You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாச பேச்சு: ஒருவர் கைது, ஒருவர் சரண்
கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாகப் பேசிய விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் நேற்று (ஜூலை 15)ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து சுரேந்திரன் என்பவர் ஆபாசமாகப் பேசியது குறித்து சமீபத்தில் தமிழக பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் சென்னை நகரக் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவுசெய்யப்பட்ட நிலையில், மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
இதனிடையில் அந்த யூ டியூப் சேனலைச் சேர்ந்த முக்கிய நபர்கள் அனைவரையும் கைதுசெய்ய வேண்டும் எனக் கோரி, தமிழக பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் இன்று காலையில் போராட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், அந்த சேனலை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
அப்போது வழக்கு தமிழக காவல் நிலையத்தில் இருப்பதால் சுரேந்நர் நடராஜனை புதுச்சேரி காவல்துறை கைது செய்ய மறுத்துவிட்டனர். மேலும், இதுகுறித்து தமிழகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, தமிழக போலீஸார் வரும்வரை சுரேந்தர் நடராஜனுக்கு புதுச்சேரி காவல் துறையினர் பாதுகாப்பு வழங்கினர்.
பின்னர், சென்னையிலிருந்து வந்த குற்றப்பிரிவு காவல் துறையினர் சுரேந்தர் நடராஜனை கைது செய்து, சென்னை அழைத்துச் சென்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: