பாகிஸ்தான் விமான விபத்து: குவிந்திருக்கும் சடலங்கள், டி.என்.ஏ சோதனை, கைகடிகாரம் - என்ன நடக்கிறது அங்கே?

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் விமானம் வெள்ளிக்கிழமையன்று கராச்சியில் விபத்துக்குள்ளானதில் இறந்தவர்களில் 66 பேரின் உடல் இப்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ளது.

மீதமுள்ள இறந்தவர்களின் சடலங்களை அடையாளம் காண கைரேகை மற்றும் டிஎன்ஏ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

தன் உறவினரின் சடலத்தை அடையாளம் காண கராச்சி வந்த சையத் இம்ரான், "சில சடலங்கள் கோரமாக எரிந்திருப்பதால் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளது" என பிபிசி செய்தியாளர் ரியாஸிடம் கூறியுள்ளார். அவருடைய உறவினரின் சடலத்தை கண்டறிய தன்னுடைய டிஎன் ஏவை கராச்சி பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். தற்போது அதனை உறுதிபடுத்துவதற்காக காத்திருக்கிறார்.

டிஎன்ஏ மாதிரி

இப்போது வரை 47 பயணிகளின் உறவினர்கள் சடலத்தை அடையாளம் காண தங்கள் டிஎன்ஏ மாதிரியை கொடுத்துள்ளனர் என்கிறார் சிந்துவின் சுகாதார அமைச்சர்.

பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் சரியாக இல்லாத காரணத்தால் தன்னுடைய உறவினரான சையத் அலியை கண்டுபிடிக்க நான்கு மருத்துவமனைகளுக்கு அலைய வேண்டி இருந்தது.

அந்த மருத்துவமனைகளில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பதால் கராச்சியில் உள்ள ஈதி அறக்கட்டளையின் பிணவறைக்கு வந்து பார்க்க வேண்டியதாயிற்று என்று கூறுகிறார் சையத் இம்ரான்.

கட்டைவிரல் மற்றும் கைரேகை

முதற்கட்டமாக கட்டைவிரல் மற்றும் கைரேகை மூலம் சடலங்களை அடையாளம் காண ஏற்பாடு செய்யப்படுகிறது. தேசிய தரவுத்தளம் மற்றும் பதிவேடு ஆணையத்தின் குழுக்கள் தற்போது இதற்காக கராச்சி வந்துள்ளதாக பிபிசி செய்தியாளர் ரியாஸ் கூறுகிறார்.

விமான விபத்தில் உயிரிழந்த தில்ஷாத் அஹ்மத் என்பவரின் உடலை அடையாளம் காணுவதில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என அவர் தம்பி கூறியுள்ளார். ஆனால் இறந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் கூடியிருந்ததால் உடலை வாங்குவதற்கு கடினமாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

தன் அண்ணனின் உடை மற்றும் கடிகாரத்தை வைத்துதான் உடலை கண்டறிந்ததாக அவர் கூறினார்.

”விமானத்தில் ஏறுவதற்கு முன் விமான நிலையத்திலிருந்து தன்னுடைய புகைப்படத்தை என் அண்ணன் அனுப்பினார். இதனால் அவர் என்ன உடை அணிந்திருந்தார் என்று எங்களுக்கு தெரிந்தது” என்று கூறினார்.

தில்ஷாத் அஹ்மத் தன்னுடைய தாய்க்கும் மனைவிக்கும் விமானம் ஏறும்முன் அழைத்துள்ளார்.

”விமான விபத்தை செய்தியில் பார்த்ததும் என் அண்ணன் சென்ற விமானம்தான் அது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். அதனால் உடனே அவரைப் பற்றிய தகவல்களை தேட தொடங்கினோம். அதன் பிறகு பயணிகளின் பட்டியலில் உறுதி செய்தோம்.”என்றார்.

ஜின்னா மருத்துவமனையில் உடலை அடையாளம்காட்டிய பின்பு தன் அண்ணனின் உடலை வாங்கியதாக தில்ஷாத்தின் சகோதரர் கூறினார்.

அடையாளம் காண முடியாத சடலங்களுக்கு உறவினர்களின் ரேகை மற்றும் டிஎன்ஏ மாதிரிகளை வாங்கி ஆய்வகத்திற்கு அனுப்புகிறோம். இந்த முறை முழுமையடைய சிறிது நேரமாகும் என நிர்வாகம் கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: