கொரோனா வைரஸ்: நிவாரணம் வழங்க தனியாருக்கு அனுமதி - தி.மு.க. தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு

Mkstalin

பட மூலாதாரம், Mkstalin facebook page

நிவாரணப் பணிகளைத் தனியார் அமைப்புகள் வழங்கக்கூடாது என தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட உத்தரவை எதிர்த்து, தி.மு.க. தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்த நிலையில், தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவே நிவாரண உதவிகளைச் செய்யவேண்டுமெனக் கூறப்பட்டிருந்தது.

இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த தி.மு.க. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்தது. இந்த வழக்கு அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு நீதிபதிகள் சுப்பைய்யா, பொங்கியப்பன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில், தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணனும் தி.மு.க. தரப்பு வழக்கறிஞர் வில்சனும் முகக் கவசம் அணிந்து வாதாடினர்.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

ஒரு தன்னார்வலர் உணவோ, நிவாரணப் பொருட்களோ வழங்கினால் அங்கு பெருமளவில் மக்கள் கூடுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் அது ஆபத்தாக முடியுமென அரசுத் தரப்பின் சார்பில் வாதிடப்பட்டது. இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துத்தான் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதாகவும் எல்லா மக்களுக்கும் அரசால் நிவாரண உதவிகளை வழங்க முடியாது என்றும் இரண்டு நாட்களுக்கு முன்னதாக அனுமதி வாங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்துசெய்ய வேண்டுமென்றும் தி.மு.க. சார்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு, அரசுத் தரப்பில் நாளை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமெனக் கூறிய நீதிபதிகள் இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுமெனக் கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: