சென்னையில் ஒரே நாளில் 964 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,162 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 1,112 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இன்று கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள 1,162 பேரில் 964 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். ஆகவே சென்னையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 15,770ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,495ஆக உயர்ந்திருக்கிறது.

செங்கல்பட்டில் 48 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 9 பேருக்கும் சேலத்தில் 10 பேருக்கும் திருவள்ளூரில் 33 பேருக்கும் திருவண்ணாமலையில் பத்துப் பேருக்கும் நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நோயாளிகள் யாரும் இல்லாமல் இருந்த கோயம்புத்தூரில், வெளியூரிலிருந்து வந்தவர்கள் ஐந்து பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தைத் தவிர எல்லா மாவட்டங்களிலும் கொரோனா நோயாளிகள் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 413 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆகவே மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,170ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்கள் குணமடைந்தவர்கள் தவிர, தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக 10,138 பேர் உள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 11,377 சோதனைகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில், மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 5,03,339ஆக உயர்ந்துள்ளது. இன்று 11 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 184ஆக உயர்ந்திருக்கிறது.

உயிரிழந்த 11 பேரில் 8 பேர் 60 வயதைக் கடந்தவர்கள். 9 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள். பெரும்பாலானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதாரத்துறை அறிக்கை தெரிவிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: