்தார்.
அவருக்கு ட்விட்டரில், "இழந்த பணம் திரும்பி வரும், இழந்த புகழும் திரும்பி வரும். ஆனால், நம் வாழ்வின் முக்கியமான தருணத்தில் இழந்த காலம் திரும்பி வராது. அமைதி கொள்ளுங்கள். நாம் பெரிய வேலைகள் செய்யவேண்டியிருக்கிறது" என்று பதில் சொல்லியிருந்தார் ரஹ்மான்.
முன்னதாக வேறொரு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தாம் நல்ல படங்கள் வரும்போது வேண்டாம் என்று சொல்வதில்லை. ஆனால், ஒரு கும்பல் தமக்கு எதிராக புரளி பரப்பிக்கொண்டிருக்கிறது என்று கூறியிருந்தார். அது தொடர்பான செய்தியைப் பகிர்ந்துதான் சேகர் கபூர் மேற்கண்ட ட்வீட்டை செய்திருந்தார்.
அந்தப் பேட்டியில் ரஹ்மான் மேலும்என்ன கூறியிருந்தார்?
அந்தப் பேட்டியில் ரஹ்மான் மேலும் கூறியிருந்தது: "தில் பெசாரா' படத்துக்கு இசையமைக்க இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தார். இரண்டு நாட்களில் அவரிடம் நான்கு பாடல்களை கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம், 'பலர் என்னை உங்களிடம் போக வேண்டாம் என்று கூறினார்கள்.
அவர்கள் ஏதேதோ கதைகளை சொல்கிறார்கள்' என்று கூறினார். அப்போதுதான் எனக்கு புரிந்தது. அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் இந்த தவறை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று."
அவர், "பரவாயில்லை. எனக்கு விதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் இறைவனிடமிருந்தே வருகிறது என்று நம்புபவன் நான். எனக்கு வரும் படங்களுக்கு நான் இசையமைக்கிறேன். அனைவரையுமே நான் வரவேற்கிறேன்," இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: