பால்கர் சாதுக்கள் கொலை: கொள்ளைக்காரர்கள் என நினைத்து அடித்து கொல்லப்பட்ட துறவிகள் - மகாராஷ்டிரா சோகம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பல கிராமங்களில் மக்கள் தாங்களாக முன்வந்த தங்கள் கிராமங்களுக்குள் வெளி ஆட்கள் நுழையக்கூடாது என தடுப்புகளை அமைத்தும் வருகின்றனர்.

இந்த ஊரடங்கு காலத்தில் ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இரண்டு இந்து மத சாமியார்கள் உள்பட 3 பேரை திருடர்கள் என நினைத்து ஒரு கும்பல் அடித்தேகொன்றிருக்கிறது.

என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கன்டிவாலி பகுதியை சேர்ந்த இரண்டு துறவிகள் கடந்த வியாழக்கிழமை ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குஜராத் மாநிலம் சூரத்திற்கு வாடகை காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் பலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக வதந்தி பரவி வந்தது.

இந்த வதந்தி அப்பகுதியில் உள்ள் சில கிராமங்களிலும் பரவியவது. இதையத்து அந்த பகுதி கிராமத்தினர் சிலர் கும்பலாக சேர்ந்து கிராமத்தை சுற்றிலும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்து வந்தனர்.

இப்படியான நிலையில், இரண்டு சாமியார்களும் சென்ற கார் அந்த பகுதியை கடந்த போது அதை மறித்த அந்த கும்பல் அவர்களை திருடர்கள் என நினைத்து தாக்க முற்பட்டனர். உடனே போலீஸூக்கும் தகவல் தரப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் பயம் காரணமாக வீட்டில் பதுங்கி இருந்த கார் ஓட்டுநர் உட்பட 3 பேரை மீட்டு வெளியே கொண்டு வர முற்பட்டனர். ஆனால், அந்த கும்பல் தொடர்ந்து தாக்கியதில், 3 பேரும் பலியானார்கள்.

இந்த சம்பவமானது வியாழக்கிழமை நடந்தது.

இறந்த மூவரில் 70 மற்றும் 35 வயதான இரண்டு துறவிகள் மற்றும் 30 வயதில் இருந்த அவர்களின் ஓட்டுநர் ஆகியோர் அடக்கம்.

கைது

வியாழக்கிழமையன்று பாலகரில் மூன்று பேர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர் என மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என கூறியுள்ளார்.

முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதைக் குறித்து, "பாலகரில் நடந்த சம்பவத்தைப் பற்றிய விசாரணை நடந்து வருகிறது. சம்பவம் நடந்த அன்றே குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவமானத்திற்குரிய இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும்" என பதிவிடப்பட்டுள்ளது.

காவல்துறை கூறுவது என்ன?

இந்த சம்பவம் குறித்து, பாலகர் காவல்துறையினரும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பகுதியில், 110 பேரைக் கைது செய்துள்ளனர் எனவும் இவர்களில் 9 பேர் 18 வயதைத் தாண்டாதவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பாலகர் காவல் துறை, "பாலகர் கும்பல் கொலையில் ஈடுபட்ட 110 பேரில் 9 பேர் 18 வயதை தாண்டாதவர்கள். ஏப்ரல் 30 வரை இவர்களிடம் விசாரணை நடத்த காவல்துறை தன்னுடைய கட்டுப்பாட்டில் இவர்கள் அனைவரையும் வைத்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது" என பதிவு செய்திருந்தது.

உயர்மட்ட விசாரணை கேட்கும் பிஜேபி

இந்த சம்பவம் வியாழனன்று நடந்தது. ஆனால் இந்த சம்பவத்தின் காணொளி ஞாயிறன்று சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த காணொளியில் சம்பத்தின் போது ஒரு போலீஸ் அதிகாரி அந்த இடத்திலிருந்ததை போன்று உள்ளது.

இந்த காணொளி வெளிவந்த பிறகு மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் , இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அவர் கூறுகையில், "இதில் அவமானத்திற்குரிய விஷயம் என்னவென்றால் போலீஸ் முன்னிலையில் மக்கள் தாக்குகின்றனர். அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை இழுத்துத் தாக்குகின்றனர். மஹராஷ்டிராவில் சட்டம் சரியாக இல்லை" என்றார்.

ஜூனா அகாடே என்னும் அமைப்போடு தொடர்புடைய இரு துறவிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட வேண்டும் பிஜேபியின் இளைஞர் அணி கூறியுள்ளது.

ஜூனா அகாடேவின் செய்தித் தொடர்பாளர் நாராரண் கிரி, நாடு முழுவதும் 144 சட்டம் அமலில் இருக்கும்போது இத்தனை பேர் எப்படி ஒன்று கூடினர்? எனக் கேள்வி எழுப்பினார்.

பிஜேபியின் தேசிய செய்தி தொடர்பாளர், சம்பித் பாத்ரா இந்த காணொளியை ட்விட்டரில் பதிவிட்டு, " மகாராஷ்டிரா மாநிலம் பாலகரில் 2 சாதுக்கள் மற்றும் அவர்களுடைய ஓட்டுநர் கும்பலால் அடித்து கொல்லப்பட்டுள்ளனர். இது போர் போன்ற கலத்தை உருவாக்கியுள்ளது. இதுவரை அனைத்து லிபெரல்களும் அமைதியாக உள்ளனர். ஜனநாயகம் அல்லது அரசமைப்புக்கு யாரும் குரல் கொடுக்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் அலுவலகத்தில் ட்விட்டர் பதிவின் பிறகு சிவசேனாவின் இளைஞரணி தலைவர் ஆதித்யா தாக்கரே இது போன்ற ஒரு குற்றத்தை மகாராஷ்டிரா மாநிலம் பொறுத்துக் கொள்ளாது என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில் அவர், "பாலகர் சம்பவத்தில் முதல்வர் தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சொல்ல விரும்புவது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அன்றே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை நடந்து வருகிறது" எனப் பதிவிட்டு உள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: