You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு: உங்கள் ஊரில் எதற்கெல்லாம் அனுமதி? - விரிவான தகவல்கள்
தமிழகத்தில் மே 31 வரை பொதுமுடக்கம் நீடிக்கப்பட்டுள்ளபோதும், கொரோனா தொற்று முழுமையாக குறைந்துள்ள 25 மாவட்டங்களில் உள்மாவட்டங்களில் பொது போக்குவரத்தை தொடங்குவது உள்ளிட்ட புதிய தளர்வுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
புதிய தளர்வுகளின் படி, நோய் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில், அந்தந்த மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் பாஸ் இல்லாமல் இயக்க தளர்வு அளிக்கப்படுகிறது. மாவட்டத்திற்குள் நோய் தொற்று பரவாமல் தடுக்க, பொது மக்கள் அனுமதிக்கப்பட்ட மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கும், மட்டும் சென்று வர போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல பாஸ் முறை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு மட்டும் புதிய தளர்வுகள் வழங்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது
புதிய தளர்வுகளின்படி, அரசுப்பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகபட்சமாக 20 நபர்களும், வேன்களில் 7 நபர்களும், இன்னோவா போன்ற பெரிய வகை கார்களில் 3 நபர்களும், சிறிய கார்களில் 2 நபர்களும் (வாகன ஓட்டுநர் தவிர) செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்களில் பாஸ் இல்லாமல் வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை அத்தியாவசிய பணிகளுக்காக, வேளாண்மை, வியாபாரம், மருத்துவம் போன்ற பணி நிமித்தமாக பயணம் செய்ய மட்டும் பயன்படுத்தலாம். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்வதை கண்டிப்பாக பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஏற்கனவே இருக்கும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லாமல் கட்டுப்பாடுகள் தொடரும்.
புதிய தளர்வுகளின்படி, தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில 25 மாவட்டங்களில் தற்போதுள்ள 50 சதவீத பணியாளர்களை 100 சதவீத பணியாளர்களாக உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தற்போதுள்ள தளர்வுபடி 50 நபர்களுக்கு குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீத பணியாளர்களும், 50 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவீத பணியாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் நிலையில், இதை மேலும் தளர்வு செய்து 100 நபர்களுக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில், 100 சதவீத பணியாளர்களும், 100 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில், 50 சதவீத பணியாளர்கள் அல்லது குறைந்தபட்சம் 100 பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடுப்பட்டிருக்கும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளுக்காக மட்டும் குறைந்தபட்சம் பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தாள்களை திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்களிக்கப்படுகிறது. தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெறுவது மட்டும் விலக்களிக்கப்படுகிறது. இதற்காக சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம், சென்னையில் மாநகர ஆணையளரிடமும் அனுமதி பெற வேண்டும்.
போக்குவரத்து அனுமதிக்கப்படாத 12 மாவட்டங்களில் பாஸ் பெற்று மருத்துவ சிகிச்சைக்கு ஆட்டோ, டாக்ஸி ஆகியவற்றை பயன்படுத்த விலக்களிக்கப்படுகிறது.
பொதுவாக தமிழகம் முழுவதும், ஏற்கனவே நடைமுறையில் சுகாதார கட்டுப்பாடுகளை பின்பற்றவேண்டும் என முதல்வர் அறிவித்துள்ளார். பின்வரும் செயல்பாடுகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள்.
- வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.
- பொதுமக்கள் அதிக அளவில் கூடும் திரையரங்குகள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் , உடற்பயிற்சி கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள் போன்ற இடங்கள்.
- அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.
- பொது மக்களுக்கான விமானம், இரயில், பேருந்து போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையிலான இரயில் போக்குவரத்து, சென்னை மாநகரத்திலிருந்து பிற பகுதிகளுக்கான இரயில் போக்குவரத்து ஆகியவற்றிற்கு அனுமதி கிடையாது. (மத்திய / மாநில அரசின் சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமானம், இரயில், பொதுப்பேருந்து போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும்.)
- டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா.
- மெட்ரோ இரயில்/ மின்சார இரயில்.
- தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் ரிசார்ட்டுகள்.
- இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
- திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறை தொடரும்.
- நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
- தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
- பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்குப்பட்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி தொடரும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: