கொரோனா வைரஸ்: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 909 பேருக்கு கொரோனா தொற்று; 34 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 909 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 34 பேர் இறந்துள்ளதாகவும் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சம் தெரிவித்துள்ளது.

இதனால் இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,356ஆக உயர்ந்திருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று இந்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை அன்று கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோதி வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது ஊரடங்கு உத்தரவை நீட்டிக்குமாறு பல மாநில முதலமைச்சர்கள் பிரதமருக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து ட்வீட் செய்திருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் ஒப்புக் கொண்டதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், ஒடிஷா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்கள் ஊரடங்கை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளன.

கொரோனா தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 1,761 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படவேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோதியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

பிரதமர் மோதி வெளியிடவுள்ள அறிவிப்பை பொறுத்து தமிழக அரசு முடிவை அறிவிக்கும் என்று தமிழக தலைமை செயலர் சண்முகம் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: