தமிழக அரசியல்: திமுகவில் இருந்து பாஜகவுக்கு மாறிய துரைசாமிக்கு கட்சி பதவி

பட மூலாதாரம், ANI
கடந்த மே மாதம் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி அந்த கட்சியின் மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாஜகவின் மாநில தலைவர் முருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், துரைசாமி உள்ளிட்ட பத்து நபர்கள் கட்சியின் புதிய துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்துவந்த வி.பி துரைசாமி பாஜகவின் மாநில துணை தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
1989 - 1991, 2006 - 2011 ஆகிய ஆண்டுகளில் திமுக ஆட்சியின்போது தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் இவர்.
திமுகவில் இருந்து விலகிய சமயத்தில் ஊடகங்களிடம் பேசிய துரைசாமி, "எம்.பி. பதவிக்காக வயது வித்தியாசம் பார்க்காமல் உதயநிதியை நேரில் சந்தித்துக் கெஞ்சினேன். அது தப்பு இல்லை. ஏனென்றால், கட்சி அவர்களுடையது," என்று கூறினார்.
மாநிலங்களவைத் தேர்தலில் தனக்கு வாய்ப்பளிக்கப்படும் என துரைசாமி எதிர்பார்த்த நிலையில், அந்தியூர் செல்வராஜுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனால் துரைசாமி அதிருப்தியில் இருந்தார் என்றும் கூறப்பட்டது.
பாஜகவில், துரைசாமியுடன், முன்னர் பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன், சக்கரவர்த்தி ஆகியோரும் மாநில துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன் மாநில பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சிப் பதவிகளுக்கான காலமான மூன்று ஆண்டுகளை பதவியில் இருந்தவர்கள் நிறைவு செய்துவிட்டதால் புதிய உறுப்பினரகள் பொறுப்பேற்றுள்ளதாக பாஜகவின் மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜகவின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக நடிகை நமிதா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












