You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கான்பூர் என்கவுன்ட்டர்: உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள்
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் குற்றப்பின்னணி உடைய நபரைக் கைது செய்ய முயன்றபோது எட்டு காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை விகாஷ் துபே எனும் நபரை கைது செய்ய முயன்றபோது இது நடந்துள்ளது.
60 குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றப்பின்னணி உடைய நபர் ஒருவரை கைது செய்யும் முயற்சியின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஒருவர் உள்பட எட்டு காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர்.
பல காவல் துறையினரும் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
மோதல் நடந்த இடத்தில் பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது அந்த கிராமத்தையே சுற்றி வளைத்துள்ள காவல்துறையினர் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். விகாஸ் துபே உடன் தொடர்பில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோரின் செல்பேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
என்ன நடந்தது - உத்தரப் பிரதேச காவல்துறை விளக்கம்
"சாபேபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திக்ரு எனும் கிராமத்தில் பல வழக்குகளில் தொடர்புடைய மோசமான குற்றவாளி ஒருவரை கைது செய்வதற்காக காவல்துறையினர் சென்றார்கள். ஜேசிபி எந்திரத்தை நிறுத்தி அவர்கள் தடுக்கப்பட்டனர். கட்டடங்களின் கூரை மீது இருந்த குற்றவாளிகள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்கள்," என்று உத்தரப்பிரதேச மாநில காவல் துறை இயக்குநர் ஹிதேஷ் சந்திர அவஸ்தி தெரிவித்துள்ளார்.
"அப்போது காவல்துறையினர் பலியாகினர். துணை காவல் கண்காணிப்பாளர் தேவேந்திர மிஸ்ரா இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். மூன்று உதவி ஆய்வாளர்களும் நான்கு காவலர்களும் இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளனர்."
"மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மண்டல காவல்துறை தலைவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி இன்று அந்த இடத்திற்கு செல்வார். கான்பூரில் உள்ள தடயவியல் நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக புலனாய்வு செய்ய சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது," என அவர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த காவல்துறையினர் கான்பூரில் உள்ள ரிஜன்ஸி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் தொடர்பாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிக்கை கேட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- சாத்தான்குளம் சம்பவம்: தலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு
- சாத்தான்குளம் சம்பவம்: "காவல்துறையை சேர்ந்த யாரும் எங்களிடம் பேசவில்லை"
- புதுக்கோட்டையில் ஏழு வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை
- சீனாவில் உய்குர் முஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாட்டை கடுமையாக்கும் அரசு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: